சிறைவாசிகளின் வாழ்வில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் சிறையிலிருந்து விடுதலையான பின்னர் அவர்கள் திருந்தி வாழ்வதற்கும் கடந்த 20 ஆண்டுகளாக ஊன்றுகோலாக இருக்கிறார், தொண்டூழியரான திரு பாரி பெருமாள், 53. கைதிகளுடன் உரையாடுவதால் பொறுமையாக இருக்கக் கற்றுக்கொண்டதாகக் கூறிய இவர், இதை வாழ்நாள் முழுவதும் தொடரவுள்ளார்.
குவீன்ஸ்டவுன் ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தின் தொண்டூழியக் குழுவில் சேவையாற்றி வரும் இவர், 21 ஆண்டு களுக்கு முன்பு பழைய சாங்கி சிறைச்சாலையில் கைதிகளுடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடச் சென்றபோது, சிறைவாசிகளுக்கு உதவி செய்ய போதிய தொண்டூழியர்கள் இல்லாததை அறிந்தார்.
இவருக்கு முன்னர் தொண்டூழியத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரின் வழிகாட்டுதலைப் பின்பற்றி தொண்டூழியத்தை தமது வாழ்வின் ஓர் அங்கமாக ஆக்கிக்கொண்டார் திரு பாரி.
சிறைச்சாலைகளுக்குச் சென்று கைதிகளுக்கு சேவையாற்றுவது ஒரு வித்தியாசமான அனுபவம் என்றார் அவர். பழைய குவீன்ஸ்டவுன் சிறைச்சாலையில் இருக்கும் கைதி களுக்கு ஆன்மிக ஆலோசனை வழங்குவதற்கு கோரிக்கை விடுத்தபோது, தனது முதல் நாள் தொண்டூழியத்தை பாரி தொடங்கினார்.
எவ்வித அனுபவத்தையும் பெறாத இவர், சிறையில் தொண்டூழிய பயணத்தைத் துவங்க பயந்ததாகவும் நம்பிக்கை இல்லாமல் இருந்ததாகவும் கூறினார்.
எட்டிலிருந்து இருபது கைதிகளைக் கொண்ட ஒரு குழு அமர்வில், பஜனைகள் பாடுவது, இந்திய இசைக் கருவிகளை வாசிப்பது, ஆன்மிகத்தைப் பற்றி விளக்குவது போன்றவற்றில் ஈடுபடும் பாரி, திருமணத்திற்கு முன்பு வாரத்திற்கு இரண்டு வார நாள்களையும் இவ்வாறு பயன்படுத்திக் கொண்டார்.
கைதிகளுடன் உரையாடுவது சில தருணங்களில் கடினமாக இருந்தாலும் இதில் அவர் மன நிம்மதியைக் கண்ட தால், கிட்டத்தட்ட 2 மணிநேர பயணம் மேற்கொண்டு ஒவ்வொரு வாரமும் சாங்கி சிறைச் சாலைக்குச் சென்று வருகிறார்.
ஆன்மிக ஆலோசனைகளோடு, அவர்களுக்கு வாழ்வில் ஒரு வழிகாட்டியாகவும் பாரி இருக்கிறார். இதற்கு முன் அவர்களிடம் இருந்த தீய பழக்கங்களை விட்டு, விடுதலைக்குப்பின், எவ்வாறு ஒரு மறுவாழ்வை வாழலாம் என்பதற்கான ஆலோசனைகளையும் அவர் வழங்குகிறார்.
ஒரு சமயம் 21 வயதுக்கு கீழுள்ள சிறைவாசிகளுடன் தீபாவளி கொண்டாடச் சென்றபோது, அவர்களில் சிலர் பலகாரங்களைப் பார்த்தவுடன் கண் கலங்கிய தருணத்தை நினைவுகூர்ந்த பாரி, அச்சம்பவம் தன் மனதை உலுக்கியதாகச் சொன்னார்.
எண்ணெய் எரிவாயுத் துறையில் பணிபுரியும் 38 வயது கோபால கிருஷ்ணன், பாரியைப் போலவே சிறைவாசி களுக்கு சேவையாற்றி வருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இதில் ஈடுபட்டு வரும் இவர், ஆலயத்தின் தொண்டூழியக் குழு மூலம் பாரியின் அறிமுகம் கிடைத்த பிறகு, தானும் அவரைப் போல சேவையாற்ற வேண்டும் என்று விரும்பினார்.
இரு மகன்கள் இருந்தாலும் கோபால கிருஷ்ணன், ஒவ்வொரு வாரயிறுதியிலும் இரண்டு மணி நேரத்தை தொண்டூழியத்துக்கு ஒதுக்கிவிடுகிறார்.
நம் இந்திய கலாசாரத்தின் பெருமைகளையும் சிறைவாசிகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டுமென, இவர் தமிழகத்தின் தஞ்சைப் பெரிய கோவில் வரலாற்றைப் பகிர்ந்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
கைதிகளுக்கு ஆலோசனை வழங்குவதை சிறையில் இருக்கும் வரை மட்டும் அல்லாமல், அவர்கள் வெளியே வந்தபிறகும் பாதை தவறிவிடாமல் இருக்க பாரியும், கோபாலகிருஷ்ணனும் அவர்களுடன் நட்புறவுன் பழகி வருகின்றனர்.