மோனலிசா
தனிமையில் வாழும் மூத்தோர் பலருக்கு தாதிமைச் சேவைக்கும் அப்பால் அவர்களின் மனநிலையில் அக்கறை செலுத்துவது மிகுந்த மனநிறைவு அளிப்பதாகக் கூறுகிறார் 47 வயதாகும் தாதி ரேணுகா நாகலிங்கம்.
வெளியில் அழைத்துச் செல்வது, ஆரோக்கியமான முறையில் பொழுதுபோக்கும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவது போன்ற செயல்பாடுகளை அவர் குறிப்பிட்டார்.
கடந்த 27 ஆண்டுகளுக்கு மேல் இத்துறையில் பணிபுரியும் இவர் இல்லத் தாதிமை அறநிறுவனத்தில் முழுநேரத் தாதியாகத் தொண்டாற்றி வருகிறார்.
பெற்றோருக்கு ஒரே மகளான ரேணுகா, தாயாரின் விருப்பத்திற்கேற்ப தாதிமைத் துறையில் பட்டயப் படிப்பை முடித்தவுடன் 1996ஆம் ஆண்டு தாதியாகப் பணியில் சேர்ந்தார்.
பணிக்காலத்தின் முதல் 13 ஆண்டுகள் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் தாதியாகப் பணியாற்றினார் ரேணுகா. பிறகு 2009ஆம் ஆண்டில் இல்லத் தாதிமை அறநிறுவனத்தில் இணைந்தார்.
"மருத்துவமனை வார்டுகளில் பணியாற்றியபோது நோயாளிகள் மருத்துவமனையில் இருக்கும் வரைதான் அவர்களைக் கவனிக்க இயலும். அதன் பின்னர் அவர்களுடைய நிலையைப் பற்றி பெரும்பாலும் தெரிந்துகொள்ள இயலாது.
"ஆனால் தற்போது அடிக்கடி அவர்கள் வீட்டிற்கே சென்று, தொடர்ந்து பராமரிப்பது நோயாளிகளைப் பாதியில் விட்டுவிடவில்லை என்ற மனநிறைவை அளிக்கிறது," என்று கூறினார் ரேணுகா.
தொடக்கத்தில் தாதியாக இந்நிறுவனத்தில் இணைந்த அவர் தாதிமைப் பராமரிப்பு ஒருங்கிணைப்பாளராக மூன்றாண்டுகளுக்கு முன்னர் பதவி உயர்வு பெற்றார். 12 தாதியருக்குப் பொறுப்பாளராக இருக்கும் அவர், அன்றாடம் ஐந்து முதல் ஆறு நோயாளிகளை அவர்கள் வீட்டிற்குச் சென்று பராமரிக்கிறார்.
நோயாளிகள் தன் வருகைக்காகக் காத்திருந்து தன்னை வரவேற்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறினார். ஒருமுறை சிறுநீர்ப்பாதைத் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு சேவையளித்தார் ரேணுகா.
தொடக்கத்தில் மிகுந்த உடல் உபாதைகளால் அவதியுற்ற அம்மூதாட்டி சில மாதங்களிலேயே உடல்நலம் தேறினார். அவருடைய குடும்பமே இதனால் நிம்மதியடைந்தது. ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கச் செல்லும்போதும் குடும்பத்தினர் உணவு தயாரித்துத் தருவார்கள் என்றார் ரேணுகா.
சில நேரங்களில் முதுமை காரணமாகவோ நோயின் வீரியம் அதிகரிப்பதாலோ நோயாளிகள் இறந்துவிடுவர். அதன் பிறகு அவர்கள் தங்கியிருந்த அதே புளோக்கில் வேறு நோயாளியைச் சந்திக்கச் செல்ல நேரிட்டால், இறந்தவரின் நினைவுகள் நிழலாடும் என்று அவர் குறிப்பிட்டார்.
"என் இறுதி மூச்சு வரை தாதிமைத் துறையிலேயே பணியாற்ற விரும்புகிறேன். உடல்நிலை நன்றாக இருந்தால் மட்டுமே வாழ்வைக் கொண்டாட முடியும். அதற்கு உதவுவது என்னுடைய பணியாக அமைந்ததை வரமாகவே கருதுகிறேன்" என்றார் ரேணுகா.
கணவர், இரண்டு மகன்கள் என குடும்பப் பொறுப்பு இருந்தாலும், சரியான திட்டமிடல் மூலம் பணியையும் குடும்பத்தையும் சிறப்பாகக் கவனித்து வருகிறார் இவர்.
தரமான சேவைக்கான விருதை 2019ஆம் ஆண்டு பெற்ற ரேணுகா, கிருமிப் பரவல் காலகட்டத்தில் சேவையாற்றியதற்கான 'கொவிட்-19 ஹெல்த்கேர் ஹீரோ' விருதையும் பெற்றுள்ளார்.

