கருணாநிதி துர்கா
‘மிஸ் சிங்கப்பூர்’, ‘மிஸஸ் சிங்கப்பூர்’ போன்ற போட்டிகளில் இந்திய அழகிகள் தன்னம்பிக்கையுடன் பங்கேற்று பட்டங்கள் வென்று வருகின்றனர். இந்த அழகிப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள 40 வயது கோமதி ஜெயக்குமார், ‘மிசஸ் சிங்கப்பூர் பிளேனட்’ பட்டத்தை வென்றுள்ளார்.
சிங்கப்பூரிலுள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கான அனைத்துலக அமைப்பின் (GOPIO Singapore) முதல் பெண்கள் பிரிவுச் சம்மேளனத்தை முன்னெடுத்துச் சென்றவர் கோமதி.
இந்த அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினராக இவர் உள்ளார்.
ஒற்றைப் பெற்றோராக தம்முடைய 11 வயது மகனை வளர்த்துவரும் இவர், பல தடைகளைக் கடந்துள்ளார்.
அழகுக் கலையில் ஆர்வமுடைய கோமதி 20 வயதாக இருந்தபோது அத்துறைக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் பல தேடிவந்தன. ஆயினும் படிப்பிலும் வேலையிலும் கவனம் செலுத்தியதால் அந்த வாய்ப்புகளை நழுவவிட்டார் அவர்.
பின்னர், தமது 29வது வயதில் மணவிலக்கு ஆனதை அடுத்து குழந்தை வளர்ப்புடன் பல பொறுப்புகளையும் அவர் சுமக்கவேண்டியிருந்தது.
இடையில் தமக்கு நெருக்கமான சிலரை இழக்கவும் நேரிட்டது. பல சவால்களைக் கடந்து இன்று தன்னம்பிக்கையுடன் நடைபோடுகிறார் கோமதி.
அழகிப் போட்டியின் ஓர் அங்கமாக ஒவ்வொரு போட்டியாளரும் ‘365 புற்றுநோய் தடுப்பு சங்கத்திற்கு’ நிதி திரட்டினர்.
இச்சங்கத்திற்காக கோமதி கிட்டத்தட்ட $8,000 திரட்டினார்.
சங்கத்தின் தொண்டூழியராகச் சேர மேலும் அதிகமானோரை ஊக்குவிக்கவும் விரும்புகிறார் அவர். முதன்முறையாக அழகிப் போட்டியில் கலந்துகொண்ட அவர், வெற்றியும் பெற்றுள்ளார்.
“வயதை ஒரு தடையாகக் கருதவேண்டாம். வாழ்க்கையில் சவால்களைச் சந்தித்து வரும் பெண்களுக்கு நான் ஒரு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன். மனதில் தன்னம்பிக்கையும் உறுதியும் இருந்தால் நினைத்ததைச் சாதிக்கலாம்,” என்று கோமதி கூறினார்.
மெக்சிகோவில் நடக்கவிருக்கும் ‘மிஸஸ் பிளேனட்’ அழகிப் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து கலந்துகொள்ளவிருக்கிறார் கோமதி.