சபிதா ஜெயகுமார்
சூழ்நிலைகள் தன்னைப் பிள்ளைகளிடம் இருந்து விலக்கி வைத்தாலும் அவர்களுக்காகவே உயிர் வாழ்வதாகக் கூறிய திரு நூர் முகமது ஷா, சிறந்த தந்தையாக விளங்கும் நோக்கில் கற்றலில் இறங்கி உள்ளார்.
தொழில்நுட்பராகப் பணிபுரியும் அவர் கருத்து வேறுபாடு காரணமாக ஐந்தாண்டு காலமாகத் தன் மனைவியைப் பிரிந்து வாழ்கிறார்.
பெற்றோர் பிரிந்து வாழ்வதால் மூன்று பிள்ளைகளும் பாதிக்கப்படுவார்களே என்று எண்ணி மனம் துடித்தார்.
"பிள்ளைகள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி அது அவர்கள் கல்வியையும் உடல்நலத்தையும் பாதிக்குமோ என்று வருந்தினேன்," என்றார் நூர்.
குடும்பத்தினர் அனைவரும் ஒரே கூரையின்கீழ் இல்லையே என்ற கவலை பிள்ளைகளின் மனத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடுமோ என்று அஞ்சியதாகக் கூறினார் அவர்.
பிள்ளைகளுடன் வாழ்ந்த காலத்தில் நடந்த சம்பவங்களின் நினைவு மனத்தில் தோன்றும்போதெல்லாம் அவர்களைக் காண உள்ளம் ஏங்கும் என்றார் நூர்.
"நிச்சயமாக, இதுபோன்ற சூழலை ஏற்றுக்கொள்வது மிகக் கடினமான சவால். ஒவ்வொரு முறை சந்தித்துப் பிரியும்போதும் அவர்களின் கவலையான முகங்கள் என்னை வாட்டும்," என்றார் அவர்.
பிள்ளைகள் தற்போது தாயின் பாதுகாப்பில் உள்ளனர்.
அதிகாரிகள் அனுமதிக்கும் கால அளவில் மட்டுமே அவர் தன் பிள்ளைகளைச் சந்தித்து நேரம் செலவிட முடிகிறது.
வெவ்வேறு நேரங்களில் வேலைபார்க்க வேண்டியிருப்பதால் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடும் வாய்ப்புகளைக் கண்டறிவது கடினமாக இருப்பதாக அவர் கூறினார்.
அதிக நேரம் அவர்களுடன் செலவிட முடியாதது தனக்குப் பெரும் மன வலியைத் தருவதாகக் கூறும் அவர் பிள்ளைகளுடன் கூடுதல் நேரம் செலவிட முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
முன்பு பிள்ளைகள் தவறு செய்தால் கண்டிக்கும் வேளையில் அதிகம் சினமுற்றதாகக் குறிப்பிட்ட நூர், தான் அப்போது கடுமையாக நடந்துகொண்டதை எண்ணி இப்போது வருந்துகிறார்.
பிள்ளைகளுடன் நேரம் செலவிட சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் ஏற்பாடு செய்யும் நடவடிக்கைகள் பலவற்றில் கலந்துகொள்கிறார்.
அந்நடவடிக்கைகள் பிள்ளைகளின் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவும் அவர் வாழ்வில் நடந்தவற்றை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கின்றன.
பெற்றோருக்குரிய பயிலரங்குகளில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கலந்துகொண்டு தன் பிள்ளைகளுக்கு சிறந்த தந்தையாக விளங்க முயல்கிறார் நூர்.
"தொடர்ந்து இதுபோன்ற பயிலரங்குகளுக்குச் சென்று என்னை மேம்படுத்திக்கொண்டே இருப்பேன்.
"பிள்ளைகளுக்கு ஏற்றவாறு என் தொடர்புத் திறன்களை மெருகேற்றிக்கொள்ள இவ்வகுப்புகள் உதவுகின்றன," என்றார் அவர்.
"முக்கியமாக, பிள்ளைகளுடன் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது இனிமையான நினைவுகளை உருவாக்க வாய்ப்பளிக்கின்றன.
"என்னால் முடிந்த அளவு அந்த நேரத்தில் அவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை வழங்க முயல்வேன்," என்று கூறினார் நூர்.
பிள்ளைகளுக்குத் தன் வாழ்வில் அதிக முன்னுரிமை வழங்கும் அவர், அவர்களுக்காக எப்போதும் பொறுமையுடன் காத்திருக்கவும் எந்தத் தயக்கமும் இன்றி தியாகம் செய்யவும் தயாராக உள்ளார்.
"என் சொந்த எதிர்பார்ப்புகள் அவ்வளவு முக்கியமில்லை. பிள்ளைகளுக்காக நான் அயராது உழைப்பேன்," என்று உறுதியுடன் கூறினார்.
பிள்ளைகளைப் பிரிந்து வாழும் நாள்கள் அவர்களுடன் செலவிடக் கிடைக்கும் நொடிகளை விலைமதிப்பற்றவையாக்குகின்றன என்று குறிப்பிட்டார்.
ஒவ்வோர் ஆண்டும் தந்தையர் தினத்தில் பிள்ளைகள் இதுவரை வழங்கிய அன்பளிப்புகள் அனைத்தையும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறார்.
ஓவியத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள அவரது மூத்த மகள் ஆர்வத்துடன் வரைந்து தரும் வாழ்த்து அட்டைகளை ஒவ்வோர் ஆண்டும் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் கூறினார் நூர்.
"சூழ்நிலையால் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டாலும் குழந்தைகளை என்றும் குறைகூற முடியாது. என் பிள்ளைகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும்.
"அவர்கள் மேன்மேலும் திறன்களை வளர்த்துக்கொண்டு வாழ்வில் பல வெற்றிகளை அடைய வாழ்த்துகிறேன்," என்று கூறினார் திரு நூர்.
பிள்ளைகளின் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு நல்ல வழிகாட்டியாக அங்கம் வகிப்பது மட்டுமே தனது ஆசை என்றார் அவர்.

