மோனலிசா
தமிழ்மொழி சார்ந்த படைப்புகள் புதிய கண்டுபிடிப்புகள் அல்ல; அவை தொன்றுதொட்டு வாழ்ந்தோங்கும் இம்மொழியின் புதிய பரிமாண மெருகேற்றம் மட்டுமே என்று கூறினார் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான யுகபாரதி.
தமிழ்மொழி விழாவையொட்டி அண்மையில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் (சிங்கப்பூர் கிளை) ஏற்பாட்டில் நடைபெற்ற 'தமிழுக்கும் அழகென்று பேர்' நிகழ்வில் சிறப்புரையாற்றிய இவர், "நம்முடைய மொழியின் வரலாற்றையும் பின்புலத்தையும் ஆளுமையையும் அறிதல் அவசியம்.
"இந்த விழிப்புணர்வே நம்முடைய மரபுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் கருவி," என்று கூறினார்.
மேலும் தாம் எழுதிய பல திரைப்படப் பாடல்களுக்கு திருக்குறளின் சொற்களும் பொருள்களும் எவ்வாறு அடித்தளமாகவும் அரணாகவும் மெருகூட்டின என்பதைப் பல சுவாரசிய அனுபவங்களையும் கோடிகாட்டி பகிர்ந்துகொண்டார்.
எந்தவொரு கலைஞரும் கலையின் களத்தையும் சமூக நலனையும் உள்வாங்கிக்கொண்டே படைப்புகளை உருவாக்கவேண்டும்.
அவ்வகையில் திருக்குறள் பலவித படைப்புகளுக்கு அடிநாதமாக உள்ளது எனக் குறிப்பிட்ட கவிஞர் யுகபாரதி, அதனை பல எடுத்துக்காட்டுகளுடனும் எடுத்துரைத்தார்.
கடந்த 23ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளு மன்றச் செயலாளர் எரிக் சுவா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் ஆண்டுதோறும் இச்சங்கத்தினரால் வழங்கப்படும் 'ஜமாலியன் விருது' சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது.
தமிழாசிரியரான இவர் தமிழ் மொழிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் ஆற்றிய தொண்டுகளை அங்கீகரிக்கும் வகையில் இவ் விருதினை அவருக்கு வழங்கிய தாக கூறினார் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் மு.அ. காதர்.
மேலும் கடந்த 13 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இச்சங்கத்தின் 126வது நிகழ்வு இதுவென்றும் தமிழ் மொழிக்காகவும் இளையர் சமூகத்தின் கல்வி நலனுக்காகவும் ஒன்றிணைந்த சமூக வளர்ச்சிக்காகவும் இச்சங்கம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இவர் தெரிவித்தார்.
இத்துடன் இந்நிகழ்வில் 2022ஆம் ஆண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றதைப் பாராட்டும் வண்ணம் கிரசெண்ட் பெண்கள் பள்ளியைச் சேர்ந்த மாணவி அமீரா ஃபர் ஹானாவிற்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பங்குகொண்ட மென்பொருள் பொறியாளரான ஷர்மிளா சாமிநாதன், 34, "கும்கி திரைப்படத்தின் உச்சக்கட்ட இறுதிக்காட்சி எவ்வாறு ஒரு திருக்குறளிலிருந்து பிறந்தது என்பதை கவிஞர் விளக்கியது ஆச்சரியமளித்தது.
"அதேபோல் பல தமிழ்மொழி படைப்பிற்கும் பின்னால் திருக் குறள் இருக்கிறது என்று கவிஞர் கூறியது அந்நூல் மேல் ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருமுறையேனும் முழுவதுமாக படித்துமுடிக்க எண்ணுகிறேன்," என்று கூறினார்.
பாடலாசிரியர் யுகபாரதியுடன் மாணவர்கள், பெற்றோர் சந்திப்பு
ரச்சனா வேலாயுதம்
திரைப்படப் பாடல்கள் மூலம் தமிழ்மொழியை மாணவர்களிடையே வளர்க்கும் நோக்கில் திரைப்படப் பாடலாசிரியர் யுகபாரதியுடன் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 'மாணவர்களுடன் கவிஞர் யுகபாரதி' என்ற நிகழ்ச்சிக்கு ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் இம்மாதம் 23ஆம் தேதியன்று ஏற்பாடு செய்திருந்தது.
தேசிய நூலகத்தின் 'தி போட்' வளாகத்தில் நடந்தேறிய இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் உட்பட பெற்றோரும் பொது மக்களும் கலந்துகொண்டனர்.
தமிழ் திரைப்படப் பாடல் களின் மூலம் தமிழ்ச் சொற்களின் பொருளை எடுத்து உரைத்ததுடன் கவிஞர் யுகபாரதி தமது திரை இசை அனுபவங்களையும் வந்தவர்களுடன் பகிர்ந்துகொண்டார். அவர் எழுதிய பாடல்களைச் சுட்டிக்காட்டி, குறிப்பாக ஒருசில சொற்களைப் பயன்படுத்தியதற்கான தமது நோக்கத்தையும் விளக்கினார் அவர்.
கிட்டத்தட்ட 1,000 திரைப்படப் பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ள யுகபாரதி, தமது அனுபவங்கள் பற்றியும் எழுத்து மீதான நாட்டம் பற்றியும் பேசினார்.
'சந்திரமுகி' திரைப்படத்தில் இருந்து "கொஞ்ச நேரம்", 'குருவி' திரைப்படத்திலிருந்து "தேன், தேன், தேன்", 'கத்தி' திரைப்படத்திலிருந்து "ஆத்தி என நீ" போன்ற புகழ்பெற்ற பாடல்களுக்கு வரிகளை இயற்றியுள்ள யுகபாரதி, தமிழ் மீதான நாட்டம் பற்றி வருகை யாளர்களுடன் பகிர்ந்து கொண்டு, கேள்வி பதில் அங்கம் வழி கலந்துரையாடினார்.
"மாணவர்களுக்காக முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி தமிழையும் அதன் அழகையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கத்தை நிறைவேற்றியது," என சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் எம். ஏ. காதர் கூறினார்.
வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு சு. மனோகரன் கவிஞர் யுகபாரதிக்குப் பொன்னாடை அணிவித்தார்.
தேசிய நூலக வாரியம், வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
தமது திரையிசை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட யுகபாரதி.
படம்: ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்

