ஆ. விஷ்ணு வர்தினி
ஷாஃபிக் சையது மலாய் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் சிறுவயதிலிருந்தே தமிழின்பால்தான் அவருக்கு ஆர்வம் அதிகம். இசைக் கலைஞராக வலம்வரும் அவர், ‘மயக்கம்’ எனும் தமிழ்த் தனிப்பாடலை அண்மையில் வெளியிட்டார்.
இசைத்துறையில் தன்னிச்சைக் கலைஞர்களாக ஷாஃபிக் சையது, பிரவின் சிவராமன் ஆகிய இருவரும் காலடி எடுத்துவைத்துள்ளனர். ஷாஃபிக் இசை அமைத்தும் குரல் கொடுத்தும் உள்ள ‘மயக்கம்’ பாடலை, பிரவின் தயாரித்துள்ளார்.
கடந்த மாதம் இப்பாடல் இணையத்தில் வெளியானது. ‘ராப்’ இசை இணைக்கப்பட்டு, இளையர்களை ஈர்க்கும் நவீனமயமான முயற்சியாக இப்பாடல் அமைந்துள்ளது. காதல் பாடலான இது, தமிழகக் கலைஞர் எம்சி செந்தமிழன், மலேசியக் கலைஞர் ஷீசே ஆகியோரின் பாடல் வரிகளைக் கொண்டுள்ளது.
ஆங்கில ராப் இசையில்தான் ஷாஃபிக்கின் இசைப்பயணம் தொடங்கியது. அதன் பின்னர் ‘சங்கீதம்’ எனும் அவரின் முதல் தமிழ்த் தனிப்பாடல் வெளியானது. ‘மயக்கம்’ இன்னும் கூடுதலான தமிழ் பாடல் வரிகளைக் கொண்டதாக அமையதிட்டமிட்டதாக ஷாஃபிக் கூறினார்.
“தமிழில் பல சொற்களைச் சரியாக உச்சரிக்காவிட்டால் அவை தவறான பொருள் தரும். உச்சரிப்பைத் திருத்திக்கொள்ள இந்த அனுபவம் உதவியது,” என்றார் 26 வயது ஷாஃபிக்.
அதில் தொடங்கி பின்னர் தமிழிசையில் கால்பாதிக்க எண்ணிய அவருக்கு, பிரவினுடன் கைகோர்க்கும் வாய்ப்பு கிட்டியது. இசைத் தயாரிப்பாளரான 25 வயது பிரவின், கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாய் அப்பணியில் முழுநேரமாக உள்ளார்.
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இசை தொடர்பான ‘சானிக் ஆர்ட்ஸ்’ பட்டயப்படிப்பை மேற்கொண்டிருந்த அவர், இப்பாடல் குறித்து கூறுகையில், “சிங்கப்பூரில் தமிழ் தன்னிச்சைப் பாடல்கள் கொவிட்-19 காலத்துக்குப்பின் சற்றே தலைதூக்கி உள்ளன. ஆனாலும் இப்பாடல்களுக்கு ஆதரவு குறைவு,” என்றார்.
தன்னைச் சுற்றி இருந்த பலரின் அவநம்பிக்கையும் ஷாஃபிக்கிற்குச் சவாலாக அமைந்தது.
“இதில் நிலைத்திருக்க முடியுமா என்று என் பெற்றோரும் நான் சந்தித்த சிலரும் கேள்வி எழுப்பினர். ஆனால், இசையில் யார் வேண்டுமானாலும் தடம் பதிக்கலாம் எனும் நிலை சிங்கப்பூரில் நிலவுவது ஆறுதல் அளிக்கிறது,” என்றார் அவர்.
இசைத்துறையில் நீண்டநாள் பயணிக்கும் ஆர்வம் கொண்டிருக்கும் இருவரும் தொடர்ந்து தமிழில் தரமான படைப்புகளை முன்னெடுக்கும் முனைப்பில் உள்ளனர்.
பாடலைக் கேட்க: https://youtu.be/y-G6A33X6u4