சபிதா ஜெயகுமார்
லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள தேக்கா நிலையம் மூன்று மாதங்களுக்கு மூடப்படவிருக்கிறது. இவ்வாண்டு ஜூலை 3ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மறுசீரமைப்புப் பணிகளுக்காக அது மூடப்படும்.
வட்டார மேம்பாட்டு திட்டங்களில் இந்த மறுசீரமைப்புத் திட்டமும் ஒன்று என தஞ்சோங் பகார் நகர மன்றம் கூறியது.
இதன்கீழ், தேக்கா நிலையத்தின் முதல் தளத்தில் சமைத்த உணவு விற்கும் கடைகளும் சந்தைப் பகுதியும் ஜூலை 3 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மூடப்படும். இரண்டாம் தளக் கடைகள் ஜூலை 3ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை மூடப்படவுள்ளன.
கேள்விக்குறியாகும் வாழ்வாதாரம்
இதனால் பல சிரமங்கள் ஏற்படும் என்கின்றனர் கடைக்காரர்களும் ஊழியர்களும்.
தேக்கா நிலையத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் பலர், வாழ்வாதாரம் தேடி வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். அவர்களில் பெரும்பாலோர் மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
குடும்பத்தின் பொருளாதார நிலை மேம்படுவதற்காக, கல்வியைத் தற்காலிகமாக நிறுத்தி மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வந்து வேலைபார்க்கிறார் 21 வயது ஷாமளா தேவி.
ஆடை விற்பனை செய்யும் கடையில் கடந்த 10 மாதங்களாக வேலைசெய்யும் இவர், இரண்டு மாதங்களுக்கு வேலை இல்லாவிட்டால் பின்னாளில் கல்விப் பயணத்தைத் தொடரும் தனது திட்டம் பாதிக்கப்படக்கூடும் என்று அஞ்சுகிறார்.
மலேசியாவிலிருந்து வாழ்வாதாரம் தேடி வந்த மற்றொருவர் திருமதி லட்சுமி. ஆடை விற்பனையாளராகப் பணிபுரிகிறார்.
இவரின் கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். அண்மையில் மகளின் திருமணத்தால் கூடுதல் செலவை எதிர்கொண்ட இவருக்கு இரு மகன்கள். ஒருவருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. மற்றொருவர் கல்வி பயில்கிறார்.
“இப்போது வாங்கும் சம்பளமே தேவைகளை ஈடுகட்டப் போதாது. இரண்டு மாதங்களுக்கு வேலை இல்லை என்றால் எங்கள் நிலையே கேள்விக்குறியாகிறது.
“சிங்கப்பூரைவிட மலேசியாவில் ஊதியம் குறைவே. இரண்டு மாதம் பட்டினியாக இருப்பதைத் தவிர்க்க அங்கேயே ஒரு வேலை தேடிக்கொள்ள வேண்டும். இரண்டு மாதங்கள்தானே என்று சிலர் நினைக்கலாம். ஆனால், பாதிக்கப்படும் எங்களுக்குத்தான் அந்த வலி புரியும்,” என்று வருந்துகிறார் திருமதி லட்சுமி.
இவர்களைப்போல வேலை அனுமதிச்சீட்டு வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரில் வேறு வேலை தேட அனுமதி இல்லை. எனவே இப்பிரிவினர் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வாடிக்கையாளர்களை இழக்க நேரிடலாம்
தேக்கா நிலையத்தில் பல ஆண்டுகளாக ‘முஸ்தஃபா ஆட்டிறைச்சிக் கடை’, ‘முஸ்தஃபா காய்கறி, பழக்கடை’ போன்ற வற்றை நடத்தி வருகிறார் திரு முகமது முஸ்தஃபா.
நம்பிக்கையான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள இவர், வெவ்வேறு உணவகங்களுக்கும் விநியோகம் செய்வதால், தொழிலை மூன்று மாதங்களுக்கு நிறுத்திவைக்க முடியாது என்றார்.
“வாடிக்கையாளர்களின் ஆதரவை இழந்துவிடாமல் இருக்க, வேறு சந்தையில் கடையை வாடகைக்கு எடுத்தும் இணையம் வழியாகவும் விற்பனையைத் தொடர முடிவெடுத்துள்ளோம். தொழில் பாதித்து வருமானம் குறைவதுடன் தற்காலிகக் கடைக்கு வாடகை செலுத்துவதால் லாபமும் குறையக்கூடும்,” என்று கூறினார் முஸ்தபா.
