தேக்கா சந்தை அருகே சிறிய கூண்டு ஒன்றில் ஒரு கிளியை வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பவரைப் பலரும் நாடி வந்து கிளி சோதிடம் பார்க்கும் காட்சியைக் கண்டிருக்கலாம்.
அவ்வாறு இன்றும் ‘லட்சுமி! வந்தவங்களுக்கு ஒரு கார்டு எடுத்துக்கொடு!’ என்று தனது செல்லக் கிளியிடம் கூவும் செல்வராஜு முனியாண்டி, 53, கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரில் கிளி சோதிடம் பார்த்து வருகிறார்.
கிளி சோதிடத் தொழிலில் பகுதிநேரமாக ஈடுபடும் செல்வராஜு, முழுநேரமாகப் பாதுகாப்புத் துறையில் இருக்கிறார்.
இந்திய நிகழ்ச்சிகளில் செல்வராஜு சில மணி நேரம் கிளி சோதிடம் பார்ப்பதைக் காணலாம். அதற்கு அப்பாற்பட்டு அவர் சுவையான தேநீரையும் கடலை வகைகளையும் விற்பார்.
மலேசியாவின் ஈப்போ நகரில் பிறந்து வளர்ந்த செல்வராஜு, சிறுவயதிலேயே மாமாவின் கடையில் பரோட்டா புரட்டிப் போடும் நுணுக்கங்களையும் தேநீர் கலக்கும் கலையையும் கற்றுத்தேர்ந்தார். பின்னர், தமது 18வது வயதில் வேலைவாய்ப்புக்காக சிங்கப்பூர் வந்தார்.
அன்று வந்தவர் மீண்டும் மலேசியா திரும்பவில்லை. சில காலம் உணவகத்தில் பரோட்டா போட்ட பிறகு, அவர் மின்சாரத் துறை சார்ந்த நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
ஆனால், அதில் மனநிறைவு காணாத அவர், சுயதொழிலில் இறங்க முடிவெடுத்தார்.
மலேசியாவில் இருந்தபோது கடலையைத் தயாரிக்கக் கற்றுக்கொண்ட செல்வராஜு, சிங்கப்பூரர்கள் விரும்பும் வண்ணம் கச்சாங் புத்தே வியாபாரத்தைத் தொடங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் அந்த வியாபாரத்தைக் கைவிட வேண்டியதாயிற்று. அதேநேரத்தில் தேக்காவிலிருந்த கிளி சோதிடர் ஒருவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.
அவரிடமிருந்து கிளி சோதிடம் கற்றுக்கொண்ட செல்வராஜு, அவரது மறைவுக்குப் பிறகு கிளி சோதிடத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.
“ஒருவர் மனத்தெளிவின்றி காணப்படும்போது, சோதிடம் மூலம் குழப்பத்துக்குத் தீர்வுகாண விரும்பலாம். இவை அனைத்தும் ஒருவரின் நம்பிக்கையின் அடிப்படையில்தான்,” என்கிறார் செல்வராஜு.
கிளிக்கு 20 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் அதன் நிலையை எண்ணி வருந்திய செல்வராஜு, இந்தியாவில் ஏற்கெனவே பயிற்சியளிக்கப்பட்ட கிளியை எப்படியாவது சிங்கப்பூருக்குக் கொண்டுவரும் முயற்சியில் தீவிரமாக உள்ளார்.
மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான செல்வராஜு, “என்னுடைய மூத்த மகன் சில நேரங்களில் கிளி சோதிடம் பார்ப்பான். நான் என் பிள்ளைகளுக்கு அதைப் பற்றி கற்றுத் தந்துள்ளேன்,” என்று சொன்னார்.
“இக்காலத்துப் பிள்ளைகளுக்கு சிங்கப்பூரின் மரபுகளை நாம் ஊட்டி வளர்க்கவேண்டும். சிங்கப்பூரின் கடைசி கிளி சோதிடராக இருப்பதில் எனக்குப் பெருமைதான்,” என்கிறார் இவர்.

