ரச்சனா வேலாயுதம்
'இன்பத் தமிழும் இளைய தலைமுறையும் ஓர் அழகியல் பார்வை' என்ற தலைப்பில் தமிழ் மீதான நாட்டத்தை இளையர்களுடன் பகிர்ந்ததோடு, மொழியின் சிறப்புகளையும் எடுத்துரைத்தார் சிறப்புப் பேச்சாளர் திருமதி கவிதா ஜவஹர்.
தமிழகத்தின் பிரபல பட்டிமன்றப் பேச்சாளரான அவர், "தொனிக்கு ஏற்ப சொற்களுக்கு வெவ்வேறு பொருள் கொடுக்கும் மொழி தமிழ்" என்று கூறி, தமிழின் நுணுக்கங்களையும் அழகியலையும் போற்றி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசினார்.
தமிழ்மொழி விழாவை முன்னிட்டு, வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவுடன் இந்திய முஸ்லிம் பேரவை இந்த நிகழ்ச்சியை ஏப்ரல் 28ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன.
'செயற்கை நுண்ணறிவும் தமிழும் இணைய முடியுமா?' என்ற கலந்துரையாடலுடன், 'சேட்ஜிபிடி' செயற்கை நுண்ணறிவைத் தமிழில் பயன்படுத்த முடியுமா என்று நகைச்சுவையான முறையில் ஆராய்ந்தனர் இளையர்கள் ரசீத், அஃபிஃபா ஷாஃபானா ஆகியோர்.
'சேட்ஜிபிடி'யை கொண்டு தமிழில் கவிதை எழுத முயற்சி செய்த அவர்கள், பல நகைச்சுவையான சவால்களை எதிர்கொண்டனர். செயற்கை நுண்ணறிவு, பொருள் இல்லாத ஒரு கவிதை எழுதிய நிலையில், தரமான கவிதையை எப்படி எழுதுவது என்று எடுத்துக்காட்டினார் அஃபிஃபா.
'தமிழே! பேரழகே!' என்ற அங்கத்தில் அன்றாடம் புழங்கும் தமிழ்ச் சொற்களில் உள்ள வடமொழிக் கலப்பை சுட்டிக்காட்டி அதற்கான சரியான தமிழ் வார்த்தைளை எடுத்துக் கூறினர் பள்ளி மாணவர்கள் சிலர்.
சிங்கப்பூர் தேசிய மருத்துவமனையில் மருத்துவராக இருக்கும் டாக்டர் முஹம்மது ஷமீர், சித்த மருத்துவம் பற்றிப் பேசினார். அதன் நன்மைகள், முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினார் டாக்டர் ஷமீர்.
சிங்கப்பூர் தமிழ் இளையர்களின் சாதனைகளையும் முயற்சிகளையும் வரவேற்புரையில் பாராட்டிப் பேசினார் இந்திய முஸ்லிம் லீக் தலைவர் புதிய நிலா மு.ஜஹாங்கீர்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மாணவர்கள் அவர்களாகவே முன்வந்து தமிழ்மொழியின் சிறப்பைப் பற்றிப் பேசுவது சிறந்தது என்று இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் அ.முஹம்மது பிலால் கூறினார்.
"தமிழில் எழுதி, படித்து, வாசித்து, தொடர்ந்து உரையாடினால்தான் அது காலத்திற்கும் நிலைக்கும். எண்ணத்துக்கும் எழுத்துக்கும் இடையே இருக்கும் தொடர்பினால் சுயமாக தமிழில் யோசித்து எழுதும்போது, சிந்தனையும் மேம்படும் என்ற நம்பிக்கையால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் இளையர்களுக்கு தொடர்ந்து நடத்தப்படும்," என்று பிலால் குறிப்பிட்டார்.

