செப்டம்பர் மாத தொடக்கத்தில் சிங்கப்பூர் கணினி அமைப்பு தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்துடன் கைகோத்து சிங்கப்பூர் தொழில்நுட்பத்தில் 100 மாதர் இயக்கத்தின் (Singapore 100 Women in Tech) பட்டியலின் (2023 list) மூன்றாவது பதிப்பை அறிவித்தது. அந்த இயக்கத்தின் புரவலரான தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோஸஃபின் டியோ அப்பட்டியலை சிங்கப்பூர் கணினி அமைப்பு நிகழ்த்திய Tech3Forum எனும் தொழில்நுட்ப கருத்தரங்கில் வெளியிட்டார்.
பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் மின்னிலக்கமையமாக்கல் பரவலாகி வரும் நிலையில் அந்த இயக்கம் இளம் பெண்களையும் மாதர்களும் துடிப்பான வேலைவாய்ப்புகள் வழங்கும் தொழில்நுட்ப துறையில் கால் பதிக்க ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
தொழில்நுட்பத்தில் மாதர் இயக்கம் அத்துறையில் ஏற்கனவே வெற்றி நடை போடும் பெண்களின் சாதனைகளை முன்னிலைப்படுத்தி அவர்களை அங்கீகரிக்கும் வகையில் இடம்பெற்றது. அவ்வாறு தொழில்நுட்ப துறையை தங்கள் முழுநேர பணியாக தேர்ந்தெடுத்து அதில் திறம்பட சாதிக்க முனைப்புடன் இருக்கும் மூன்று மாதர்களின் அனுபவங்களை கேட்டு வந்தது தமிழ் முரசு.
துறையில் தாக்குப்பிடிக்க கற்றல் அவசியம்
‘வுமன் ஹு கோட்’ (Women Who Code) எனும் நிரலாக்கல் சார்ந்த லாப நோக்கற்ற அமைப்பில் தரவு பொருள் மேலாளராக பணியாற்றும் அர்ச்சனா வைத்தீஸ்வரன், 27, சிறு வயதிலேயே கணினியின் கூறுகளை கண்டு வியந்து போனவர். இணைய மேம்பாடு போட்டிகளில் பள்ளி பருவத்தில் கலந்துகொண்ட அவர் பின்னர் எதிர்காலத்தில் இது ஒட்டிய ஒரு துறையில் பயணிக்க தீர்மானித்துவிட்டார்.
தொடர்ந்து மாறி வரும் துறையாக இருப்பதால் கற்றல் தனது பணியில் ஓர் அங்கமாக அர்ச்சனாவுக்கு விளங்குகிறது.
வேலையிடத்தில் ஏற்பாடு செய்யப்படும் திட்டங்களில் ஈடுபாடு காட்டுவது அல்லது சுயமாகவே ஒரு திட்டத்தை உருவாக்குவது போன்றவை மூலம் தன் ஆற்றலை பயன்படுத்திகொள்கிறார் அர்ச்சனா. புதிதாக வலம் வந்துள்ள சேட் ஜிபிடி (Chat GPT) செயற்கை நுண்ணறிவு கருவி அர்ச்சனா போன்றவர்களுக்கு பேருதவியாக உள்ளன. இன்னும் ஆண் ஆதிக்கம் மிகுந்த ஒரு துறையாக இருப்பதால் பணியிடத்தில் சவால்களை சந்திப்பது வழக்கமாக உள்ளது.
தன்னை பிரதிநிதித்து தலைமைத்துவ பொறுப்புகளை ஏற்க கடினமாக இருப்பதாக கூறும் அர்ச்சனா சிறுபான்மையான பெண்கள் தலைமைத்துவ பொறுப்புகளில் இருப்பதால் ஒரு பிரச்சினைக்கு தீர்வு காணும் தளத்தில் பன்முக தீர்வுகள் கிடைப்பதில்லை என்று வருந்தினார். மேலும், சம்பள சமத்துவம் இல்லாததை சுட்டிக்காட்டிய அவர், பிள்ளைகள் வைத்திருக்கும் தாய்மார்களுக்கு தகுந்த வேலை ஏற்பாடுகள் அளிக்கப்படுவதில்லை என பகிர்ந்தார். பாலின வேறுபாடு இத்துறையில் தலை தூக்கி நிற்பதாக கூறும் அர்ச்சனா இந்த சவால் மாற வேண்டுமென்றார்.
