ஒற்றைத் தாயாராக இருந்தாலும், வயது நாற்பதைத் தொட்டாலும், தடைகளைத் தகர்த்து, தன்னைத் தானே உற்சாகப்படுத்தி மாடலிங், தொண்டூழியம், அரசுப் பணி என பம்பரமாகச் சுழல்கிறார் திருவாட்டி கோமதி ஜெயகுமார்.
சிங்கப்பூர் இந்திய மாடலிங் நிறுவனம் நடத்திய ‘சிங்கப்பூர் இந்திய ஃபேஷன் ரன்வே 2023’ விருது பெற்றுள்ள இவர், ‘கனவொன்று இருந்தால் அதனை நனவாக்கும் வாய்ப்பைத் தேடிப் பெற வேண்டும். யாரும் அதனைத் தடுக்கவிடாமல் துரத்திப் பிடிக்க வேண்டும்’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுகிறார்.
தற்பொழுது கோபியோ சிங்கப்பூர் பெண்கள் பிரிவின் செயற்குழு உறுப்பினராகச் செயல்படும் கோமதி, “நம் வாழ்வின் சிறந்த காலம் எதுவென்பதை நாமே தீர்மானிக்க வேண்டும்,” என்கிறார்.
இவ்வாண்டுக்கான ‘மிசஸ் சிங்கப்பூர் பிளேனட்’ விருதையும் வென்றுள்ள இவர், 2024இல் மெக்சிகோவில் நடக்கவிருக்கும் ‘மிஸஸ் பிளேனட்’ அழகிப் போட்டியில் சிங்கப்பூர் சார்பில் கலந்து கொள்ள உள்ளார்.
தனக்குக் கிடைத்த எந்தவொரு வாய்ப்பையும் நழுவவிடாமல், உண்மையான உழைப்பைச் சிந்தியதால்தான், வயதையும் தாண்டி தனக்கு முற்றிலும் அறிமுகம் இல்லாத மாடலிங் துறையிலும் கால்பதிக்க முடிந்ததாக பெருமையுடன் குறிப்பிட்டார் திருவாட்டி கோமதி.
தனது 20களை ஐரோப்பிய கண்டத்தில் கழித்த இவர், 30வயதிற்கு மேல் சிங்கப்பூர் திரும்பி, தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட பல கசப்பான சம்பவங்களைக் கடந்து, சுயம்புவாக, வலிமைமிக்கப் பெண்ணாக உருவெடுத்துள்ளதாகச் சொல்கிறார்.
தன் தாயார்தான் வாழ்வின் முன்மாதிரி என்ற இவர், தொடர்ந்து தான் கடந்து வந்த பாதையையும், தனது வெற்றிக்கு உதவிய தன்னம்பிக்கையையும் பல பெண்களிடம் கொண்டுசேர்க்கும் பணியில் ஈடுபட விழைவதாகவும் இவர் குறிப்பிட்டார்.