பலரும் விரும்பிக் குடிக்கும் பானமாக விளங்குகிறது 'பபுள் டீ'. தைவானில் அறிமுகம்கண்ட இது, சிங்கப்பூரில் பல இடங்களில் விற்பனையாகிறது.
கத்தார் தலைநகர் தோஹாவில் 'பபுள் டீ' வர்த்தகம் தொடங்கிய சிங்கப்பூரர்களான பார்த்திபன்-பாரதி தம்பதி, இப்போது குடும்பத்தினர் ஆதரவுடன் ஜூரோங்கில் கிளை தொடங்கிஉள்ளனர்.
இவர்களின் 'டீசோஷியல் கஃபே' உணவகத்தில் 'பபுள் டீ' மட்டுமன்றி தைவான் இனிப்புவகைகளும் கிடைக்கின்றன.
கத்தாரில் 2017ஆம் ஆண்டு குடியேறிய பார்த்திபன் கருணா நிதி, கத்தார் ஏர்வேஸ் விமானியாகப் பணிபுரிந்து வந்தார்.
கொவிட்-19 சூழலில் விமானப் போக்குவரத்துத் துறை முடங்கியபோது, வேலைப் பாதுகாப்பு குறித்து ஆலோசித்த அவர், மனைவியுடன் சேர்ந்து உணவகத்தைத் தொடங்கினார்.
"அப்பாவும் தம்பி ஜீவனும் சுயதொழிலில் ஈடுபட்டிருந்தனர். வேலை குறித்த கவலையில் நான் இருந்தபோது தொழில் தொடங்க அறிவுறுத்தினர். சொந்தமாக உணவகம் திறப்பது எனது நீண்டநாள் ஆசை. நோய்ப்பரவல் காலத்தில் அது கைகூடியது," என்றார் தற்போது ஸ்கூட் விமானியாக உள்ள 37 வயது பார்த்திபன்.
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டக்கூடியது 'பபுள் டீ' வர்த்தகம் எனக் கூறிய பார்த்திபன், "தைவானிய விநியோகஸ்தர் ஒருவருடன் தொடர்புகொண்டு 'பபுள் டீ' தயாரிக்க நானும் என் மனைவியும் முறையான பயிற்சி மேற்கொண்டோம். பிறகே கடையைத் தொடங்கினோம்," என்றார்.
நோய்ப்பரவலால் எல்லைகள் மூடப்பட்ட சூழலில், சிங்கப்பூரில் பாரதியின் பாட்டி காலமாகிவிட்டார். அவரது இறுதிச்சடங்கில் நேரடியாகக் கலந்துகொள்ளாதது இருவரையும் பாதித்தது.
"தாயகத்தில் வசிக்கும் குடும்பத்தைப் பிரிந்து எவ்வளவுதான் சம்பாதித்தாலும் மனநிறைவு கிடைப்பதில்லை. எனவே சென்ற ஆண்டு நிரந்தரமாக சிங்கப்பூர் திரும்பினோம்," என்றார் பாரதி.
இல்லப் புதுப்பிப்புத் துறையில் பணிபுரியும் பார்த்திபனின் தம்பி ஜீவன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் சிங்கப்பூரில் 'டீசோஷியல் கஃபே' உணவகத்தைத் தொடங்கினர்.
தொழிலுக்குத் துணைபுரிய, குடும்ப உறுப்பினர்கள் சிலர் உணவு சுகாதாரப் பயிற்சி மேற்கொண்டு சான்றிதழ் பெற்றனர்.
ஆனால் சிரமங்கள் இருக்கவே செய்தன. சிங்கப்பூரின் சூழல் தோஹாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை உணர்ந்தனர்.
சிங்கப்பூரர்கள் ஆரோக்கியத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இனிப்பு குறைவாக இருப்பதையே பலரும் விரும்புகின்றனர். சிங்கப்பூரின் உணவு, பானத் துறை ஊழியர்கள் தோஹாவில் இருந்தோரைவிட இளையவர்கள். இவற்றைச் சமாளிப்பதில் பார்த்திபனும் பாரதியும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர்.
சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள் சிலர் குறிப்பிட்ட கலவையிலான தேநீர் வகைகளைக் கேட்பதுண்டு. அதற்கேற்ப தங்களது உணவுப் பட்டியலை மாற்றியதாகஅவர்கள் தெரிவித்தனர்.
தோஹாவிலுள்ள கடையை இங்கிருந்தே கவனித்து வரும் பார்த்திபனுக்கும் பாரதிக்கும் சிங்கப்பூரில் மேலும் ஒரு கிளையைத் திறக்கும் எண்ணமும் உண்டு.
செய்தி, படம்:
ஆ. விஷ்ணு வர்தினி

