மோனலிசா
கல்வி அனைவருக்கும் எளிதில் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் புதுமையான பள்ளிக்கூடம் ஒன்றை பங்ளாதேஷின் பாருளியா பாரா கிராமத்தில் கட்டி வருகிறார் சிங்கப்பூரரான வினிதா செல்வம், 27.
“பெரும்பாலான பள்ளிகள் போல் பாடத்திட்டங்களும் தேர்வுமுறைகளும் இந்தப் பள்ளிக்கூடத்தில் இருக்காது. வயது பேதமின்றி பள்ளிக்கு வருவோர் தாமும் கற்று, தமக்குத் தெரிந்தவற்றைப் பிறருக்கும் கற்பிக்கும் ஒரு தளமாக இப்பள்ளியை அமைக்க முயல்கிறோம்,” என்று கூறினார் வினிதா.
தற்சமயம் சிங்கப்பூரில் அரசாங்க ஊழியராகப் பணியாற்றிவரும் அவர், இளம் வயதிலிருந்தே பொருளாதார ரீதியாகவும் மனதளவிலும் பல நெருக்கடிகளை அன்றாடம் சந்தித்து வளர்ந்தார்.
வினிதாவின் தாயார் தம் வாழ்நாளின் பெரும்பகுதியைத் துப்புரவுத் தொழிலாளியாகவே உழைத்துக் கழித்துவிட்டார். கல்விதான் ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய வாழ்வில் சம்பாதிக்க வேண்டிய மிகப்பெரிய சொத்து எனத் தாயார் போதித்தது, பதின்ம வயதிலிருந்த வினிதாவின் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. வறியவரின் கல்விக்காக தம்மால் இயன்றதைச் செய்திட வேண்டும் என்ற கனவு அவரின் மனதில் வேரூன்றியது.
குடும்பச் சூழல் காரணமாக 17 வயதில் வேலைக்குச் சென்ற வினிதா, தம்முடைய வருமானத்தின் ஒரு பகுதியைத் தமது கனவிற்காக சேமித்து வந்தார். ஓய்வு நேரத்தைத் தொண்டூழியத்தில் செலவிட்டு வந்த வினிதா, சக தொண்டூழியராக இருந்த ஃபாருக் இஷாக்கின் நட்பைப் பெற்றார். அந்த நட்பு தமது கனவு நனவாக அடித்தளமாக அமைந்தது என்று பகிர்ந்தார்.
அச்சமயம் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்து வினிதாவின் நண்பர் ஃபாருக், பங்ளாதேஷ் நாட்டவர். மாணவர் அனுமதியில் சிங்கப்பூரில் படித்துவந்த ஃபாருக், தமது ஊரில் விழிப்புணர்வற்ற நிலையில் அடிப்படை கல்வியறிவுகூட கிடைக்காமல் வாடும் பிள்ளைகளின் நிலையை வினிதாவிடம் எடுத்துக்கூறினார்.
பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் பிள்ளைகளின் கல்வியைத் தொடக்க நிலையிலேயே பெற்றோர் பலர் நிறுத்திவிடுவதும் பெண் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் முடித்துவிடுவதும் அவ்வூரின் வழக்கம் என்றார் ஃபாருக்.
அந்தப் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடக் கூடாது என்ற எண்ணம் வினிதாவிற்கு மேலோங்கவே தொடர்ந்து பல ஆண்டுகள் பல்வேறுவித பணிகளை மேற்கொண்டு பணத்தைச் சேமித்து வந்தார். இதற்குள் ஃபாருக் தமது கல்வியை முடித்து மருத்துவச் சேவையைத் தொடர சொந்த ஊருக்குத் திரும்பினார்.
2022ஆம் ஆண்டு தம்முடைய நண்பர் உதவியுடன் பாருளியா பாரா கிராமத்தில் ஏறத்தாழ 6,500 சதுரடி பரப்பளவில் நிலம் ஒன்றை வாங்கினார் வினிதா. தற்போது ஈரடுக்கு மாடிப் பள்ளிக்கூடம் ஒன்று அங்கு கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் கட்டிமுடிக்கப்படும் இப்பள்ளியை, கிராம மக்கள் வெகுவாக வரவேற்பதாகக் கூறினார் நரம்பியல் நிபுணரான ஃபாருக் இஷாக், 33. இவர் தம் குடும்பத்துடன் இணைந்து இப்பள்ளியின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
எதிர்காலத்தில் தொண்டூழிய ஆசிரியர்களின் உதவியுடன் கட்டணம் பெறாமல் இப்பள்ளியை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக வினிதா தெரிவித்தார்.