திரு இ.ஜே. ஃபிலிப் ஜோஷுவாவிற்கு (படம்) வயது 42. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் மூச்சுத் திணறலுடன் கண்விழித்த இவர், உடலில் அதிகளவு கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், மிதமான நீரிழிவு நோய், மிதமான மனச்சோர்வு ஆகிய பாதிப்புகள் இருப்பதை மருத்துவப் பரிசோதனையில் தெரிந்துகொண்டார். அப்போது இவரது உடல் எடை 90 கிலோகிராமுக்குமேல் இருந்தது.
சிறுவயதில் கட்டுக்கோப்பாக உடலை வைத்திருந்த இவர், தேசிய சேவையின்போது மின்னற்படை வீரராகச் சேவையாற்றியவர். ஆனால் 20 வயதுக்குப் பின்னர் இவரது உடல்நிலை வலுவிழக்கத் தொடங்கியது. அவ்வயதில், இரவுநேரக் கேளிக்கைத் துறையில் ஊழியராகச் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து மதுக்கூட உரிமையாளரானார் ஜோஷுவா.
அதிகளவு மதுபானம் அருந்துதல், மனஉளைச்சல், தூக்கமின்மை, உணவுக் கட்டுப்பாடின்மை முதலிய பழக்கங்கள் இவரது உடல்நலனையும் மனநலனையும் பெரிதும் பாதித்தன.
"இன்னும் இரண்டு ஆண்டுகளில் என் உடல்நலம் வெகுவாக மோசமடையும் என அன்று மருத்துவர் கூறியது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த நேரத்தில் என் வாழ்க்கையை உடனடியாக மாற்ற வேண்டும் என்று எண்ணினேன்," என்று மருத்துவரைப் பார்த்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார் ஜோஷுவா.
எனவே, உடலுறுதிப் பயணத்தைத் தொடங்கினார். இவரது பயணம் மேடுபள்ளங்கள் நிறைந்ததாக இருந்தது.
முதலில், உடல் எடையை விரைவாகக் குறைக்க உறுதி அளிக்கும் பல்வேறு வழிமுறைகளை முயற்சி செய்து களைத்துப் போனார். மாத்திரைகள், உணவுமுறை மாற்றங்கள் எனப் பலவற்றையும் ஓரிரு மாதங்கள் முயன்று பார்த்த இவர், இழந்த உடல் எடை மீண்டும் அதிகரிப்பதை உணர்ந்து விரக்தியடைந்தார்.
ஆரோக்கியம் பேணுவதில் குறுக்குவழிகள் எதுவும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் முதலில் இருந்து தொடங்க எண்ணி, உடற்பயிற்சிக்கூடத்துக்குச் செல்லத் தொடங்கினார்.
"களைப்பாகவும் சிரமமாகவும் இருந்தாலும்கூட உடற்பயிற்சி முடித்த பின்னர் கிட்டும் மனத்தெளிவு ஊக்கமளித்தது. காலப்போக்கில், உடல் எடையைக் குறைப்பது என் நோக்கமாக இல்லை. உடற்பயிற்சியை வாழ்க்கைமுறையாகக் கொண்டு அதை வழக்கமாக்கிக்கொள்வதே என் இலக்கானது," என்கிறார் ஜோஷுவா.
"2020ல் மீண்டும் மருத்துவரிடம் சென்றபோது அனைத்தும் சீராக இருப்பதாகக் கூறி அவரே வியந்தது எனக்கு மனநிறைவு அளித்தது," என்கிறார் இவர்.
தற்போது இவரது உடல் எடை 71 கிலோகிராம்.
தாம் உணர்ந்தவற்றைப் பகிர்ந்துகொள்ளவும் தனிப்பட்ட உடற்பயிற்சி சேவையை வழங்கவும் எண்ணி, உடற்பயிற்சிப் பயிற்றுவிப்பாளர் படிப்பை மேற்கொண்டு 'ஆல்ஃபா பீஸ்ட் ஃபிட்னஸ்' எனும் உடற்பயிற்சிக்கூடத்தை 2021ல் நிறுவினார் ஜோஷுவா. 16 வயது முதல் 65 வயது வரையிலானோர் 'ஆல்ஃபா பீஸ்ட்' உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். தற்காப்புக் கலைகள், குத்துச்சண்டை முதலியவற்றைஒருங்கிணைக்கும் உடற்பயிற்சித் திட்டங்களை 'ஆல்ஃபா பீஸ்ட்' வழங்கி வருகிறது.
ஆரம்பநிலை, நடுநிலை, மேம்பட்ட நிலை என மூன்று நிலைகளில் ஒன்று முதல் மூன்று மாதம் வரை நீடிக்கும் உடற்பயிற்சித் திட்டங்களை ஜோஷுவாவும் அவருடன் பணிபுரியும் ஆறு பயிற்றுவிப்பாளர்களும் வகுத்துள்ளனர்.
"உடல் ஆரோக்கியப் பயணம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட அனுபவமாக இருக்கும். சமூக வாழ்க்கை பாதிக்கப்படுவது போலத் தோன்றலாம். ஆனால், இந்தச் சிறு தியாகங்கள் பெரிய பலன்களை ஈட்டித் தரும்," என்று கூறினார் ஜோஷுவா.
இவரைக் கேலி செய்த இரவுநேரக் கேளிக்கைத் துறை நண்பர்களே அவரவர்க்கு ஏற்பட்ட மருத்துவச் சிக்கல்களுக்குப் பின்னர் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து தனது பாதையில் இணைந்துகொண்டதாகவும் இவர் குறிப்பிட்டார்.