தகவல் தொடர்பு துறைக்கு தாவல்
ஜே.பி. மோர்கன் (J.P. Morgan) நிறுவனத்தில் செல்வ நிர்வாக தொழில்நுட்ப (Wealth Management Technology) பிரிவுக்கு திட்ட மேலாளராக இருக்கும் கீதா கணேஷ், அர்ச்சனா கூறியது போல தொடர்ந்த கற்றல் மூலம் துறையில் தாக்குப்பிடிக்க தன்னை மேம்படுத்திகொள்கிறார். வெளியிட பயிற்சிகள், சக ஊழியர்களிடம் சந்தேகங்களை தீர்த்துகொள்வது ஆகியவற்றை பகிர்ந்துகொண்ட அவர் தனது நிறுவனத்தில் பற்பல பயிற்சி திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுவதாக சொன்னார்.
ஊழியருக்கு ஊழியர் கை கொடுப்பது, மென்பொருள் பொறியாளர்கள், மேம்பாட்டாளர்கள், தரவு அறிவியலாளர் ஆகியோருக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்குவது, தொழில்நுட்ப மாநாடுகளை நிகழ்த்துவது போன்றவற்றில் ஜே.பி மோர்கன் கவனம் செலுத்துகிறது.
தனது ஐம்பதுகளில் இருக்கும் கீதா, பல்லின வேறுபாடும், குடும்பம் சமுதாயம் முதலியவற்றிடமிருந்து கிடைக்காத ஆதரவும் பெண்கள் இத்துறையில் பார்க்கும் இன்னல்கள் என்றார். இளம் வயதிலேயே பெண்களுக்கு துறை மீதான நாட்டத்தை பெற்றோர்கள் அர்த்தமுள்ள வழிகள் மூலம் விதைக்க வேண்டுமென்று கூறினார்.
முழு நேர பணியில் பயணிக்க தொடங்கிய போது கீதா இந்தியாவில் இருக்கும் நிதி அமைப்பு ஒன்றில் தான் பணிபுரிந்தார். வாடிக்கையாளர்களின் கணக்குகளை மின்னிலக்கமயமாக்கும் பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட போது கீதாவுக்கு தொழில்நுட்பமும், மென்பொருள் மீது ஆர்வம் பிறந்தது.
இளம் வயதிலிருந்தே ஆர்வம்
‘ஃபண்டிங் சோசையடீஸ்’ (Funding Societies) எனும் மின்னிலக்கமயமாக்கல் நிதியளிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் 32 வயதாகும் சக்தி பிரியா கதிர்வேலு வரும் ஆண்டுகளில் மேலும் அதிகமான பெண்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணித துறைகளில் முத்திரை பதிப்பார்கள் என்று நம்புகிறார். இளம் பெண்களும், மாதர்களும் இத்துறைகளில் நிலைத்து நிற்க கீதா கூறியது போல அவர்களுக்கு துறைகளின் மீதான நாட்டம் உண்டாக்க தொடக்கத்திலேயே முயற்சிகள் எடுக்க வேண்டுமென்று பரிந்துரைத்தார்.
அர்ச்சனாவும் கீதாவும் உணர்வது போல் சக்தி பிரியா பல்லின வேறுபாடு பெரியளவில் தென்படுவதாக உணர்கிறார். சம்பளம், தலைமைத்துவ பொறுப்புகள், வேலையிட கலாசாரம், பணி பொறுப்பை தக்கவைத்தல் போன்ற அம்சங்களில் இடைவெளி இன்னும் இருக்கிறது என்றார் அவர். பெரும்பாலும் அலுவலகத்தில் ஒரே பெண்ணாக சிறிய ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாகும் சக்தி பிரியா அலுவலக சந்திப்பு அமர்வுகளில் தனது யோசனைகள் பெரும்பாலும் நிராகரிக்கப்படுவதாக வருந்தினார்.
சில நேரங்களில் அவர் பேசும் போது குறுக்கிடுவது, தகாத கருத்துக்களுக்கு உட்படுத்தப்படுவது ஆகியவற்றை அவர் சமாளிக்க வேண்டும். பெண்களுக்கு இத்துறையில் குறைவான வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிட்ட சக்தி பிரியா வெளிப்புற வாய்ப்புகளை பயன்படுத்துகிறார்.
உயர்நிலை பள்ளியில் இருந்த போது பாட நடவடிக்கைகளில் நிரலாக்குதலை பயன்படுத்திய சக்தி பிரியா, பள்ளி பருவத்திலிருந்தே கணினி அறிவியல் மீது ஆர்வம் வைத்து வந்தார். மேலும், அதை சார்ந்த போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக செய்த அவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் இளநிலை பட்டமும் பெற்றார்.