வசதிகுறைந்த குடும்பங்களும் பிள்ளைகளும் பயன்பெறும் வகையில், நவம்பர் 25ஆம் தேதி சனிக்கிழமை, சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) ‘பேக் டூ ஸ்கூல் ஃபெஸ்டிவலை’ சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் நடத்தியது. இவ்விழாவில், சுமார் 50 குடும்பங்கள் கலந்துகொண்டன.
2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ‘பேக் டூ ஸ்கூல் ஃபெஸ்டிவல்’ நிதியுதவித் திட்டம், இந்த ஆண்டு முதன்முதலாக, அதனுடைய 16 ஆம் ஆண்டில், 7291 கற்றல் உதவி சாதனங்களை மின்னிலக்கம் வாயிலாக வழங்கியது.
சிண்டாவின் நிர்வாகக் குழுத்தலைவரும் பிரதமர் அலுவலக அமைச்சருமான இந்திராணி ராஜா ‘சிண்டா வாலட்’ என அழைக்கப்படும் இக்கற்றல் உதவி சாதனத்தை அறிமுகம் செய்தார்.
$140 மதிப்புள்ள பாப்புலர் புத்தகக்கடைப் பற்றுச்சீட்டுகளையும் $60 மதிப்புள்ள பாட்டா காலணிக்கடை பற்றுச்சீட்டுகளையும் கொண்டுள்ள இந்த ‘சிண்டா வாலட்’, மாணவர்கள் புதிய பள்ளி ஆண்டைத் தயக்கமின்றித் தொடங்க கைகொடுக்கும் என சிண்டா நம்புகிறது.
வரும் 2024ஆம் ஆண்டில், 12,000க்கும் மேற்பட்ட பற்றுச்சீட்டுகள் ‘சிண்டா வாலட்’ மூலம் வழங்கப்படும். செலெபிரேட்! பண்டிகை பரிசு பற்றுச்சீட்டுகள், வீடுகளுக்குச் சென்று குடும்பங்களைத் தொடர்புகொள்ளும் சிண்டாவின் திட்டம் மற்றும் சிண்டா குடும்பச் சேவை நிலையம் குடும்பங்களுக்கும் தனிநபர்களுக்கும் வழங்கும் ஆதரவு போன்றவை இம்முயற்சியில் அடங்கும்.
‘சிண்டா வாலட்’ நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். இதன் மூலம் பயன்பெறுபவர்கள், பற்றுசீட்டுகளைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்கும் அவை எளிய முறையில் அமைத்திருக்கும். இதன் மூலம் அவர்கள் வசதியான ஆதரவை பெறலாம்.
இந்த ஆண்டு ‘பேக் டூ ஸ்கூல் ஃபெஸ்டிவல்’ விலங்கியல் தோட்டத்தில் நடைபெற்றத்தன் மூலம், பிள்ளைகள் தங்கள் பெற்றோருடன் நேரத்தை ஒன்றாகச் சேர்ந்து செலவிடும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதையும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளோடு நேரத்தைச் செலவிடுவது, பிள்ளைகளின் எதிர்காலத்திற்குப் பெருமளவில் உதவும் என்பதையும் பிரதமர் அலுவலகம், குமாரி இந்திராணி ராஜா தம்முடைய உரையில் வலியுறுத்தினார்.
மேலும், இது போன்ற முயற்சிகளின் மூலம், இந்திய சமூகத்தில் யாரும் பின்தங்கி விட மாட்டார்கள் என்று அவர் உறுதியளித்தார். மற்றும் பிள்ளைகள் சிண்டா நடத்தும் விளையாட்டு நிகழ்ச்சிகள், ரோபோட்டிக்ஸ் வகுப்புகள் போன்றவற்றில் கலந்துகொள்ள ஊக்குவித்தார்.
இம்முயற்சியின் மூலம், பிள்ளைகள், பள்ளிக்குச் செல்ல உற்சாகமாக இருப்பதோடு புத்தாண்டைச் சரியான வகையில் தொடங்கி வைக்கவும் இது வழிவகுக்கிறது. அதுமட்டுமில்லாமல் பணத்தை சரியான முறையில் நிர்வகிக்கவும் இம்முயற்சி கற்றுக்கொடுக்கும் என்று சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன் கூறினார்.
புக்கிட் வியூ உயர்நிலை பள்ளியில் பயிலும் அர்ஷாட் காசிம் மொஹம்மத், 14, பற்றுச்சீட்டுகளைக் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பெற்று வருகிறார். அவர், “இந்தப் பற்றுச்சீட்டுகள் பள்ளிக்குத் தேய்வைப்படும் புத்தகங்களையும், பள்ளிக்காலணிகளையும் வாங்குவதற்கு உதவுகிறது. மேலும் இந்த ஆண்டு மின்னிலகம் வழி இவற்றைப் பெறுவதன் மூலம் செலவுகளைக் கணக்கிடவும் உதவுகிறது, ” என்று பகிர்ந்துகொண்டார்.
பொங்கொல் கோவ் தொடப்பள்ளியில் பயிலும் ஞான ஹர்சினி, 10, “எனக்கு இந்தப் பற்றுச்சீட்டுகள் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்குப் பயிற்சிப் புத்தகங்கள் வாங்க இப்பற்றுச்சீட்டுகள் உதவுகின்றன,” என்றார்.
திரு நந்தகுமார் ராமகிருஷ்ணனின், 47, பிள்ளைகள் 2017ஆம் ஆண்டிலிருந்து பற்றுசீட்டுகளைப் பெற்று வருகிறார்கள். அவர், “பற்றுச்சீட்டுகள் பயனுள்ளதாக உள்ளன. புத்தகங்கள், காலணிகள் வாங்குவதற்கு உதவியாக உள்ளன. இந்த ஆண்டு மின்னிலக்கம் வழி இவற்றைப் பெறுவது சிறப்பான ஒன்று,” என்றார். இதைத் தவிர்த்து, சிண்டா வழங்கும் மற்ற உதவிகளைப் பற்றியும் அவற்றால் ஏற்படும் மனமகிழ்ச்சியைப் பற்றியும் அவர் பகிர்ந்துகொண்டார்.