சபிதா ஜெயகுமார்
சிங்கப்பூரைக் கட்டியெழுப்பப் பாடுபட்ட சிங்கப்பூரர்களைக் கொண்டாடும் வகையில் அமையவுள்ளது சிங்கப்பூர்ச் சிற்பிகள் நினைவகம். அதன் முன்னோடி நிகழ்வாக ‘புத்துணர்வு: ஒரு புதிய சிங்கப்பூர் உணர்வை உருவாக்குவோம்’ எனும் இருவழித்தொடர்பு பேருந்துச் சுற்றுலாக்கள் இடம்பெறவுள்ளன.
“நம் தேசத்தின் எதிர்காலத்தை எவ்வாறு இணைந்து வடிவமைக்கலாம்? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தேட இந்தக் கண்காட்சிப் பயணம் உதவும்,” என்று கூறுகிறது சிங்கப்பூர்ச் சிற்பிகள் நினைவகம்.
“சிங்கப்பூர்ச் சிற்பிகள் நினை வகம் சிங்கப்பூரர்களின் கதைகளை எடுத்துச்சொல்லும் வகையில் அமைவது நோக்கம். தேசத்தில் சிங்கப்பூரர்கள் கொண்டுள்ள ஈடுபாட்டை வளர்க்க இதுபோல பல தளங்களை உருவாக்கு வோம்,” என்று கூறினார் சிற்பிகள் நினைவகக் குழுவின் துணைத் தலைவர் திரு லீ ஸு யாங்.
சிங்கப்பூரின் அடித்தளத்தை வலிமையானதாக உருவாக்கப் போராடியவர்களின் வீரத்தையும் சிந்தனையையும் போற்றும் வகையில் கண்காட்சி அமையும்.
சிங்கப்பூர் தலைவர்களும் மக்களும் ஒன்றுதிரண்டு நவீன சிங்கப்பூரைக் கட்டியெழுப்பிய தொடக்க காலத்தில் அவர்களிடம் இருந்த, பன்முகக் கலாசாரத்தைப் பாராட்டும் தன்மை, துணிவு, மீள்திறன் முதலிய விழுமியங்களை பறைசாற்றும் கதைகளும் கண்காட்சியில் உள்ளடங்கும். இவ்விழுமியங்கள்தான் சிங்கப்பூரின் முக்கிய அம்சங்களாக வலுப்பெற்றுள்ளன.
கண்காட்சி சில சிறப்பு அம்சங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கண்காட்சி பங்கேற்பாளர்களுக்குத் தனிப்பட்ட கதைசொல்லும் அனுபவத்தைத் தருகிறது. சுவாரசியமான அனுபவத்தை வழங்கும் வகையில் பயண வழிகாட்டிகள் சிங்கப்பூர் வரலாற்றில் இடம்பிடித்த முக்கியமானவர்கள் போன்று பாவனை செய்து கண்காட்சியைச் சுற்றிக்காட்டுவர்.
“பேருந்தில் ஏறியது முதல் இறுதிவரை பொதுமக்கள் பல்வேறு கதைகள் மூலம் சிங்கப்பூரின் வரலாற்றையும் முற்காலத் தில் வாழ்ந்த மக்களின் அனுபவங்களையும் அறிந்துகொள்ள முடியும். பின்னோக்கி கடந்த காலத்திற்கு செல்லும் அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம்,” என்று குறிப்பிட்டார் சிங்கப்பூர்ச் சிற்பிகள் நினைவகத்தின் பங்காளித்துவம், ஈடுபடுத்தல் பிரிவுக்கான மூத்த மேலாளர் திருவாட்டி கிரேஸ் லாவ்.
நவீன சிங்கப்பூரைக் கட்டியெழுப்புவதில் முக்கியப் பங்கு வகித்த சிங்கப்பூரின் முதல் பிரதமரான திரு லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாள் இவ்வாண்டு கொண்டாடப்படுகிறது.
அவரது பங்களிப்புகளையும் அவர் வகுத்த கொள்கைகளையும் நினைவுகூரும் வகையில், அவருடைய செயல்கள் எவ்வாறு தேசத்தின் பயணத்தை வடிவமைத்தன என்பதை விளக்கும் அங்கங்களும் கண்காட்சியில் இடம்பெறும்.
சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்துடன் இணைந்து படைக்கப்படும் இந்தக் கண்காட்சியைக் காண பேருந்துச் சுற்றுலாக்கள் ஜூன் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை இடம்பெறும்.
சுற்றுலாவின் பங்கேற்புக் கட்டணம் $5. இப்பயணம் குறிப்பிட்ட சில எம்ஆர்டி நிலையங்களில் தொடங்கும்.
கலந்துகொள்வோருக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அன்பளிப்புப் பை இருப்பு உள்ளவரை வழங்கப்படும்.
சுற்றுலா ஆங்கிலத்தில் நடத்தப்படும். தமிழ், சீனம், மலாய் மொழிகளில் சுற்றுலா வழிகாட்டலை விரும்புவோர் குழுக்களாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்ய founders_memorial@nhb.gov.sg என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும். மேல்விவரங்களுக்கும் பதிவுக்கும்: go.gov.sg/sybbustour