கருணாநிதி துர்கா
நெருக்கமான பங்காளித்துவ உறவை நிலைநாட்டவும் இந்திய சமூகத்தை மேம்படுத்தவும் சிண்டாவும் சிங்கப்பூர் இந்தியர் சங்கமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.
சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் கட்டடத்தில் இந்நிகழ்வு நேற்று முன்தினம் நடந்தேறியது.
இந்நிகழ்ச்சிக்கு சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரனும் சிங்கப்பூர் இந்தியர் சங்கத் தலைவர் திரு தமிழ் மாறனும் வந்ததோடு சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு எஸ் சந்திரதாஸ் வருகை புரிந்தார்.
இந்தப் பங்காளித்துவத்தினால் எளிதில் பாதிப்படையக்கூடிய மக்களுக்காக சிண்டாவால் இன்னும் கூடுதலான ஆதரவு வழங்க முடியும்.
சிண்டாவின் திட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் பங்குபெறும் இளையர்கள் சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் விளையாட்டு வசதிகளைப் பயன்படுத்தும் வாய்ப்பும் கிட்டும்.
இரு அமைப்புகளும் சமூக நலனையும் ஒற்றுமையையும் கருதித் திட்டங்களை வகுத்துள்ளன. அதோடு சமூகத்தின் மீது அவை கொண்டுள்ள அர்ப்பணிப்பாலும் இந்தப் பங்காளித்துவம் சாத்தியமானது.
இந்தப் பங்காளித்துவத்திலிருந்து புதிதாகப் பலவற்றைக் கற்றுக்கொண்டு மேன்மேலும் முன்னேறுவதில் தமிழ் சமூகத்தினர் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார் திரு தமிழ் மாறன்.
"அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு இது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும் என நம்புகிறேன். ஒன்றிணைந்து வலுவான ஓர் இந்திய சமூகத்தை உருவாக்கும்போது தத்தம் வளங்கள் அனைவருக்கும் பயனளிக்கும்," என்று திரு அன்பரசு கூறினார்.
"வசதிகுறைந்த இளையர்களுக்கும் காற்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கான வசதிகளை அமைத்துக் கொடுக்கும் வாய்ப்பு இந்திய அமைப்புகளுக்குக் கிடைத்துள்ளது.
"இவ்வாறான விளையாட்டு களின் மூலம் இளையர்கள் ஒன்றிணைந்து பண்புடைய சமூகம் ஒன்றை உருவாக்க முடியும்," என்று திரு எஸ் சந்திரதாஸ் கூறினார்.

