மோனலிசா
"பார்த்த தருணத்திலேயே இவள் தான் என்னவள் என்று தோன்றியது. அக்காலத்தில் நாங்கள் காதலையும் திருமணத்தையும் வெவ்வேறாக கருதியது இல்லை. வாழ்க்கைப் பயணத்தில் இணைவதற்கான நுழைவுச்சீட்டாகக் காதலைப் பார்த்தோம்," என்று கூறியபடி இனிமையான நினைவுகளில் மூழ்கினார் ஆர். நாதன்.
ஓய்வுபெற்ற மேஜரான திரு நாதன், தேசிய சேவையை முடித்து பணியில் சேர்ந்த காலம் அது. இவர் வசித்த அதே பகுதிக்குக் குடிவந்தார் கிருஷ்ணம்மா ராமச்சந்திரன் என்ற இளம்பெண். முதல் சந்திப்பிலேயே காதல் வயப்பட்ட நாதன், துணிச்சலுடன் கிருஷ்ணம்மாவிடமும் குடும்பத்தினரிடமும் தம் விருப்பத்தைத் தெரிவித்தார்.
திரு நாதன், பத்து பிள்ளை களுள் நான்காவது பிள்ளை, மகன்களில் மூத்தவர். அதனால் இளம் வயதிலேயே பெற்றோருக்கு உதவியாகக் குடும்பப் பொறுப்பை ஏற்றிருந்தார்.
தமக்கும் தம் குடும்பத்தினருக்கும் நாதன் மீது நல்ல எண்ணமும் மரியாதையும் இருந்தபோதும், ஆறு மாதத்துக்குப் பின்னரே தமது சம்மதத்தைத் தெரிவித்தார் கிருஷ்ணம்மா. இரு குடும்பங்களின் ஆசியுடன் 1972ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி இருவரும் திருமண உறவில் இணைந்தனர்.
காதல் சுவைகூடிய தங்கள் ஐம்பதாண்டு திருமண பந்தத்தின் அச்சாணியே புரிதலும் சகிப்புத்தன்மையும்தான் என்று கூறினர் பொன்விழா கண்ட இத்தம்பதியர்.
தற்போது 72 வயதாகும் இவர்கள், அண்மையில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற திருமண பொன்விழா கொண்டாட்ட நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்டனர்.
திருமணமாகி பத்து ஆண்டு களாக அவர்கள் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தனர். தம்மைவிட தம் பெற்றோர் மீதும் சகோதர சகோதரிகள் மீதும் கிருஷ்ணம்மா அதிக அன்புடனும் பாசத்துடனும் இருந்ததை நினைவுகூர்ந்தார் நாதன். பெரிய குடும்பம், பொறுப்புகள், பொருளாதார நெருக்கடி எனப் பல்வேறு இக்கட்டுகளுக்கு இடையேயும் தனியே இருந்திட அதிகம் நேரம் கிடைக்காத சூழலிலும் குறை களைப் பாராமல் நிறைகளை மெச்சி மகிழ்வுடன் வாழ்ந்தனர்.
பணிநிமித்தமாக நாதன் அடிக்கடி மாதக்கணக்கில் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தபோதும் தனியாளாக குடும்பத்தைக் கவனித்துக்கொண்டார் கிருஷ்ணம்மா.
"எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவர் மனம் என்னையும் எங்கள் இரு பிள்ளைகளையும் தான் நினைத்துக்கொண்டிருந்தது," என்ற கிருஷ்ணம்மா, தம் கணவரின் தோளில் பாசத்துடன் சாய்ந்துகொண்டார்.
ஒருமுறை நாதன் வெளிநாடு சென்றிருந்தபோது கிருஷ்ணம்மாவின் தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்செயலாக தொலைபேசியில் அழைத்த நாதனிடம் வாய்த்தவறி கிருஷ்ணம்மா நடந்தவற்றைக் கூற, உடனே அடுத்த விமானத்தைப் பிடித்து சிங்கப்பூர் வந்து மருத்துவமனைக்கு விரைந்தார் நாதன்.
தம் குரலை வைத்தே மன ஓட்டத்தைப் புரிந்துகொண்ட அவரின் செயல்பாடு தம்மை நெகிழ வைத்ததாக குறிப்பிட்ட கிருஷ்ணம்மா, "காதல் என்பது சொற்களால் வருணிக்கப்படுவதோ அன்பளிப்புகள் வாங்கித் தருவதோ மட்டும் அல்ல. அன்றாட செயல்களில் வெளிப்படும் புரிதல், பொறுப்புணர்வு, பாதுகாப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் கூட்டாகும்," என்றார்.
இளம் தம்பதியினர் சிலர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதைத் தோல்வியாகக் கருது வதையும் ஆரோக்கியமற்ற போட்டியில் திருமண வாழ்வை அணுகு வதைவும் தாங்கள் கவனித்துள்ளதாக வருத்தத்துடன் கூறினர் இத்தம்பதியினர். இதுவே பெரும்பாலான மணவிலக்குகளுக்குக் காரணம் என்றும் அவர்கள் கூறினர்.
திருமணமான புதிதில் எத்தகைய சூழலிலும் 'விவாகரத்து' என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என எடுத்துக்கொண்ட உறுதி இன்றுவரை அவர்கள் இருவரிடமும் உள்ளது.
"நம்மை மனதார நேசிக்கும் வாழ்க்கைத் துணையை நம்மால் நிச்சயம் காயப்படுத்த முடியாது, அப்படி இருக்கும்போது அவருடன் ஏன் சண்டை வரவேண்டும்?
"இரு வேறு மனிதர்கள் ஒரே கூரையின்கீழ் வாழும்போது நிச்சயம் கருத்துவேறுபாடுகள் நிலவும். ஆனால் அது நிரந்தர மனக்கசப்பாக மாறுகிறது என்றால் அங்கே உண்மையான நேசம் மறைகிறது என்றே பொருள்," என்றார் திருவாட்டி கிருஷ்ணம்மா.
குடும்பப் பொறுப்புகளையும் கடமைகளையும் முடித்து ஓய்வு பெற்ற பின்னர்தான், முதல்முறையாக இருவரும் நண்பர்களுடன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டனர். இன்று தங்களுடைய மகள், மருமகன், பேத்தி, பேரன் என ஆனந்தமாக வாழ்ந்துவரும் இவர்களுக்குப் பேரப்பிள்ளைகளே உயிர்நாடி.
அன்பை மையப்படுத்திய வாழ்க்கை என்றென்றும் இனிமையானது என்று 50 ஆண்டு களுக்கும் மேலாக வாழ்ந்து காட்டிய இந்தத் தம்பதியர் உற்சாகமாய் தங்களின் காதல் பயணத்தைத் தொடர்கின்றனர்.

