பெண்பிள்ளைகள் அடிப்படைக் கல்வியைப் பெறவேண்டும் என்ற மறைந்த தமது தாயாரின் எண்ணத்தை ஈடேற்றும் நோக்கில் இந்தியாவில்
தான் பிறந்த கிராமத்தில் மேல்நிலைப் பள்ளி ஒன்றை நடத்துகிறார் சிங்கப்பூரரான கே.எம். நூர்தீன், 63.
மோனலிசா
“எங்களுடைய கிராமத்தில் 1990களில் பெரும்பாலான பெண்பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயங்கினர். அதிலும் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளை பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக தொலைவில் உள்ள பள்ளிக்கு அனுப்ப மறுத்த னர்,” என்கிறார் திரு நூர்தீன்.
இப்பிள்ளைகளுக்காக பரிந்து பேசி, அவர்கள் பள்ளி செல்ல ஊக்கு வித்தும் அதற்கு தம்மால் இயன்ற பொருளாதார உதவியும் செய்து வந்த இவரின் தாயார் ஹஜ்ஜா சாரா அம்மாள் 1991ஆம் ஆண்டு எதிர்பாராத விபத்தில் காலமானார்.
இத்துயரத்திலிருந்து மீளமுடியாமல் தவித்த சாரா அம்மாளின் கணவர் இ.ஏ. முகமது கமாலுதீன், அவர்களது மகன், இரண்டு மகள்கள் சாரா அம்மாளின் கனவை நனவாக்க விரும்பினர்.
தனது மனைவி பிரிந்த இரண்டே ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மயிலாடு துறை மாவட்டத்தில் தங்களுடைய சொந்த ஊரான வடகரை கிராமத்தில் 1993ஆம் ஆண்டு அவரது பெயரிலேயே ‘ஹஜ்ஜா சாரா அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி’ எனும் பள்ளிக் கூடத்தை கமாலுதீன் ஆரம்பித்தார்.
ரத்தினக் கல் வர்த்தகமும் நாணய மாற்று வணிகமும் ‘கோல்டன் சிட்டி’ எனும் பெயரில் அவர் சிங்கப்பூரில் தொடங்கினார்.
இன்றும் அந்தப் பெயரில் அவரது மகனாகிய நூர்தீன் சிங்கப்பூரில் வணிகத்தைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
“தொடக்கப்பள்ளியாக தொடங்கப் பட்டு இரண்டாண்டுகளில் அரசாங்கத்தின் அனுமதியோடு மேல்நிலைப் பள்ளி தரத்திற்கு உயர்ந்தது. குறைந்தபட்சம் கிராமத்தில் உள்ள பெண் பிள்ளைகள் பள்ளிப்படிப்பையாவது முடிக்க வேண்டும் என்பதே என்னுடைய தந்தையின் கனவு,” என்றார் நூர்தீன்.
ஒரு கட்டத்தில், வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுத்த சூழலில் அவர்களுக்காகவே 2005ஆம் ஆண்டு முதல் தொடக்கநிலைக்குப் பிறகு ஆண் பிள்ளைகள் பள்ளியில் தொடர்ந்து படிக்க அனுமதிக்கப்பட வில்லை.
வெளியூர் சென்று படிக்கும் வசதியில்லாத ஓன்றிரண்டு ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் சக பெண் பிள்ளைகளுடன் அவர்களது பெற்றோர் அனுமதியோடு உயர்நிலை வகுப்புகளில் படிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதனால் பள்ளியில் மாணவர் களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை பாதியாகக் குறைந்ததால் ஆசிரியர் களுக்கும் ஊழியர்களுக்கும் ஊதியம் கொடுப்பதற்கு திணறிய சூழ்நிலையிலும் பெண் பிள்ளைகளின் கல்வியை ஊக்குவிப்பதை பிரதானமாகக் கொண்டு இப்பள்ளியை தம்முடைய தந்தை தொடர்ந்து வழிநடத்தியதை திரு நூர்தீன் நினைவுகூர்ந்தார்.
2010ஆம் ஆண்டில் தந்தையின் மறைவுக்குப் பிறகு பள்ளியின் தாளாளர் பொறுப்பு திரு நூர்தீனுக்கு வந்தது.
வருமானமோ கவனித்துக்கொள்ள போதுமான ஆட்களோ இல்லாத நிலையில், பள்ளியை மூடலாம் என்றும் உயர்நிலை 11, 12ஆம் வகுப்பு களையாவது நிறுத்தலாம் என்றும் திரு நூர்தீன் கூறியபோது கிராம மக்கள் வருத்தமடைந்தனர்.
பள்ளியை மூடினால் பிள்ளைகளை தொலைவில் வேறு ஊர்களில் உள்ள பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றும் பிள்ளைகளை பள்ளியிலிருந்து நிறுத்தி விடுவோம் என்றும் அவர்கள் கூறினர்.
இந்நிலையில் கிராம மக்களுக்காகவும் பெண்பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் தன்னுடைய பெற்றோரின் கனவிற்காகவும் ஒரு வகுப்பில் பத்து பிள்ளைகள் இருந்தாலும்கூட தொடர்ந்து பள்ளியை நடத்த துணிச்சலுடன் முடிவெடுத்தார் திரு நூர்தீன்.
“பள்ளியை நடத்த பலமுறை பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சூழலில் எங்களுடைய சொந்த வருமானத்தை வைத்தும் உறவினர்கள், நண்பர்களின் உதவியுடனும் தொடர்ந்து பள்ளியை சேவை நோக்குடன் நடத்தி வருகிறோம்,” என்று திரு நூர்தீன் மேலும் கூறினார்.
இவருக்கு ஒரு மகனும் இரு மகள்களும் ஆறு பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.
இதர தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் இப்பள்ளியில் மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ஊக்கத்தொகையும் பள்ளிக் கட்டணத்தில் சலுகையும் அளிக்கப்படுவதாக இப்பள்ளியில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமையாசிரியராகப் பணியாற்றும் குணசேகரன் வைத்திய நாதன், 63, தெரிவித்தார்.
கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்கிவரும் இப்பள்ளியில், தற்சமயம் 383 மாணவர்களும் 23 ஆசிரியர்களும் 5 ஊழியர்களும் உள்ளனர்.
அண்மையில் இப்பள்ளி தனது 30ஆம் ஆண்டு நிறைவுவிழாவை கோலாகலமாகக் கொண்டாடியது.