செருக்குடன் நடந்துகொள்வோர், தகாத சொற்களைப் பயன்படுத்துவோர், கனிவான பேச்சும் சைகைகளும் கொண்டோர் இப்படி பலதரப்பட்ட பயணிகளைத் தமது அன்றாடப் பணியில் சந்திக்கிறார் 39 வயது பேருந்து ஓட்டுநர் பிரசாத் ஞானப்பிரகாசம்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரியும் பிரசாத், அண்மையில் சமூக ஊடகத் தளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டார்.
தமது பணப்பையை வீட்டில் வைத்துவிட்டு பேருந்தில் ஏறிய மாது ஒருவருக்கு பிரசாத் $10 தந்து உதவிக்கரம் நீட்டியது குறித்து உதவி பெற்ற அந்த மாது பதிவிட்டிருந்தார். மிச்ச பணத்தை அன்றைய தினத்துக்கு வைத்துக்கொள்ளுமாறும் பிரசாத் தம்மிடம் கூறியதாக அந்த மாது குறிப்பிட்டார்.
ஒரு பேருந்து ஓட்டுநராக பிரசாத் பொறுமையைக் கடைப்பிடித்து பயணிகளை அனுசரித்து வேலை பார்க்க வேண்டும். பயணிகள் சிலர் தங்கள் மீது தவறு இருந்தாலும் அதை அப்படியே பேருந்து ஓட்டுநர்கள் மீது பழி சுமத்தும் தருணங்களும் உண்டு.
இதுபோன்ற வேளைகளில் பிரசாத் சேவை உணர்வுக்கு முக்கியத்துவம் அளிக்க முற்படுகிறார்.
ஒருமுறை முதியவர் ஒருவர் பேருந்தில் கட்டணம் செலுத்தமாட்டேன் எனப் பிடிவாதமாக இருந்தார். அதை பிரசாத் சுட்டிக்காட்டியபோது அந்த முதியவர் சீனத்தில் தகாத சொற்களால் திட்டத் தொடங்கினார்.
மற்ற பயணிகளின் பாதுகாப்பைக் கருதி பிரசாத் தாமே அந்த ஆடவருக்காகப் பயணக் கட்டணத்தைச் செலுத்தினார். இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்தாலும் பிரசாத்தின் பேருந்துச் சேவையில் அடிக்கடி பயணம் செய்யும் பயணிகள் சிலர், அவருக்குக் காலை உணவு வழங்கி ஊக்கமும் அளிப்பதுண்டு.
பேருந்துச் சேவை எண் 852 மற்றும் துணைப் பேருந்துச் சேவைகளான 803, 805 ஆகியவற்றில் ஓட்டுநராக உள்ள பிரசாத், முன்பு மருத்துவ அவசர சேவை வண்டி ஓட்டுநராக இருந்தார்.
பேருந்துச் சேவை 852 தமக்கு மிகவும் பிடித்த ஒன்று என்று குறிப்பிட்ட பிரசாத், தம் மகள் பிறந்த மருத்துவமனையைத் தாண்டிச் செல்லும் பேருந்தை ஓட்டுவதில் மனம் நெகிழ்வதாகக் கூறினார்.
தம் வேலையை அதிகாலை 5.30 மணிக்குத் தொடங்கும் பிரசாத், கிட்டத்தட்ட 10 மணி நேர வேலைக்குப் பிறகு பணியை முடிப்பார். எந்நேரமும் உட்கார்ந்துகொண்டே இருக்கும் வேலை என்பதால் வாரத்தில் மூன்று நாள்கள் 10 கி.மீ. தூரம் மெதுவோட்டம் ஓடுவதாக பிரசாத் பகிர்ந்துகொண்டார். அத்துடன் நீச்சல் பயிற்சியிலும் ஈடுபட்டுத் தம் உடல் ஆரோக்கியத்தைப் பேணுகிறார் பிரசாத்.
அதிபர் தர்மன் சண்முகரத்தினம், முன்னாள் பிரதமர் கோ சோக் டோங், தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் ஆகியோரைப் பேருந்தில் செல்லும்போது அதிகம் பார்த்திருப்பதாகக் கூறினார் பிரசாத்.
கொவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்தின்போது பலர் தங்கள் வேலையை இழந்தபோது தன் வேலையைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்ததில் நிம்மதி கொண்டார் பிரசாத்.
‘பேருந்து ஓட்டுநர்தானே’ என்று பலர் தன்னைப் போன்றவர்களை அலட்சியப்படுத்துவது வழக்கம் என்று கூறிய பிரசாத், இந்த வேலையில் அதிக பொறுமை அவசியம் என்று புன்னகைத்தபடி கூறினார்.