தமிழர் மரபு குறித்து அறியப்படாத, ஆர்வமூட்டும் பல வரலாற்றுத் தகவல்களை எளிய முறையில் இளையர்களிடம் கொண்டுசெல்லும் முயற்சியாகக் காணொளிக் குறுந்தொடர் ஒன்றைத் தமிழர் பேரவையின் இளையரணி உருவாக்கியுள்ளது.
அக்காணொளிகளில் இளையரணி உறுப்பினர்கள் உரையாடல்வழி தமிழர் மரபைப் பற்றிய பல முக்கியத் தகவல்களை எடுத்துரைத்துள்ளனர். அக்காணொளிகளை தமிழர் பேரவை இளையர் அணியின் இன்ஸ்டகிராம், டிக்டாக் பக்கங்களில் காணலாம்.
இதுகுறித்துக் கருத்துரைத்த சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மைய இளையர் பிரிவின் தலைவர் செம்பியன் சோமசுந்தரம், 30, "சமூக ஊடகமும் தொழில்நுட்பமும் இளையர்களிடம் தமிழ்மொழியையும் தமிழ் மரபையும் கொண்டு சேர்ப்பதற்கான கருவிகள். அவற்றைப் பயன்படுத்தி இளையர்களே இளையர்களுக்காக நம் வரலாற்றை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியே இது," என்று கூறினார்.
காணொளிகளுக்கான தரவுகளை சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் வழங்கி உதவியுள்ளது.
"இக்கால இளையர்களின் பரபரப்பான வாழ்க்கைமுறையில் எங்களுடைய கவனத்தைச் சிதறடிக்காவண்ணம் குறைந்த நேரத்திற்குள் கருத்துகளைக் காணொளி வாயிலாக எடுத்துச்செல்கிறோம். இம்முயற்சிக்குக் கிடைத்த வரவேற்பு பேரூக்கம் அளிக்கிறது," என்று தமிழர் பேரவை இளையரணியின் திட்டத் தலைவர் அரவிந்த் ஜெயக்குமார், 21, கூறினார்.
காணொளி தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள ஸ்ரீசக்தி நெடுஞ்செழியன், 21, "இளையர்களுக்குப் பயனுள்ள கருத்துகளை எளிய முறையில் விளக்கும் இம்முயற்சியில் ஈடுபடுவது சிறந்ததோர் அனுபவம். நம் வரலாறு பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என ஊக்கம் அளிக்கிறது," என்றார்.
செய்தி: மோனலிசா

