லோகஷிவாணி ஜெகநாதன்
சிறுவயதில் தாம் இந்தியாவில் வசித்து வந்தபோது, அம்மா வீட்டு வாசலில் தினமும் ரங்கோலி வரைவதைக் கண்டு ரசித்தவர் திருமதி சுதா ரவி, 52.
தொடக்கத்தில் அக்கலையின் மீது ஆர்வமில்லாமல் இருந்தார்.
நட்சத்திரங்கள், வட்டங்கள் என எளிமையான வடிவங்களை அவர் வரைய வரைய, அக்கலை மீதான ஆர்வம் மெல்ல வளரத் தொடங்கியது. தொடர்ந்து 30 ஆண்டுகளாக ரங்கோலி கலையில் ஈடுபட்டு வந்த திருமதி சுதா, தற்போது தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் அதிகம் நாடப்படும் பிரபல ரங்கோலி கலைஞராகத் திகழ்கிறார்.
ரங்கோலி கோலத்திற்கு மஞ்சள், ஆரஞ்சு போன்ற கண்ணைப் பறிக்கும் வண்ணங்களைப் பயன்படுத்தித் தம் படைப்புகளுக்குத் தனித்தன்மை தருவதாக திருமதி சுதா கூறினார்.
ரங்கோலி கலை மீதான திறமை தம்மோடு நின்றுவிடக்கூடாது என்பதற்காக தம்முடைய 18 வயது மகள் ரக்ஷிதாவுக்கும் இவர் வழிகாட்டுகிறார்.
இருவரும் சிங்கப்பூரில் ரங்கோலி வரையும் பயிலரங்குகளை இணைந்து நடத்தி வருகிறார்கள். கோலங்கள் வரைந்து உலகச் சாதனைகளையும் நிகழ்த்தி வருகின்றனர்.
இவ்வாண்டு தொடக்கத்தில் 26,000 ‘பாப்சிகல்’ குச்சிகளைக் கொண்டு ஆறு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் அகலம் கொண்ட வண்ண ரங்கோலியை உருவாக்கி அதை சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தீபாவளி போன்ற கொண்டாட்டங்களின்போது மயில், மாம்பழம், மண்டல வடிவம் போன்ற ரங்கோலி வடிவமைப்புகள் அதிகம் விரும்பப்படுவதாகவும் திருமதி சுதா குறிப்பிட்டார்.
“ரங்கோலி கலைஞருக்கு மென்மையான கையசைவும் பொறுமையும் மிக அவசியம்,” என்றார் திருமதி சுதா ரவி.
அரிசி மாவு, வண்ணப் பூக்கள், குச்சிகள் என விதவிதமான பொருள்களைப் பயன்படுத்தி ரங்கோலியை இவர் புதுமை பாணியில் வழங்க விரும்புகிறார் இவர்.

