கருணாநிதி துர்கா
சிங்கப்பூரில் தமிழ் பேசும் சமூகத்தினரிடையே தமிழ்ப் புழக்கத்தை ஊக்குவிப்பதோடு இளையர்களிடம் மொழி ஆர்வத்தை வளர்க்க வேண்டும். மொழிதான் நமது அடையாளம். அதனை தொடர்ந்து கட்டிக்காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்று வளர்தமிழ் இயக்கத்தின் ஆலோசகர் குழுத் தலைவரும் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு விக்ரம் நாயர் வலியுறுத்தி உள்ளார்.
கொவிட்-19 கிருமித்தொற்றின் பிடியிலிருந்து சிங்கப்பூர் முழுமையாக மீண்டுள்ள இந்த ஆண்டில், தமிழ்மொழி விழா மீண்டும் நேரடியாக நடைபெற்றது. 17வது முறையாக தமிழ்மொழி விழாவை வெற்றிகரமாக நடத்திய இணை ஏற்பாட்டாளர் களுக்கு நன்றி தெரிவிக்கும் விருந்து உபசரிப்பு விழாவை வளர்தமிழ் இயக்கம் ஏற்று நடத்தியது.
சிங்கப்பூர் கல்சா சங்கத்தில் மே 29ஆம் தேதியன்று நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 100 பேர் கலந்துகொண்டனர்.
இவ்வாண்டு தமிழ்மொழி விழாவில் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் பல்வேறு வயதினரையும் சென்றடையும் வகையில் இருந்ததோடு மக்களிடத்தில் வரவேற்பைப் பெற்றதையும் உணரமுடிந்ததாகக் கூறினார், கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவின் தலைவருமான விக்ரம் நாயர்.
இந்த ஆண்டு 67 விழுக்காடு நிகழ்ச்சிகள் மாணவர்கள், இளையர்களை இலக்காகக்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாணவர்களின் பங்கேற்பு இருந்ததை மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் வளர்தமிழ் இயக்கத் துணைத் தலைவர் திரு ஜோதி மாணிக்கவாசகம்.
“சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் ‘சொல்லைத் தாண்டி வருவாயா’ நிகழ்ச்சியில் அதிகமான இளையர்கள் கலந்துகொண்டதோடு ஏற்பாட்டுக் குழுவில் சேரவும் பலர் முன்வந்தனர்,” என்றார் சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் இளையர் பிரிவு தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான மூலா வெங்கடேஷ் அஷ்வினி.
“கொவிட்-19 நோய்ப்பரவலுக்குப் பின்னர் சிறார்களுக்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அவற்றின் முதன்மை நோக்கங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்ததில் மிக்க மகிழ்ச்சி,” என்று கூறினார் இளம்பருவ வளர்ச்சிக்கான தேசியக் கல்விக் கழகம் நடத்திய ‘அன்பு + ஆராதனை = நம்மிடம்’ என்ற நிகழ்ச்சியின் ஏற்பாடுக் குழு தலைவரான அருண் ஜூட் லோபெஸ்.
“இளையர்கள் தமிழில் பேசுவதை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை வளர்தமிழ் இயக்கம் தொடர்ந்து ஏற்பாடு செய்யும். எந்த நிகழ்ச்சியும் இரண்டு மணி நேரத்துக்குள் முடிந்தால் சிறப்பாக இருக்கும்,” என்றார் திரு விக்ரம் நாயர்.