பல காலமாக பிள்ளைகள், இளையர்களின் மனநலனைப் பராமரிக்க உதவிவருபவர் விக்னேஷ்வரி ஜகாதரன், 59. இவரது 22 வயது மகன் 2015ல் மன அழுத்தம் காரணமாக தமது உயிரை மாய்த்துக்கொண்டார்.
மகனை இழந்த துயரில் துவண்டுவிடாது, சமூகத்தில் இருக்கும் பிள்ளைகளின் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார் திருமதி விக்னேஷ்வரி.
இளம் வயதினரின் நலனை அக்கறையுடன் கவனித்து, அவர்களுக்கு மனநலப் பராமரிப்பு பற்றி எடுத்துக் கூறி வருகிறார்.
எல்லாப் பிள்ளைகளிடத்தும் தாயன்பைப் பொழிந்துவரும் திருமதி விக்னேஷ்வரி, இதுவே தமது மகனின் கடைசி ஆசையாய் இருந்ததாகக் கூறினார்.
பிறர் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்திய பெண்களைக் கெளரவிக்கும் ‘எஸ்ஜி ஹீரோயின்’ விருதை 2022 மார்ச் மாதம் இவர் பெற்றார். அத்துடன் இவருக்கு ‘பீப்பள்ஸ் சாய்ஸ்’ விருதும் கிட்டியது.
இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பின்போது ஒளியேறிய குறும்படங்களில் சிறந்த சமூகச் சேவையாளர்களில் ஒருவரான திருமதி விக்னேஷ்வரி இடம்பெற்று இருந்தார்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக கல்வியமைச்சில் பள்ளி மனநல ஆலோசகராகப் பணிபுரியும் இவர், பதின்ம வயது மாணவர்களின் மனச்சுமைகளைக் குறைக்க உதவுகிறார். இதற்கு முன்னதாக, கிரேஸ் ஹேவன் சிறார் இல்லத்தில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார்.
இளம் வயதில் மனநலப் பாதிப்புக்கு ஆளானதாகக் குறிப்பிட்ட திருமதி விக்னேஷ்வரிக்கு உளவியல், மனநலம் போன்றவை குறித்த ஆர்வம் அப்போதிலிருந்தே தொடங்கியது.
நிபுணத்துவ மனநல ஆலோசனையில் முதுநிலைக் கல்வி பயின்ற திருமதி விக்னேஷ்வரி, இத்துறையின் புதிய நிகழ்வுகளையும் கோட்பாடுகளையும் தெரிந்துகொள்ள வாழ்நாள் கல்வி நிச்சயம் தேவைப்படுவதாகக் கூறினார்.
துன்பத்தில் தவிக்கும் இளையர்களின் மனதிற்கு உரம் ஊட்டுவதற்குத் தேவைப்படும் பண்புகளையும் திருவாட்டி விக்னேஷ்வரி விளக்கினார்.
“பேசுபவரின் சொற்களை நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கவேண்டும். அவர்களை சட்டென்று எடைபோட்டுவிடக் கூடாது. உதவி நாடும் பிள்ளைகளின் உணர்வுகளை அறிந்து, அவர்கள் பேசுவதை உங்கள் வார்த்தைகளிலே மீண்டும் சொல்லி உங்களது புரிதலைச் சரிப்படுத்தவேண்டும். அப்போதுதான் அவர்கள் மனம் திறந்து பேசுவர்,” என்றும் அவர் கூறினார்.
மனநலம் குறித்து வெளிப்படையாகப் பேசப்படும் போக்கு ஆரோக்கியமானது என்று கூறிய திருமதி விக்னேஷ்வரி, இந்த விவகாரத்தில் அமைப்புகளும் அரசாங்கமும் முன்னைவிட முனைப்புடன் செல்படுவதாகக் கூறினார்.