செய்தியாளர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டிய முக்கிய மொழிபெயர்ப்புத் திறன்களை, மனப்பக்குவத்தை, செய்தி அணுகுமுறையை இளையர்களுக்கு அறிமுகப்படுத்தியது
தமிழ் முரசின் 'முரசு மொழிபெயர்ப்பு' பயிலரங்கு.
தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக நடந்தேறிய முழுநாள் பயிலரங்கு ஏறத்தாழ 40 இளையர்களை ஈர்த்தது.
செய்தி குறித்து கருத்து பரிமாறிக்கொண்டு, நேரடிப் பயிற்சிபெறும் தளமாக இப்பயிலரங்கு உருவெடுத்தது.
தமிழ் முரசு ஆசிரியர் குழுவின் வழிநடத்தலில் ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பை வெவ்வேறு சூழல்களுக்குப் பொருத்திப் பயன்படுத்துவதிலும் செய்தி எழுதுவதிலும் பங்கேற்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
தொடர்பு, தகவல் அமைச்சின் தேசிய மொழிபெயர்ப்புக் குழு மற்றும் வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் இந்நிகழ்வு எஸ்பிஎச் வளாகத்தில் நேற்று இடம்பெற்றது. மொழிபெயர்ப்புக்கு அறிமுகப்படுத்துவது, செய்தி எழுதுவது என இரு அங்கங்களாக பயிலரங்கு பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வோர் அங்கத்திலும் குழு நடவடிக்கைகளின்மூலம் கற்றதை செயல்படுத்திப் பலனடைந்தனர் இளையர்கள்.
உள்ளூர் நடப்புகளையும் உலக விவகாரங்களையும் ஆழமாக ஆராய, அவற்றுள் பொதிந்திருக்கும் கருத்துகளை வெளிக்கொணரும் புரிந்துணர்வை மேம்படுத்த பயிலரங்கு வாய்ப்பு தந்ததாகக் கூறினார், 19 வயது சாய்பாலாஜி லக்ஷ்மணன்.
இரு அங்கங்களையும் வழிநடத்திய முரசின் உதவி ஆசிரியர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தது தம்மைக் கவர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
"கலைச்சொற்கள், வேற்றுமொழி கலாசாரங்களைப் பறைசாற்றுவது முதலிய தங்களின் அன்றாடப் பணியில் எதிர்நோக்கும் சவால்களை உதவி ஆசிரியர்கள் பகிர்ந்துகொண்டனர். துல்லியமாக மொழிபெயர்ப்பது சாதாரண மனிதருக்கும் பொருந்தும் என்பதை உணர்ந்துகொண்டேன்," என்றார் அவர்.
இதற்கிணங்க, பயிலரங்கில் பங்குகொண்ட சித்தார்த் நரேந்திரன் பிள்ளை, 17, பல இன சமுதாயமான சிங்கப்பூரில் மொழிபெயர்ப்பு ஒவ்வொருவருக்கும் பொருத்தமானது என்று தாம் உணர்வதாகக் கூறினார்.
தினமும் எதிர்நோக்கும் வழக்கமான தொடர்களில், உரையாடல்களில், வர்த்தக முழக்கவரிகளில், செயல்பாடுகளில்கூட மொழிபெயர்ப்புக்கு இடமுண்டு என்பதைத் தாமும் நண்பர்களும் இணைந்து அறிந்துகொண்டதை அவர் விவரித்தார்.
திருமதி சத்யப்பிரியா, 35, மொழிபெயர்ப்புத் துறையில் 9 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். எளிய முறையில் மொழிபெயர்ப்பதை இந்நிகழ்வு ஆழமாக பதித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
"இந்நிகழ்வு என் கண்களைத் திறந்து வைத்துள்ளது. ஒரே விவரத்தை இளையர்கள், மாணவர்கள் எத்தகைய புதுமையான கோணங்களில் பார்க்கின்றனர் என தெரிந்துகொண்டது வியப்பூட்டியது; ஆக்கபூர்வமான உரையாடல்களுக்கு இட்டுச்சென்றது," என்றார் திருமதி சத்யப்பிரியா.
இவரைப்போல, மொழிபெயர்ப்பில் அடிக்கடி ஈடுபடும் கட்டாயம், ஆரம்பக்கல்வி ஆசிரியர் 41 வயது திருமதி லீலா ராணிக்கு உண்டு.
மகளுடன் பயிலரங்கில் கலந்துகொண்ட அவர், "தமிழ்ச் சிறுவர் நூல்களின் பற்றாக்குறையினால் ஆங்கில நூல்களை மொழிபெயர்ப்பதையே நம்பி உள்ளேன். இப்பயிலரங்கு அதற்கான தன்னம்பிக்கையை ஊட்டியுள்ளது," என்றார்.
இளம் வயதினருக்கும் எட்டுமளவில் இத்தகைய கருத்துகளை முன்வைத்த இப்பயிலரங்கு 13 வயது அதிதி முருகேஷ்வர் ராவிற்கு தமிழ்மொழி பயன்பாட்டை அதிகரிக்க ஊக்கமளித்துள்ளது.
மராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், தமிழின் அழகையும் நுட்பங்களையும் பாராட்ட பயிலரங்கு வகைசெய்ததாகக் கூறினார்.
தமிழ் முரசு அலுவலகத்தில் செய்திக் குழுவினரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பினையும் பங்கேற்பாளர்கள் பெற்றனர். பயிலரங்கில் கற்றுக்கொண்ட கூறுகளைத் தொடர்புப்படுத்திக் கொண்டதோடு, செய்திக் குழுவினரின் அனுபவங்கள் தம்மை பிரமிக்க வைத்ததாகக் கூறினார் 16 வயது மாணவர் சத்தியவாகீஸ்வரன் சாதனா.
'முரசு மொழிபெயர்ப்பு' பயிலரங்கு, தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு தமிழ் முரசு ஏற்பாடு செய்த முதல் நிகழ்வு. தமிழார்வத்தையும் செய்தித்துறை நாட்டத்தையும் விதைக்கும் நோக்கில் இந்நிகழ்வு அமைந்தது.

