வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் குதூகலம்

1 mins read
14ba703f-7c0c-41a2-a121-02b7ba39b2b1
சென்ற ஆண்டுகளில் கிறிஸ்துமஸ் தினப் பரிசுகளைப் பெற்றுக் களிப்புற்ற வெளிநாட்டு ஊழியர்கள். - படம்: ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ 

கிறிஸ்துமஸ் தின இன்பத்தை வெளிநாட்டு ஊழியர்களுடன் பகிர்ந்துகொள்ள ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ (ஐஆர்ஆர்) அறநிறுவனம், 2024ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி வரை பொதுமக்களிடமிருந்து பரிசுப்பொருள்களைத் திரட்டும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

ஆறாவது ஆண்டாக நடைபெற்றுவரும் இந்தத் திட்டத்தில் தனிநபர்கள், குடும்பங்கள், நிறுவனங்கள், சமூக நிலையங்கள் வழக்கமாகக் கலந்துகொண்டு பரிசுகளை வாங்கி, அலங்கரித்து வழங்கி வருகின்றனர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்க விரும்புவோர், அவற்றை சிங்கப்பூரின் வெவ்வேறு இடங்களில் உள்ள சேகரிப்பு முனையங்களில் கொடுக்கலாம். இடங்களின் முழுப் பட்டியலுக்கு ‘ஐஆர்ஆர்’ இணையத்தளத்தை நாடவும்.

வெளிநாட்டு ஊழியர்களின் கிறிஸ்துமஸ் விருப்பப்பட்டியல்களில் துண்டுகள், ‘ப்லூடூத்’ தலையணி ஒலிவாங்கிகள், குடைகள், நீர்ப்புட்டிகள், ‘கேத்தல்’கள், பலகாரங்கள், முதுகுப் பைகள் போன்ற பொருள்கள் அதிகம் கோரப்படுகின்றன.

கிறிஸ்துமஸ் பரிசுகளுக்கான அலங்கரிப்புத் தாள்களையும் நன்கொடையாக வழங்கலாம்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான பரிசுகளுக்கு நிதி திரட்டும் திட்டமும் ‘ஐஆர்ஆர்’ இணையத்தளத்தில் நடைபெற்றுவருகிறது.

பொருள், பணம் மட்டுமல்லாது, உங்களின் நேரத்தையும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக இப்பண்டிகைக்காலத்தில் ஒதுக்கலாம்.

பரிசுகளை அலங்கரித்து, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அவற்றில் எழுதி வெளிநாட்டு ஊழியர் நண்பர்களுக்குக் கொடுத்து உதவலாம்.

கிறிஸ்துமஸ் தாத்தாவாக அல்லது கலைமானாக ஊழியர்களின் வேலையிடங்களுக்குச் சென்று பரிசுகளை விநியோகிக்கவும் செய்யலாம்.

மேல்விவரம் அறிய: https://sites.google.com/itsrainingraincoats.com/christmas2023

குறிப்புச் சொற்கள்