பத்தில் ஐந்து ஊழியர்களை மட்டுமே அந்த மூன்று மாத காலத்தில் வேலைக்கு வைத்திருக்க முடியும் என்று கூறிய இவர், மற்றவர்களை விடுப்பில் அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக கோழி இறைச்சி விற்கும் திருமதி அபு பக்கர் ஜனத்து கனி, 43, இந்த மூன்று மாத கடை அடைப்பு வாடிக்கையாளர்களின் வருகையைக் குறைத்துவிடும் என்று அச்சம் தெரிவித்தார்.
தங்களின் சேவைத் தரத்தால் ஈர்க்கப்படும் பலர், தங்கள் கடையில் வாங்குவது மனத் திருப்தியை அளிப்பதாகச் சொல்வதை இவர் நினைவுகூர்ந்தார்.
“நிலையம் மூடுவது தொடர்பான அறிவிப்புக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் பலர் தொலைபேசியில் அழைத்து அக்கறையாக விசாரித்தனர்.
“முன்பு தேக்கா நிலையம் மறுசீரமைப்பிற்கு மூடப்பட்டபோது அருகில் இருந்த திறந்தவெளியில் தற்காலிகச் சந்தை ஒன்று அமைத்துத் தரப்பட்டது.
“அனைத்துக் கடைக்காரர்களும் அங்கு சென்றதால் வாடிக்கையாளர்களும் அங்கு வந்தனர். எனவே, வியாபாரம் அவ்வளவாக பாதிப்படையவில்லை.
“கொவிட்-19 கிருமித்தொற்று காலகட்டத்திற்குப் பிறகு இப்போதுதான் வியாபாரம் சற்று தலைதூக்கத் தொடங்கியுள்ளது. அதற்குள் இதுபோன்ற ஒரு நெருக்கடி ஏற்படுவது வருத்தமளிக்கிறது.
“சிங்கப்பூரின் பல வட்டாரங்களிலிருந்து இங்கு வந்து பொருள்வாங்கும் வாடிக்கையாளர்களை மெல்லமெல்ல இழந்து வருகிறோம். புதுப்பிப்புக்குப் பிறகு நிலையத்தைத் திறக்கையில் இவர்கள் திரும்பி வருவார்களா என்பது சந்தேகமே,” என்று குறிப்பிட்டார் திருமதி ஜனத்து கனி.
மூடப்படும் காலம் மிக அதிகம்
‘ஏஆர் ரஹ்மான் கஃபே’, ‘ஏஆர் ரஹ்மான் ராயல் பராட்டா’ ஆகிய கடைகளின் உரிமையாளரான திரு முஜிபுர் ரஹ்மான், 50, மூன்று மாதங்களுக்கு தேக்கா நிலையத்தை மூடுவது மிக அதிகம் என்றார்.
“கடைகளைச் சுற்றியுள்ள பகுதிகளையும் குழாய்கள், மின்சாரக் கருவிகள் ஆகியவற்றையும் மேம்படுத்துகின்றனர். இரண்டு மாதங்கள் என்றால் பரவாயில்லை. மூன்று மாத காலம் மூடுவது சங்கடம் அளிக்கிறது.
“ஊழியர்கள் எங்களை நம்பியே இங்கு வேலைக்கு வந்துள்ளனர். இவர்களை மூன்று மாதம் விடுமுறைக்குச் சென்று வரும்படி கூறுவதும் நியாயமில்லை. ஊழியர்கள் வேலை தேடிச் சென்றுவிட்டால், நிலையம் மீண்டும் திறந்தவுடன் திரும்பி வருவது சந்தேகம்தான். அப்போது புதிதாக ஊழியர்களைத் தேட வேண்டியிருக்கும்,” என்று வருத்தம் தெரிவித்தார் திரு ரஹ்மான்.
ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ள கடை மூடி இருக்கும் காலத்தில் சிறிதளவு பணம் வழங்க இவர் திட்டமிடுகிறார்.
“பொதுவாக தீபாவளிக்கு, பல மாதங்கள் ஆயத்தப் பணிகள் நடைபெறும். நான்கு, ஐந்து மாதங்களுக்கு முன்பே பண்டிகைக்கால ஆடைகளை வாங்கப் பலரும் வருவார்கள்.
