மோனலிசா
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு 239 பேருடன் காணாமற்போன எம்எச்370 மலேசிய விமானத்தின் தேடுதல் வேட்டைக்கு இன்றுவரை விடை கிட்டவில்லை.
“இப்படி ஒரு துயரச்சம்பவம் யாருக்குமே நடக்கக்கூடாது. உயிர்ப்பின்றி நாங்கள் வாழும் இந்த வாழ்க்கையைவிட உலகில் கொடியது வேறேதும் உண்டா என எனக்குத் தெரியவில்லை,” என்று கண்ணீர் மல்கக் கூறினார் ஒரே மகனை அந்த விமானத்தில் வழியனுப்பிய திரு சுப்பிரமணியன் குருசாமி, 68.
2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கை நோக்கிப் புறப்பட்ட அவ்விமானத்தில் பயணம் செய்தோரில் மலேசியாவின் பூச்சோங் பகுதியைச் சேர்ந்த 33 வயது புஷ்பநாதனும் ஒருவர்.
பெய்ஜிங் சென்றடைந்ததும் மகன் தொலைபேசியில் அழைப்பார் என்று எதிர்பார்த்திருந்த புஷ்பநாதனின் தந்தைக்கு, விமானம் காணாமற்போன செய்திதான் கிடைத்தது. விமான நிலையம், விசாரணை, காவல்துறை என அல்லாடினாலும் அசைக்க முடியாத நம்பிக்கையுடனே நாள்களை நகர்த்தினர் புஷ்பநாதனின் பெற்றோர்.
பெற்றோரை மறவாத மகன்...
பணி நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்லும் புஷ்பநாதன், ஒவ்வொரு பயணத்திற்கு முன்பும் பந்திங்கில் வசிக்கும் தன் பெற்றோரை நேரில் சந்தித்து ஆசிபெற்று விடைபெறுவது வழக்கம். இவருக்கு இளைய சகோதரி ஒருவரும் உண்டு.
அன்றும் அப்படித்தான் சென்றிருந்தார். ஆனால் அதுதான் மகனைக் கண்குளிரக் கண்டு, உளமார தொட்டுத் தழுவி அரவணைக்க, தங்களுக்கான கடைசி வாய்ப்பு என்று அப்போது தெரியாமல் போனது என்று சொல்லும்போதே பெரியவருக்கு நாத் தழுதழுத்தது.
மனைவி, இரு மகன்களுடன் கோலாலம்பூரில் வசித்து வந்த புஷ்பநாதன், விரைவில் கோலாலம்பூரிலேயே புது வீடு கட்டிக் குடியேறும் திட்டத்தில் இருந்தார். அதன்பின் பெற்றோரும் தன்னோடு வந்து தங்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தியதையும் நினைவுகூர்ந்தார் திரு சுப்பிரமணியன்.
‘வருமுன் உணர்த்தியதோ!’
“எப்போது வீட்டிற்கு வந்தாலும் சாமிப்படத்தின் அருகே செலவுக்காகப் பணம் வைத்துச் செல்வது அவரது வழக்கம். அன்று வீட்டிலிருந்து விடைபெறும் முன்பு வாடகை வாகனத்தின் சன்னல் கண்ணாடியைக் கீழிறக்கி என்னை அழைத்தார்.
“என்னவாக இருக்கும் என்று அருகில் சென்ற என் சட்டைப்பைக்குள் 2,000 ரிங்கிட்டைத் திணித்து செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் அப்பா என்று கூறி விடைபெற்றார்.
“பொதுவாக இப்படிச் சட்டைப்பைக்குள் வைக்கமாட்டாரே என்று நினைத்துக்கொண்டே அவரை வழியனுப்பியபிறகு வீட்டிற்குள் வந்து பார்த்தபோது சாமிப்பட மேடையிலும் 2,000 ரிங்கிட் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன்.
“மீண்டும் என்னைச் சந்திக்கும் வாய்ப்பிருக்காது என்பதற்காக அன்று கூடுதலாகப் பணம் கொடுத்தாரோ என்று பின்னர் எனக்குத் தோன்றியது,” என்று கூறினார் பெரியவர்.
பெற்றோரிடமிருந்து விடைபெற்ற புஷ்பநாதன், விமான நிலையத்திற்குச் செல்லும்முன் தன் மனைவி, அப்போது 3 வயதான மூத்த மகன், 8 மாதக் குழந்தையான இளைய மகன் ஆகியோரைக் காணச் சென்றார்.
எப்போதும் மகிழ்ச்சியாக வழியனுப்பும் மூத்த மகன், அன்று ஏனோ விமானக் கடப்பிதழ் இருந்த பையை ஒளித்துவைத்துப் போக வேண்டாம் என்று அழுதது பின்னர் தெரியவந்தது.
விவரமறியாக் குழந்தையான இளைய மகனும் தவழ்ந்து சென்று அப்பாவின் காலைப் பிடித்துக்கொண்டு தன்னைத் தூக்கிக்கொள்ளுமாறு சைகை காட்டினான்.
