லிட்டில் இந்தியா வட்டாரத்தில் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டைக் குறைக்கும் புதுமுயற்சிகள் இவ்வாண்டு மேற்கொள்ளப்படுகின்றன.
துணிப்பைகளைப் பயன்படுத்துதல், உறிஞ்சு குழாய் பயன்பாட்டை நீக்குதல் உள்ளிட்ட சில மாற்றங்கள் நடப்புக்கு வந்துள்ளன.
கேம்பல் லேன் சாலையில் பொங்கலுக்காக பொருள்களை வாரயிறுதியில் வாங்கச் சென்றோரில் சிலர், ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடையில் நெகிழிப் பைக்குப் பதிலாக துணிப்பைகளில் தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கிக் கொண்டனர்.
மகள் தன் கணவருடன் முதல்முறையாக பொங்கல் கொண்டாடவுள்ளதால் மகளுக்கு உதவவிருக்கும் தாயார் செந்தாமரை கணேசன், துணிப்பை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்தது என்று கூறி தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார்.
பொங்கல் பண்டிகை நேரத்தில் நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் இந்நடவடிக்கை, வரவேற்கத்தக்கது என்றார் ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடைக்கு வந்திருந்த மற்றொரு வாடிக்கையாளரான மருந்து ஆய்வு உதவியாளர் ரேவதி காமராஜ், 54.
‘பிளாஸ்டிக் இல்லா லிட்டில் இந்தியா’ இயக்கத்தை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, கடந்த சனிக்கிழமையன்று (ஜனவரி 6) நடைபெற்ற பொங்கல் ஒளியூட்டு விழாவில் தொடங்கி வைத்தார்.
2026ஆம் ஆண்டுக்குள் லிட்டில் இந்தியா வட்டாரத்திலிருந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்தவரை முற்றிலும் நீக்குவது இந்த இயக்கத்தின் நோக்கம் என்று கூறப்பட்டது.
இதற்கான தயாரிப்புப் பணிகளை லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கமும் (லிஷா) சிங்கப்பூர் இந்திய உணவகச் சங்கமும் கடந்த ஆண்டு இறுதியிலிருந்து மேற்கொண்டு வந்ததாக லிஷாவின் தலைவர் ரகுநாத் சிவா தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
இலைகளால் செய்யப்பட்ட தட்டு மற்றும் குவளைகள், தேங்காய் முடி கொண்ட பெட்டிகள் எனப் பல்வேறு உத்திகள் ஆராயப்பட்டு வருவதாக திரு ரகுநாத் கூறினார்.
வீட்டிலிருந்து கலன்களைக் கொண்டுவந்து வாடிக்கையாளர்கள் உணவு வாங்கும் சாத்தியத்தையும் உணவகங்கள் ஆராய்ந்து வருவதாக சிங்கப்பூர் இந்திய உணவகச் சங்கத்தின் கெளரவ செயலாளர் மகேந்திரன் சண்முகம் கூறினார்.
இந்த இயக்கத்தை மனப்பூர்வமாக ஆதரிப்பதாக தேக்கா ஈரச்சந்தையின் ‘ஜி வி மீட்’ இறைச்சிக்கடை உரிமையாளர் விஜன் தெரிவித்தார்.
“ஆனால் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான மாற்று முறைகள் கட்டுப்படியாகும் விதமாக இருக்கவேண்டும்,” என்றும் அவர் நினைவுறுத்தினார்.