“இவ்வாண்டு தீபாவளி நவம்பர் மாதம் வருகிறது. நிலையம் மீண்டும் திறந்த பிறகு தீபாவளிக்குமுன் இரண்டு மாத காலமே உள்ளது. ஆடை விற்பனையாளர்களுக்கு இது பெரிய அளவிலான நெருக்குதல்தான்,” என்று ஆதங்கத்துடன் கூறினார் துணிக்கடையில் பணிபுரியும் திருமதி ஜெயா, 58.
வாடிக்கையாளர்கள் வருத்தம்
திருமதி அபு பக்கர் ஜனத்து கனியின் கோழி இறைச்சி கடைக்கு அடிக்கடி வரும் வாடிக்கையாளர் குமாரி ரினோஷா ஜஸ் ரீன்.
“இங்கு பொருள்களை நம்பி வாங்கலாம். அதனால்தான் தொடர்ந்து இங்கு வருகிறேன். என் வீட்டுக்கு அருகில் உள்ள பேரங்காடியும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தேக்கா நிலையமும் மூடப்பட்டால் மூன்று மாதங்களுக்கு வேறு கடையை நாட வேண்டும்,” என்றார் ரினோஷா.
பொருள்கள் வாங்குவதற்கு மட்டுமல்லாது மக்கள் கூடும் இடமாகவும் அங்குள்ள உணவங்காடி நிலையம் விளங்குகிறது.
“வாரத்தில் மூன்றுமுறை என் நண்பர்களை இந்த உணவங்காடி நிலையத்தில் சந்திப்பேன். வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வேலை பார்க்கும் எங்களுக்கு தேக்கா நிலையம் ஒன்றுகூட வசதியாக இருக்கிறது.
“எங்களைப்போல பலரும் இங்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் கூட நண்பர்களுடன் அரட்டை அடிப்பதுண்டு. குறிப்பாக, இந்த இடம் இன்னோர் இல்லம் போன்ற உணர்வைக் கொடுப்பதே இதற்குக் காரணம்.
“இங்கு விற்கப்படும் உணவு, வாகன நிறுத்த வசதி, கடைக்காரர்களுடனான நட்பு போன்றவற்றை மூன்று மாதங்கள் அனுபவிக்க இயலாது என்பது கவலை தருகிறது. ஐந்து, ஆறு நண்பர்களுடன் சேர்ந்து அமர்ந்து நீண்ட நேரம் பேசவும் முடியாது,” என்று தம் கவலையைப் பகிர்ந்து கொண்டார் திரு லினஸ் ஜெரல்டு, 57.
நல்லதை எண்ணி மகிழ்பவர்கள்
ஆட்டிறைச்சிக் கடையில் பணிபுரியும் 29 வயது ஷா, “இந்த மூன்று மாதங்கள் எனக்கு விடுமுறை என்பதால் மிக்க மகிழ்ச்சி,” என்று பூரிப்புடன் கூறினார்.
‘ஸுசியாவ் சென்டர்’ வணிகச் சங்கத்திற்கான தேக்கா நிலையப் பிரதிநிதி அஜித் குமார், 53, ‘பூஜா ஆடைகள்’ எனும் கடையை தேக்கா நிலையத்தில் நடத்தி வருகிறார்.
நிலையத்தை மூடுவதால் ஊழியர்களின் சம்பளம், மத்திய சேமநிதி, வெளிநாட்டு ஊழியர் தீர்வை போன்றவற்றுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் கவலைப்படுகிறார் இவர்.
இருப்பினும், “தேக்கா நிலையத்தைப் புதுப்பிப்பது அவசியம்தான். மறுசீரமைப்புப் பணிகள் எதிர்காலத்தில் பெரும் உதவியாக அமையும்.
“தேக்கா நிலையம் இன்னும் 10 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கும்.
“அரசாங்கம் இங்கு முதலீடு செய்ய விரும்புகிறது என்றும் இந்த நிலையம் இடிக்கப்படும் நிலை இப்போதைக்கு இல்லை என்றும் தெரிகிறது. இது உண்மையில் இங்குள்ளவர்களுக்கு ஒரு வரம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்,” என்று கூறிய திரு அஜித் புதிய தேக்கா நிலையம் தயாராவதற்காகக் காத்திருக்கிறார்.