மனம் நெகிழ்ந்த புஷ்பநாதன் தமது இரண்டு வாரப் பயணத்தைச் சுருக்கி ஒரே வாரத்தில் திரும்புவதாகக் கூறிப் பிரிய மனமின்றி விடைபெற்றார்.
இவை எல்லாம் ஒருவகையில் போக வேண்டாம் என்று உணர்த்திய அறிகுறிகளோ என்று கருதுகிறார் திரு சுப்பிரமணியன். இருந்தும் மகன் அந்த விமானத்தில் கால்வைத்துவிட்டார் என்று கூறியபோதே குரலுடைந்து விம்மினார் மகனைத் தொலைத்துத் தவிக்கும் இந்தத் தந்தை.
விமானம் காணாமற்போய் நான்கு நாள்கள் கழித்து, 2014ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி நள்ளிரவுக்குப்பின் 2.30 மணியளவில் திடுக்கிட்டுத் தூக்கத்தில் இருந்து விழித்தார் சுப்பிரமணியன்.
தான் கண்ட கனவு மீண்டும் ஒருமுறை அவரின் மனக்கண் முன் நிழலாடியது.
“அம்மாவைப் பத்திரமா பாத்துக்கோங்கப்பா,” என்று தன் கையைப் பிடித்துக் கூறிய மகனை யாரோ இருவர் இழுத்துப் போவதும் “அப்பா! அப்பா!” என்று அழைத்தபடியே மகன் இருளில் மறைவதுமாக அமைந்த அந்தக் கனவு, ஆழ்மனதின் நம்பிக்கையைச் சற்று ஆட்டம் காணவைத்ததாகக் கூறினார் சுப்பிரமணியன்.
தவித்துக் கலங்கும் தாயுள்ளம்...
தாயார் அமிர்தத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்த புஷ்பநாதன், அடிக்கடி தாயாரை அரவணைத்து, “கவலைப்படாதீங்க. எதைப் பற்றியும் யோசிக்காதீங்க. எல்லாம் நல்லதாக நடக்கும். நான் பார்த்துக்கொள்கிறேன்,” என்று சொல்வது வழக்கம்.
புஷ்பநாதன் வாரயிறுதியில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குடும்பத்தினருக்காக சமைத்துப் பரிமாறுவார். அத்தகைய மகனை நினைத்து ஒவ்வொரு நாளும் தன் மனைவி அழுதவாறே தூங்குவதாகக் கூறினார் சுப்பிரமணியன். தன்னைவிடத் தன் மனைவியே மனத்தளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார் அவர்.
விமானச் சத்தம் கேட்கையிலே..
விமானம் மாயமான சம்பவத்திற்குப் பிறகு இந்த மூத்த தம்பதி ஒருமுறைகூட விமானத்தில் பயணம் செய்யவில்லை.
வானில் விமானம் பறக்கும் சத்தம் கேட்கும்போதெல்லாம் காலம் சற்றுப் பின்னோக்கிச் சென்று மகன் பயணம் செய்த விமானம் நல்லபடி தரையிறங்கி அவர் வீடு வந்து சேரும் அதிசயம் நிகழாதா என்று தான் ஏங்குவதாகக் கூறினார் தற்போது பாதுகாவலராகப் பணிபுரியும் சுப்பிரமணியன்.
என்றுமே மகன் உறுதுணை...
மகன் இருந்தபோதும் சரி, இல்லாத இன்றைய நிலையிலும் சரி, தொடர்ந்து அவரே தங்களின் தேவைகளைக் கவனித்து வருகிறார் என்றார் சுப்பிரமணியன். விமானம் மாயமானதை அடுத்து மலேசிய அரசாங்கம் முதற்கட்டமாக ஒரு தொகையை நிவாரணமாக அளித்துள்ளது. சமூக நலத்துறையின் சார்பில் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையையும் வைத்து வாழ்ந்துவருவதாகக் கூறினார் அவர்.
ஒரு தந்தையின் கோரிக்கை...
தங்களுடைய இழப்பையும் துயரையும் மதிக்கும்விதமாக தாங்கள் சென்று மனக்குமுறலைக் கொட்டவும் இப்படி ஒரு துயரச்சம்பவம் இவ்வுலகில் நிகழ்ந்தது என்பதற்கு ஆதாரமாகவும் மலேசிய அரசாங்கம் எம்எச்370 பயணிகளுக்காக நினைவிடம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளார் இப்பெரியவர்.
பொதுவாக ஒருவர் இறந்தபின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஒன்றுகூடி தங்கள் சமய வழக்கப்படி இறுதிச் சடங்குகளைச் செய்வர். இவ்விமானத் தேடுதல் குறித்து உறுதியான நிலைப்பாடு ஏற்படும் வரை தன் மகனுக்கு எவ்வித இறுதிச்சடங்கோ வழிபாடோ செய்வதாக இல்லை சுப்பிரமணியன்-அமிர்தம் தம்பதி.
“எங்களைப் பொறுத்தவரை மகன் எங்கோ மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். மாதாமாதம் எங்களுக்குத் தேவையான பணத்தை அனுப்புகிறார். என்றாவது ஒருநாள் நிச்சயம் வருவார்,” என்று ஏக்கம் குறையாத குரலில் கூறினார் சுப்பிரமணியன்.