கருணாநிதி துர்கா
சண்முக சுந்தரம் ஸ்ரீஜன் (படம்), 16, தனது பள்ளிப் பருவம் முழுவதும் சீன மொழியைத் தாய்மொழிப் பாடமாக எடுத்துப் படித்தார். சீன மொழிமீது கொண்ட ஆர்வத்தால் இவர் தற்போது சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்சின் சீன ஊடகக் குழும மாணவர் செய்தித்தாளான 'ஸிபிகமா'வில் பணியாற்றுகிறார்.
"நீண்டநாளாக ஸ்ரீஜனுக்குப் பேச்சு வரவில்லை. அவன் முதலில் பேசியது சீன மொழியில்தான்," என்கிறார் தாயார் சிவசாமி கயல்விழி.
பாலர் பள்ளி ஒன்றாம் வகுப்பில் பயிலும்போது ஸ்ரீஜன் ஆசிரியருடன் சீன மொழியில் உரையாடத் தொடங்கினார். எளிதாகப் பேச முடிந்ததால் தொடக்கப்பள்ளியில் சீன மொழியைத் தாய்மொழிப் பாடமாகப் பயில முடிவெடுத்தார்.
"தொடக்கநிலை நான்கு வரை சீன மொழியில் நன்றாகத் தேர்ச்சி பெற்றேன். தொடக்கநிலை ஐந்தில்தான் இம்மொழியைக் கற்பதில் உள்ள சிரமங்களைப் புரிந்துகொண்டேன்," என்கிறார் ஸ்ரீஜன்.
வீட்டில் தாயாருடன் தமிழிலும் குடும்பத்தில் மற்றவர்களுடன் ஆங்கிலத்திலும் உரையாடுவதால் இவர் சீன மொழியைப் பயன்படுத்துவது குறைவு. சீன மொழியைத் தாய்மொழிப் பாடமாக எடுத்த முடிவு தவறானதோ என்ற உணர்வு ஏற்பட்டதாக ஸ்ரீஜனும் அவரது தாயாரும் கூறினர்.
இருப்பினும், ஆசிரியர்களின் அறிவுரைப்படி சீன செய்தித்தாள்களை வாசித்து, சீனத் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து சீன மொழியறிவை சிறிதுசிறிதாக வளர்த்துக்கொண்டார் ஸ்ரீஜன்.
தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் சீன மொழியில் 'ஏ' தரநிலையுடனும் 'ஜிசிஇ' சாதாரண நிலைத் தேர்வில் 'ஏ2' தரநிலையுடனும் தேர்ச்சி பெற்றார்.
"எதிர்காலத்தில் சீன மொழி சார்ந்த வேலையைச் செய்ய விரும்புகிறேன். சீன மொழி ஆசிரியராக அல்லது பத்திரிகையாளராக வேண்டும் என்பது என் கனவு," என்று கூறும் இவரது தம்பி ஸ்ரீஜெய்யும் சீன மொழியைத் தாய்மொழிப் பாடமாகப் பயில்கிறார்.
ஸ்ரீஜனால் ஆங்கிலம், தமிழ், மாண்டரின் என மூன்றிலும் பேச முடியும். சமூக மன்றங்களில் நடைபெறும் இந்திய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிற இனத்தவர்களுக்கு இந்தியப் பண்டிகைகள், கலாசாரம் ஆகியவை பற்றி எடுத்துரைப்பது இவரது வழக்கம்.

