சபிதா ஜெயகுமார்
'அகம் தியேட்டர் லேப்' எனும் லாப நோக்கமற்ற நாடக அமைப்பு, சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து தகுதிபெற்ற கலைத்துறை மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கி உள்ளது.
அகம்-சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை கல்வி உதவி நிதி, இம்மாதம் 20ஆம் தேதி 'குட்மன் ஆர்ட்ஸ்' நிலையத்தில் நடைபெற்ற 'அகம் கிவ்ஸ்' நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங், 'அகம் கிவ்ஸ்' திட்டத்தைத் தொடங்கி வைத்து கல்வி உதவி நிதியை வழங்கினார்.
லாப நோக்கமற்ற பொதுநல அமைப்பாக விளங்கும் சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாடக அமைப்பு 'அகம் தியேட்டர் லேப்'. வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு ஆதரவும் உதவியும் வழங்குவது அதன் குறிக்கோள்.
சிங்கப்பூரின் கலைச் சமூகத்திற்குப் பங்காற்றிவரும் ஐந்து கலைத்துறை ஆர்வலர்கள் இந்த ஆண்டுக்கான அகம்-சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை கல்வி உதவி நிதியைப் பெற்றுக்கொண்டனர்.
நன்யாங் நுண்கலைக் கழகத்தில் பயிலும் ஷானிகா ஷிவானி, ஹன்னா சோனியா, லசெல் கலைக் கல்லூரியின் மும்தாஸ் மரைக்காயர், முகமது மிர்சா, ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் ஷாலோம் அலிஸ் ஆகியோர் அவர்கள்.
அறநிதியாக $8,000 திரட்டப்பட்டதை அடுத்து நாடகம், கலை நிர்வாகம் போன்ற துறைகளில் ஈடுபடுவோருக்கும் மேல்படிப்பைத் தொடர்வோருக்கும் இந்த கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது.
"இந்த நிதி கல்விச் செலவுகளுக்கு உதவுவதோடு என்னைப் போன்று கலைத்துறையை வாழ்க்கைத்தொழிலாகத் தேர்ந்தெடுப்போருக்கு ஓர் அங்கீகாரமாக அமைகிறது.
"சிங்கப்பூர் சமுதாயத்திற்கு முக்கியப் பங்கு அளிக்கிறோம் என்ற அடையாளத்துடன் கலை வளர்ச்சி முக்கியம் என்று அமைப்புகள் நம்புவதை எடுத்துக்கூறும் விதமாக வழங்கப்படும் இந்த நிதி ஊக்கம் அளிக்கிறது," என்றார் கலை கற்பித்தல், பயிற்சி தொடர்பில் பட்டக்கல்வி பயிலும் திருமதி மும்தாஸ் மரைக்காயர்.
நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய அகம் நிறுவனத்தலைவர் அழகிய பாண்டியன், "சிங்கப்பூர் இளையர்கள் நாடகத்துறையிலும் கலைத் துறைகளிலும் ஈடுபடுவதை ஊக்குவித்து, கலை வளர்ச்சிக்குப் பங்காற்றுவது எங்கள் விருப்பம்," என்று கூறினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் 'விதை' எனும் நாடகம் படைக்கப்பட்டது.
சிங்கப்பூர்க் கவிஞர்கள் இயற்றிய கவிதைகளை மையமாகக் கொண்ட இப்படைப்புக்கு, அப்சரஸ் ஆர்ட்ஸின் முதன்மை நடனக் கலைஞர் மோகனப்பிரியன் தவராஜா, திரைப்படத் தயாரிப்பாளர் டான் அரவிந்த், இசைக்கலைஞர் ராகவேந்திரன் ராஜசேகரன், நடிகர்கள் இந்து இளங்கோவன், வினித் குமார் ஆகியோர் உயிரூட்டினர்.
"தமிழ் நாடகத் துறையிலும் கலைத்துறையிலும் ஒத்துழைப்பைத் தூண்டும் விதமாக நாங்கள் விதைக்கும் விதைகளை இந்நாடகம் காட்சிப்படுத்துகிறது. தொடக்கக் கல்லூரியில் தமிழ்மொழி, இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு இந்தக் கவிதைகள் மீதான புரிதலை அதிகரிக்க உதவுவது எங்கள் நோக்கம்," என்று கூறியது அகம் நாடக அமைப்பு. "வளரும் கலைஞர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு வழங்கி துணைநிற்போம்," என்றார் 'அகம் தியேட்டர் லேப்' நிறுவனர் சுப்ரமணியன் கணேஷ்.

