பொன்மணி உதயகுமார்
இந்திய மரபுடைமை நிலையத்துடன் இணைந்து சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) ஏற்பாடு செய்த பொங்கல் வைக்கும் பயிலரங்கு நேற்று இந்திய மரபுடைமை நிலைய வளாகத்தில் நடைபெற்றது. பொங்கல் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமான இந்நிகழ்ச்சியில் ஏறக்குறைய 50 பேர் கலந்துகொண்டனர். பொங்கல் கொண்டாட்டங்களில் சமூகத்தின் இரு முக்கிய தரப்பினரான இளையர்களுக்கும் முதியவர்களுக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்த முதல் முறையாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
"மொழி, கலாசாரம், பண்பாடு போன்றவை நமது சமூகத்தில் வேரூன்றுவதற்கு முக்கிய தூண்களாக இருந்த மூத்தோர், இன்று வெவ்வேறு காரணங்களால் தங்களது முதுமை காலத்தில் தனியாக வசித்து வருகின்றனர்.
"பிறரைப் போல் இவர்களும் பொங்கலை விழாவாகக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்திலும் இளையர்களிடம் பொங்கல் குறித்த புரிதலை விரிவுபடுத்தும் நோக்கத்திலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது," என்று சிண்டாவின் தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன் கூறினார்.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமிழ் பண்பாடு, மரபு போன்றவற்றை வளர்க்க இந்திய மரபுடைமை நிலையத்துக்கு நல்ல வாய்ப்பாய் அமைவதாக இந்திய மரபுடைமை நிலையத்தின் பொது மேலாளர் மரியா பவானி தாஸ் குறிப்பிட்டார்.
வீட்டில் எளிமையான பொங்கலுக்குப் பழகிப் போயிருந்த அ. பர்வதா தாரணி, 19, கூட்டாகப் பொங்கல் வைத்துக் கொண்டாடியது புதிய அனுபவமாக இருந்தது என்றார். மூத்தோரின் சுறுசுறுப்பைப் பார்த்தவுடன் அவர் களிடம் பலவற்றைக் கேட்டறிந்து அவர்களின் சுறுசுறுப்பைத் தாமும் அடையவேண்டும் என்ற ஆவல் பிறந்ததாக அவர் பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருந்ததாகக் கூறினார் இளையர் தஸ்வின் விஜய்குமார், 23, இதுபோல தொடர்ந்து சமூகத்துடன் இணைந்து கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளப் போவதாகவும் அவர் சொன்னார்.
தைத் திருநாளின் முக்கியத்துவம் பற்றி இளையருக்கு எடுத்துரைக்க நிகழ்ச்சி நல்ல வாய்ப்பாக அமைந்தது என்றார் தேவி இந்திரா பாபு, 68. முன்பு வெளியில் விறகு கொண்டு பொங்கல் வைத்த நினைவுகளை இளையர்களுடன் அவர் பகிர்ந்துகொண்டார். இளையர்கள் ஆர்வத்துடன் மூத்தோரிடம் பல கேள்விகள் கேட்டதும் அவர்களுடன் இணைந்து உற்சாகமாக பொங்கல் கொண்டாடியதும் மகிழ்ச்சி தந்ததாக திருவாட்டி தேவி இந்திரா சொன்னார்.
நேற்று நடைபெற்ற மதிய உணவு உபசரிப்பில் இளையர்களும் மூத்தோரும் உரையாடி உணவு உண்டு மகிழ்ந்தனர். அந்நிகழ்வின் நினைவுகள் இளையர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்று நம்புவதாக திரு அன்பரசு தெரிவித்தார்.


