ஆ. விஷ்ணு வர்தினி
வாழ்வின் இன்பதுன்பங்களை நாம் ஒரே குடும்பமாகக் கடந்துவருவது வழக்கம். ஆனால் திருவாட்டி லீலா கோர், கடந்த 25 ஆண்டுகளாக அவரின் குடும்பப் பணியாளராக இருந்துவரும் திருவாட்டி ஆனந்தியுடன் பல இழப்புகளைச் சந்தித்து வந்துள்ளார். ஒருவருக்கு ஒருவர் தோள்கொடுத்து ஒரே குடும்பமாக அவர்கள் பழகிவருகின்றனர்.
நான்காவது முறையாகச் செயற்கைக் கருத்தரிப்பு செய்ததன் மூலம் திருமதி லீலாவின் இரண்டாவது குழந்தை பிறந்தது. குழந்தையைத் திருவாட்டி ஆனந்தி பராமரித்து வந்தார். ஆனால் ஆறு மாதத்தில் எதிர்பாராத விதமாக குழந்தை இறந்ததை அடுத்து மீளாத் துயரில் அக்குடும்பம் ஆழ்ந்தது. அந்நேரத்தில் திருவாட்டி லீலாவுக்கும் பள்ளியில் கவனம் செலுத்த முடியாமல் தவித்த அவரின் ஒரே மகள் கெல்லிக்கும் பக்கபலமாக இருந்தார் திருவாட்டி ஆனந்தி.
இவ்வாறிருக்க 2020ல் சாலை விபத்தொன்றில் இடது தோள் எலும்பில் பிரச்சினை ஏற்பட்டதால் திருவாட்டி ஆனந்தி மூன்று மாதங்களுக்கு முடங்கிப் போனார். ஏறக்குறைய இரண்டாயிரம் வெள்ளியிலான அவரது மருத்துவச் செலவுகளைத் திருவாட்டி லீலா ஏற்றுக்கொண்டதுடன் அவரை வீட்டில் வைத்துப் பரமாரித்தும் வந்தார்.
திருவாட்டி ஆனந்தியின் குடும்ப விவகாரங்களில் தோழியாகக் கைகொடுத்துள்ள திருவாட்டி லீலாவை, வேலைவாய்ப்பு நிறுவனங்கள் சங்கத்தின் சிறந்த முதலாளி விருதுக்காக அவர் நியமனம் செய்திருந்தார். இம்மாதம் 1ஆம் தேதியன்று நடந்தேறிய விருதளிப்பு நிகழ்வில் மூன்றாவது நிலையில் திருவாட்டி லீலா அங்கீரிக்கப்பட்டார்.
திருவாட்டி லீலாவின் நான்கறை வீவக வீட்டில் திருவாட்டி லீலா, அவரின் கணவர், கணவரின் மனநலம் பாதிக்கப்பட்ட தங்கை, அவர்களின் நாய்க்குட்டி ஆகியோரைத் தினமும் பரமாரித்து வருகிறார் திருவாட்டி ஆனந்தி. இவர் 27 வயதாக இருந்தபோது வீட்டு வேலைகள் பற்றி அதிகம் அறிந்திராத நிலையில் திருவாட்டி லீலாவின் வீட்டுக்கு வந்தார்.
"இஸ்திரி பெட்டியைப் பயன்படுத்தியபோது பலமுறை துணிகளை நான் தவறுதலாகப் பொசுக்கியதுண்டு. எனக்கு இந்திய சமையலும் தெரியாது. திருவாட்டி லீலாவும் அவரின் அம்மாவும் பொறுமையாக எனக்கு வழிகாட்டினர்," என்றார் திருவாட்டி ஆனந்தி, 52.
இன்று சீன, மலாய், உணவு வகைகளையும் பதார்த்தங்களையும் சமைப்பது அவருக்கு அத்துபடி. அவருக்கு ஆங்கில மொழியுடன் கணினிப் பயன்பாட்டையும் கற்பித்தார் கெல்லி கோர்.
"இப்போது ஆங்கிலச் செய்தித்தாள்களைக்கூட அவர் வாசிக்கிறார். சொந்தக் காலில் நிற்கிறார்," என்று கூறிப் புன்னகைத்தார் திருவாட்டி லீலா.
திருவாட்டி லீலாவின் தாயார் திருவாட்டி கமலாஷி, 2010ல் மறைந்துவிட்டார். அதுவரை அவர் பல பணியாளர்களை வீட்டுக்கு அழைத்து விருந்துபசரிப்பதுண்டு. இவ்வழக்கத்தை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தொடர்கிறார் திருவாட்டி லீலா. லீலா-ஆனந்தி இருவரும் கொண்டுள்ள நல்லுறவைக் கண்டு வீட்டுக்கு வருவோர் வியப்பதுண்டு.
இத்தகைய அழகான குடும்பச் சூழல், திருவாட்டி லிண்டா பிரேமின் வீட்டிலும் நிலவுகிறது. கடந்த பத்தாண்டுகளாக திருவாட்டி லிண்டாவின் இல்லப் பணியாளராக இருந்து வருகிறார், 47 வயது திருவாட்டி ஐயப்பன் கலாவதி. இவர், சிறந்த வெளிநாட்டு பணியாளருக்கான பாராட்டு விருதைப் பெற்றார்.
ஆறு மாதக் குழந்தையாக இருந்த திருவாட்டி லிண்டாவின் ஒரே மகனைப் பராமரிப்பதற்காக முதன்முதலில் வேலையில் சேர்ந்தார் திருவாட்டி கலா. பொருளாதாரச் சூழல் காரணமாக இரு இளம்வயது மகள்களை விட்டு சிங்கப்பூர் வந்த அவர், இங்கும் ஒரு குடும்பம் தமக்குக் கிடைத்ததாகக் கூறினார்.
திருவாட்டி லிண்டாவின் கணவருக்கு உள்ள மருத்துவச் சிக்கல்களைச் சமாளிப்பதற்கு திருவாட்டி கலா உதவினார். மகனின் வளரும் பருவத்தில் தமது பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலைப் படிப்புகளை மேற்கொண்ட திருவாட்டி லிண்டா, வீட்டில் செலவிட்ட நேரம் குறைவு. அச்சமயங்களில் தம் மகனின் பராமரிப்பில் கண்ணும் கருத்துமாக திருவாட்டி கலா இருந்ததை நினைவுகூர்ந்தார் திருவாட்டி லிண்டா.
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் சிறுநீரகக் கோளாறால் கணவர் உயிரிழந்த பின்னர் இரு மகள்களுக்கும் சிங்கப்பூரில் இருந்தவாறே திருமண ஏற்பாடுகளைச் செய்தார் திருவாட்டி கலா.
"அவரது தாய்மைப் பயணத்தில் சிக்கல்கள் ஏராளம். இரு மகள்களைத் தனியே விட்டு வந்த அவர், எப்போதுமே மனதைத் திடப்படுத்திக் கொண்டு செயல்படும் விதம் எனக்கு ஒரு படிப்பினை," என்றார் திருவாட்டி கலா.

