தமிழ்ச் சமூகத்தின் தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்த ‘தமிழவேள்’ கோ சாரங்கபாணியை நினைவுகூரும் வகையில் மலேசிய இந்து சங்கம் ஸ்கூடாய் பேரவை மே 20ஆம் தேதி தமிழர் திருநாளைக் கொண்டாடியது. ஜோகூர் பாருவிலுள்ள ஸ்கூடாய் தாமான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 500 பேர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தமிழர் திருநாள் பற்றி உரையாற்றிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கி. ரவின்குமார், மலேசியர்களின் தமிழ்ப் படைப்புகளைக்கொண்ட 100 பக்க விழாமலரை வெளியிட்டார். திரு சாரங்கபாணியையும் அவரைப் போன்ற முன்னோடிகளையும் வருங்காலச் சந்ததியினர் நினைவில் நிறுத்த 4வது ஆண்டாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாக ஏற்பாட்டுக்குழுத் தலைவர் சேகரன் கன்னியப்பன் தமிழ் முரசிடம் கூறினார்.
“ மலேசிய தமிழ்ச் சமூகத்திற்குத் தமிழவேளின் பங்கு மிகவும் அளப்பரியது. தமிழர் மணிமன்றத்தை அவர் எங்களுக்காகத் தொடங்கிவைத்தார். அவரது பாணியில் நாங்கள் தொடர்ச்சியாக தமிழ் மரபைக் கட்டிக்காக இதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்,” என்றார் திரு சேகரன்.
மியன்மாரில் தமிழ்மொழி வளர்ச்சியை ஊக்குவிக்க கோ. சாரங்கபாணியின் பெயரில் தமிழ்ப்பணிகளைச் செய்துவரும் திரு சேகரன், இந்நிகழ்ச்சியின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றது குறித்து மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிங்கப்பூரர்களில் ஒருவரான மூத்த கல்வியாளரும் முன்னாள் வானொலி படைப்பாளருமான திருமதி மீனாட்சி சபாபதி, குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்ததுடன் வாழ்த்துரை ஒன்றையும் ஆற்றினார்.
நம்மை நாம் அறிந்தால் வாழ்வில் உயராலாம் என்று தம் உரையில் குறிப்பிட்ட திருமதி மீனாட்சி, பிறர் கேள்விகளுக்கு உரிய விடைகளைத் தருவதற்கு நாம் நம் பண்பாட்டைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியம் எனக் கூறினார். பண்டைய இலக்கியங்களை உரக்க வாசிக்கும்போது அதன் ஓசைநயம் நம்மை அமைதி அடையச் செய்யும் என்றும் அவர் சொன்னார்.
சிங்கப்பூரின் திரு கோ. சாரங்கபாணி மலேசியாவிலும் போற்றப்படுவதைக் காணும்போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பதாக சிங்கப்பூரிலிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான திருமதி சுமதி துரை அரசு, 43, தெரிவித்தார்.
“ஆங்கிலம் கலக்காமல் இயன்றவரை தூய தமிழிலில் பேசினேன். அதற்காக நிகழ்ச்சியில் இருந்தவர்கள் என்னைப் பாராட்டினார்கள்,” என்றார் திருமதி சுமதியின் மகன் வீர் ஆதித்ய ஹரிஹரராயன். இவர் ஹவ்காங் தொடக்கப் பள்ளியில் பயில்கிறார்.