முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் இந்து அறக்கட்டளை வாரிய துணைத் தலைவருமான திரு இரா.தினகரன், இவ்வாண்டின் சிங்கப்பூர் தமிழ் இலக்கியக்களத்தின் பாவேந்தர் விருதைப் பெற்றார்.
வணிக நிர்வாகத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர், 10க்கும் மேற்பட்ட தொழில்முறைச் சங்கங்களுடனும் அரசாங்கத்தின் பல்வேறு குழுக்களுடனும் இணைந்து பணியாற்றி வருகிறார்.
சிங்கப்பூர் சில்லறை விற்பனை யாளர் சங்கத் தலைவர், திறன்வளர்ச்சித் துறையின் சிங்கப்பூர் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் துணைத்தலைவர், தேசிய மொழிபெயர்ப்புக் குழு உறுப்பினர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் இவர், லாபநோக்கமற்ற நிறுவனங்களை நிர்வகிப்பதிலும் சமூகநலத் திட்டங்களை வழிநடத்துவதிலும் முனைப்புடன் செயல்படுகிறார். சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கும் சமாதான நீதிபதி விருது உட்பட பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
எழுச்சிமிகு சொற்களால் தமிழரின் திறமைகளையும் வீரத்தையும் தட்டி எழுப்பிய பாவேந்தர் பாரதிதாசன் பெயரிலான விருதைப் பெற்றதில் தாம் பெருமை கொள்வதாகக் கூறிய திரு தினகரன், பாவேந்தர் நூல்களை அதிகம் படிக்க இந்த விருது தமக்கு ஊக்கமளிப்பதாகத் தெரிவித்தார்.
இம்மாதம் 23ஆம் தேதி தேசிய நூலகக் கட்டடத்தில் நடைபெற்ற 'சுழலும் சொற்போர்' நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங், இந்த நிகழ்வின் மூலம் தமிழ்மொழிக்கு மாபெரும் தொண்டாற்றிய ஒரு மேதையைப் பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பு தமக்குக் கிடைத்ததாகக் கூறினார்.
இந்நிகழ்வில், வழக்கறிஞரும் கவிஞருமான த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற 'சிறப்புரையும் தீர்ப்பும்' அங்கம் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. பாவேந்தரின் கவிதைகளையும் வாழ்க்கை வரலாற்றையும் சுவாரசியத் தகவல்களுடன் உரையாற்றினார் கவிஞர்.
'பாவேந்தர் பாரதிதாசனை புரட்சிக் கவிஞராக்கியது எது?' எனும் தலைப்பின்கீழ் பேச்சாளர்கள் சுவர்ணலதா ஆவுடையப்பன், முனைவர் மன்னை க.இராஜகோபாலன், இசக்கி செல்வி ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த நக்ஷத்திராஸ் இசைப்பள்ளி நிறுவனர் சுந்தரி சாத்தப்பன், 41, "பாரதிதாசனின் தமிழ்ப்பணி குறித்து அதிகம் தெரிந்துகொண்டேன். இதுபோன்ற நிகழ்வுகள் தமிழுணர்வைத் தூண்டுகின்றன," என்றார்.

