அனுஷா செல்வமணி
உள்ளூர் தமிழ் ஊடக உலகில் ‘சவுண்ட்’ என்று அழைக்கப்படும் ஜீ வே சௌந்தரராஜன் (படம்), தமிழ்மொழி மீது தாம் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாக, ‘ஃ’ என்ற பெயரில் எட்டு கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
தொடக்கத்தில் ‘எழில்’ என்று தலைப்பிடப்பட்ட இப்புத்தகம், பின்னர் தம்முடைய நண்பரும் மறைந்த கலைஞருமான ஆனந்தக்கண்ணனை நினைவுகூரும் வகையில் ‘ஃ’ என்றானது.
தமது வாழ்க்கைப் பயணத்தைப் புத்தகமாக்கி அனைத்து வயதினரும் படித்துப் புரிந்துகொள்ளும் வண்ணம் உணர்வுபூர்வமாக எழுதப்பட்டுள்ளதாக திரு சௌந்தரராஜன் கூறினார்.
ஒரு கலைஞன் வாசித்துவிட்டு தன்னையும் அதனுடன் தொடர்புப்படுத்திக்கொள்ளும் விதமாக எளிய பாணியில் கற்பனை கலந்த தொகுப்பாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது என்றும் தமிழ் மொழிக்கு இந்தப் புத்தகம் சமர்ப்பணம் என்றும் அவர் கூறினார்.
திரு சௌந்தரராஜனின் கதை எழுதும் கனவுப்பயணம் 12 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டது.
இம்மாதம் மே 7ஆம் தேதி தமது 50வது பிறந்தநாளை முன்னிட்டு புத்தகத்தை இந்திய மரபுடைமை நிலையத்தின் வளாகத்தில் வெளியிட்டார் அவர்.
2014ல் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்திற்கு மனைவியுடன் குடிபெயர்ந்த திரு சௌந்தரராஜன், அவ்வப்போது சிங்கப்பூருக்கு வந்து தமிழ்மொழி சார்ந்த நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
சிறுகதைகளை எழுதி முடிக்க அவருக்கு நான்கு ஆண்டுகள் ஆனபோதும் தற்போது தமக்கு சிறப்பான ஒரு நாளில் தமது படைப்பை வாசகர் உலகத்திற்கு அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்வதாக திரு சௌந்தரராஜன் குறிப்பிட்டார்.
புத்தக வெளியீட்டு விழா வின் சிறப்பு விருந்தினராக இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைமை நிர்வாகி பவானி தாஸ் கலந்து கொண்டார்.
திரு சௌந்தரராஜனின் குடும்ப உறுப்பினர்களும் நெருங்கிய நண்பர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
“கவிதைபோல சுருக்கமான வாக்கியங்களால் அனைவரும் எளிதில் புரிந்து உணரும்படி சௌந்தரராஜன் கதைகளை எழுதியுள்ளார். மூன்று கதைகளைப் படித்துவிட்டேன். மற்ற கதைகளையும் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்,” என்று கூறினார் ஊடகத்துறையைச் சேரந்த நடிகை சக்தி.
புத்தகத்தின் விலை $15.