தமிழ் முரசு இதழுக்கு ஆதரவு கொடுத்து வரும் சந்தாதாரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் சந்தாப் பிரிவு, இரவு விருந்தினை வியாழக்கிழமை (செப்டம்பர் 7) நடத்தியது.
தமிழ் முரசு 88 ஆண்டு நிறைவை ஒட்டி நடத்தப்படும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளில் இவ்விருந்தும் அங்கம் வகிக்கிறது.
ரேஸ் கோர்ஸ் ரோட்டிலுள்ள ‘முத்துஸ் கறி’ உணவகத்தில் 120 பேர் இரவு விருந்தில் இணைந்து பல்வேறு விதமான உணவு வகைகளைச் சுவைத்து ஒருவரோடு ஒருவர் கலந்துறவாடினர்.
நிகழ்ச்சியில், தமிழ் முரசு வெளியிட இருக்கும் கைப்பேசிச் செயலி குறித்து மின்னிலக்க ஆசிரியர் எஸ். வெங்கடேஸ்வரன் விளக்கமளித்தார்.
இளையர்களைக் கவரும் முயற்சியாக பல்லூடகப் படைப்புகள், ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளிட்ட புதிய கூறுகள் இந்தச் செயலியில் இருக்கும் என்பதை அவர், விருந்தில் இருந்தோரிடம் தெரிவித்தார்.
அத்துடன் தமிழ் முரசின் ஒரு நிமிடச் செய்தியும் வலையொளி காணொளிகளும் அந்நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டன.
தமிழ் முரசின் ஃபேஸ்புக் பக்கத்தை 109 ஆயிரம் பேருக்கு அதிமானோரும் டிக் டாக் பக்கத்தை 33.4 ஆயிரம் பேரும் இன்ஸ்டகிராம் கணக்கை 5.4 ஆயிரம் பேரும் பின்தொடர்வதாக விவரம் பகிரப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் அதிர்ஷ்டக் குலுக்கு நடத்தப்பட்டது. மூன்று பரிசுகளும் இரண்டு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.
பாத்திரங்கள் உள்ளிட்ட சமையல் சாதனங்கள் பரிசுகளாகக் கொடுக்கப்பட்டன.
தமிழ் மொழியின் மீது ஆர்வம் இருப்பதாகக் கூறும் பகுதி நேர துணைப்பாட ஆசிரியர் பாலமுருகன் காமாட்சி, 45, தமக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது குறித்து பெருமகிழ்ச்சி அடைந்ததாகக் கூறினார்.
சிங்கப்பூரில் 23 ஆண்டுகளாகத் தமிழ் முரசு இதழை தினமும் காலையில் படித்து வந்த திருவாட்டி காமாட்சி, தமிழ் முரசு இவ்வாண்டு தந்திருந்த ஜெயிலர் திரைப்படத்தைக் காணும் வாய்ப்பைப் பெற்ற பின் இரண்டாவது முறையாக தமிழ் முரசு ஏற்பாடு செய்துள்ள ஒரு நிகழ்வில் கலந்துகொண்டார்.
செய்திகளையும் சிறுகதைகளையும் விரும்பிப் படிப்பதாகக் கூறிய திருவாட்டி காமாட்சி, கடந்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கிய ‘சனிக்கிழமை ஒரு சாமானியர்’ தொடர் தம்மைக் கவர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
முதல் பரிசு பெற்ற அலுவலக நிர்வாகி மாலா சின்னையா, 51, தமிழ் படிக்கத் தெரியாதவர் என்றும் தமது தோழி அழைத்ததால் வந்திருந்ததாகவும் கூறினார். பரிசு பெற்றதற்காகவும் சமூகத்துடன் இணையும் வாய்ப்பை இந்த விருது தந்திருப்பது குறித்தும் மகிழ்ச்சி அடைந்ததாக அவர் கூறினார்.