மோனலிசா
தமிழ்மொழியினை உலகளவில் முன்னிறுத்தியதில் அயலகத் தமிழர்களின் பங்கு இன்றியமையாதது என்று அண்மையில் நடைபெற்ற 'தமிழின் அழகே அழகு' நிகழ்வில் சிங்கப்பூர்த் தமிழர்களின் தமிழ்மொழி ஆர்வத்திற்கு புகழாரம் சூட்டினார் எழுத்தாளரும் பேச்சாளரும் திரைப்பட நடிகருமான திரு ஜோ மல்லூரி.
தமிழர் வாழ்வின் அனைத்துப் படிநிலைகளிலும் இணைந்து பயணிக்கும் இம்மொழியினைப் பாதுகாப்பது உலகில் வாழும் ஒவ்வொரு தமிழரின் கடமை என்று அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரு ஜோ கூறினார்.
மேலும், இன்றைய தலைமுறை தமிழில் பேசாதிருந்தால் அடுத்த தலைமுறையைத் தாண்டி தமிழ்மொழி நீடிப்பது கேள்விக்குறியாகிவிடும் என்று தமது வருத்தத்தைப் பதிவுசெய்த திரு ஜோ, தாய்மொழியைத் தவிர்க்காத தலைமுறையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தமிழ்மொழி விழாவையொட்டி இம்மாதம் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் அங்கம் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.
தமிழ்மொழியின் தனித்துவமான சிறப்பம்சங்கள், இளையர்களிடம் தமிழ்மொழியினைக் கொண்டு செல்வதற்கான எளிய வழிமுறைகள், தமிழில் பிற மொழிகளின் கலப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இக்கலந்துரையாடல் அங்கத்தில் அலசி ஆராயப்பட்டன.
இக்கலந்துரையாடலைத் தமிழ்மொழி பண்பாட்டுப் பிரிவு தேசியக் கல்விக்கழக முள்ளாள் தலைவரான முனைவர் ஆ.ரா. சிவகுமாரன் வழிநடத்தினார்.
இந்நிகழ்விற்குப் பல வாரங்கள் முன்னதாக 'சிலப்பதிகாரம் வழி தமிழின் அழகே அழகு' எனும் தலைப்பிலான ஆய்வுக்கட்டுரைப் போட்டிக்காக தலைசிறந்த ஆய்வுக்கட்டுரைகளை எழுதிய மாணவர்கள், இக்கலந்துரையாடல் நிகழ்வில் பங்குகொண்டனர். வெற்றியாளர்களுக்கும் கலந்துகொண்ட மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பங்குகொண்ட உயர்நிலைப்பள்ளி மாணவியான 12 வயது மேதினி கபிலன், "மாணவர்களின் கலந்துரை யாடல் அங்கம் சுவாரசியமாக இருந்தது. தமிழ்மொழி பற்றிய பல புதிய தகவல்களையும் கற்றுக்கொண்டேன்," என்றார்.
"சிறப்பு விருந்தினருடைய தங்குதடையற்ற தமிழ்மொழி பேச்சு மெய்சிலிர்க்க வைத்தது. நாம் அன்றாடம் பேசும் எளிய வாக்கியங்களிலாவது பிறமொழி கலக்காமல் இனி பேச வேண்டும்," என்று கூறினார் மென்பொருள் பொறியாளரான சந்தியா தனசேகரன், 23.
"இதுபோன்ற நிகழ்வுகளில் தமிழைப் பற்றி அதிகமாக அறி வது மொழிமீதுள்ள ஈடுபாட்டை அதிகரிக்கிறது," என்று கூறினார் ஆய்வுத் துறையில் உள்ள முனைவர் இரா. அருள்ராஜ், 40.

