சிங்கப்பூரில் மொழிபெயர்ப்பையும் மொழிகளின் தரத்தையும் உயர்த்தும் நோக்கில் தேசிய மொழிபெயர்ப்புக் குழுவால் ‘மொழிபெயர்ப்புக் குடிமக்கள் திட்டப்பணி’ 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில் இதுவரையில் தமிழ், சீனம், மலாய் மொழிகளில் ஏறத்தாழ 2,300க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.
இத்தகைய மொழிபெயர்ப்பாளர்கள், அரசாங்கத் தகவல்களின் மொழிபெயர்ப்புகளில் உள்ள பிழைகளைக் கண்டறிவதோடு அவற்றுக்கான சரியான மொழிபெயர்ப்பையும் அளித்து உதவுகிறார்கள்.
இவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், மொழிபெயர்ப்புக் குடிமக்கள் திட்டப்பணி அங்கீகரிப்பு, பயிற்சிக் கட்டமைப்பில் புதிய மேம்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், மொழிபெயர்ப்புக் குடிமக்களுக்கான புள்ளி அடிப்படையிலான முறையின் மூலம் அங்கீகரிக்கப்படுவர். மேம்படுத்தப்பட்ட முறையின் மூலம் அதிக அளவிலான மொழிபெயர்ப்பாளர்கள் அடிப்படை நிலையிலிருந்து மேம்படுத்தப்பட்ட நிலைக்குத் தரமுயரும் வாய்ப்பு பெறுவர். இதன்மூலம் மொழிபெயர்ப்புப் பயிற்சி வாய்ப்புகளை பெற்று அவர்கள் பயனடைய முடியும்.
இத்தகவல்கள் இம்மாதம் 17ஆம் தேதி தேசிய மொழிபெயர்ப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நிகழ்வில் பகிரப்பட்டன.
வாழ்நாள் கற்றல் நிலையக் கட்டடத்தின் உள்ளரங்கில் இரவு 7 மணிமுதல் 9 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புக் குடிமக்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தேசிய வளர்ச்சி, தொடர்பு, தகவல் அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ், “அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்புகள், பொதுத் தகவல்கள் உட்பட பல்வேறு தகவல்களின் மொழிபெயர்ப்புகள் சிங்கப்பூரர்களுக்கு, குறிப்பாக மூத்தோருக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. பல இன, பல சமய சமூகமான சிங்கப்பூரில் மொழியுடனும் கலாசாரத்துடனும் பின்னிப்பிணைந்த மொழிபெயர்ப்பு நம் அடையாளங்களை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது,” என்று கூறினார்.
மேலும், அவர் மொழிபெயர்ப்புத் திறனாளர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஐவருக்குச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.
இந்த நிகழ்வின் சிறப்பங்கமாக தமிழ், மலாய், சீன மொழிகளில் அந்தந்த மொழிசார்ந்த மொழிபெயர்ப்புக் குடிமக்களுக்காகச் சிறப்புப் பயிற்சிப் பயிலரங்குகளும் நடைபெற்றன. அதில் தமிழ் மொழியில் ‘தமிழ் மொழிபெயர்ப்பு: சிறந்த நடைமுறைகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற பயிலரங்கை மூத்த செய்தியாளரான திருவாட்டி பவளகாந்தம் அழகர்சாமி வழிநடத்தினார்.
“மொழிபெயர்ப்பு சார்ந்த உத்திகளும் பயனுள்ள பல தகவல்களும் இந்தப் பயிலரங்கில் பகிரப்பட்டன. புதிய பல சொற்களின் சரியான தமிழ் மொழிபெயர்ப்பையும் கற்றுக்கொண்டேன்,” என்று கூறினார் மொழிபெயர்ப்புக் குடிமக்களுள் ஒருவரான சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவி அர்ஃபா மாலிக், 22.
சிங்கப்பூர் சூழலுக்கேற்ப எளிமையான முறையில் மொழிபெயர்க்கும் வழிமுறைகளை கற்றுக்கொண்டதாக கூறினார் மொழிபெயர்ப்பாளரான திருவாட்டி ராஜேஸ்வரி சுப்பையா, 52.
நிகழ்வின் மற்றோர் அங்கமாக, 11 மொழிகளில் பேசும் வல்லமை கொண்ட சிங்கப்பூரரான ஜோனாஸ் ஃபைன் டான், மொழிபெயர்ப்புக் குடிமக்களுடன் மெய்நிகர்வழி கலந்துரையாடினார்.