சிங்கப்பூரில் ‘மாஸ்க் ஸ்டூடியோஸ்’ நடத்திய ‘உன்னிகிருஷ்ணன் லைவ் இன் சிங்கப்பூர் 2023’ இசைக்கச்சேரி, ‘கார்னிவல்’ திரையரங்கில் அக்டோபர் 7, மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெற்றது.
செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் இக்கச்சேரிக்குச் சிறப்பு சேர்த்தார். உன்னி அவர்களின் சிறந்த ரசிகரான அவரே, உன்னி அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்தார்.
இக்கச்சேரிக்கு ‘ஸ்டார் விஜய்’ தொலைக்காட்சி வழங்கும் ‘சூப்பர் சிங்கர்’ புகழ் ‘மணி&பேண்ட்’ இசைக்குழுவினர் வாசித்தது மற்றோர் ஊக்கபானமாக அமைந்தது.
‘தமிழ்த் திரையிசைப் பாடலுக்கான தேசிய விருதைச் சொந்தமாக்கிய முதல் ஆண் பாடகர்’ என்ற பெருமைக்குரிய திரு உன்னிகிருஷ்ணன், ‘ரோஜா ரோஜா’ பாடலுடன் தொடங்கி, ‘என்னவளே அடி என்னவளே’, ‘இன்னிசை பாடி வரும்’ உள்ளிட்ட பாடல்களை பாடி பார்வையாளர்களைத் தன்வசப்படுத்தினார்.
அதுமட்டுமின்றி. தன் முதல் பாடலிலேயே தேசிய விருதை சொந்தமாக்கிய உன்னி அவர்களின் மகள் உத்தாராவும் இக்கச்சேரியில் ‘அழகே அழகே’, ‘உயிரும் நீயே’ பாடல்களை பாடியதோடு, தந்தையுடன் இணைந்து பாடி கைதட்டல்களைப் பெற்றார்.
தொடக்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகளால் மக்கள் மனந்தளராதபடி இசை மழையைப் பொழிந்து உற்சாகப்படுத்தினர் திரு உன்னிகிருஷ்ணனும் குழுவினரும்.
‘மாஸ்க் ஸ்டூடியோஸ்’ வழங்கிய ‘அல்டிமேட் பாடகர் 2023’ போட்டியின் வெற்றியாளர்களான ரெய்னாவுடன் ‘சுடும் நிலவு’, பவ்யசித்ராவுடன் ‘வாராயோ வாராயோ’ பாடல்களைப் பாடினார் திரு உன்னி.
மேலும், 600க்கும் மேற்பட்ட மேடைக் கச்சேரிகளை வழங்கியுள்ள உள்ளூர் பாடகர் திர பரசு கல்யாண், ‘புல்லட்’ பாடல் புகழ் ஹரிப்ரியாவுடன் இணைந்து ‘வீசும் காற்றுக்கு’ என்ற பாடலைப் பாடி அசத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் முன்னணிப் பாடகர் சுதாஷினி ராஜேந்திரனுடன் இணைந்து, ‘நிலவைக் கொண்டு வா’, ‘ஹைரா ஹைரா’ உள்ளிட்ட பாடல்களையும், கல்யாணியோடு இணைந்து ‘மழை மழை’ பாடலையும் பாடி அரங்கத்தினரை மெய்மறக்கச் செய்தார்.
பார்வையாளர்களின் உற்சாகம் சற்றும் குறையாத நிலையில், ஹரிப்ரியாவுடன் இணைந்து ‘மீனம்மா’, ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘நன்றி சொல்ல உனக்கு’, ‘எனக்கென ஏற்கெனவே’ உள்ளிட்ட பாடல்களை பாடினார் திரு உன்னி.
நான்காவது ‘சூப்பர் சிங்கர்’ போட்டியில் இரண்டாவதாக வந்த திரு சையத் சுபஹான், ‘ஓ வெண்ணிலா’, ‘ஏன் பெண்ணென்று’ உள்ளிட்ட பாடல்களை பாடி, ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிக்கு சிங்கப்பூரிலும் ரசிகர்கள் உள்ளனர் என்பதை நிரூபிக்கும் வகையில் கைதட்டுகளைப் பெற்றார்.
‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சி மூலம் ‘மண்ணின் குரல்’ என பெயர்பெற்ற பாடகர் திரு அருள்பிரகாசம் ‘தீண்டி தீண்டி’ என்ற பாடலை பாடியதோடு, கல்யாணியோடு இணைந்து ‘ஏ அசைந்தாடும்’ என்ற பாடலையும் பாடி, “என் குரலைப் போலவே உங்கள் குரலும் ஒலிக்கிறது,” என்று உன்னி அவர்களின் பாராட்டைப் பெற்றார்.
தொடர்ந்து ஹரிப்ரியாவுடன் இணைந்து ‘இவன் யாரோ’, ‘பல்லாங்குழியின் வட்டம்’ உள்ளிட்ட பாடல்களை பாடி பார்வையாளர்களை மயக்கினார்.
இதற்கிடையில், உன்னி அவர்களின் மாணவியான ஆதிரா, 11, ‘சீதா ராமம்’ திரைப்படத்தில் பாடிய பாடலுக்காக பாராட்டு பெற்றார்.
சுதாஷினியும் சையத்தும் இணைந்து ‘சேலையிலே வீடு கட்டவா’ பாடலை பாடி இரவுக்கு உணர்வு சேர்த்தனர்.
இறுதியாக, இக்கச்சேரியின் நாயகனும், உடன் பாடிய அனைத்து பாடகர்களும் ஒன்றிணைந்து, ‘சென்யொரீட்டா’ பாடலைப் பாடி கச்சேரியை நிறைவுசெய்தனர்.

