சிங்கப்பூரில் பிரபல இந்திய அசைவ உணவகங்களில் ஒன்றான அஞ்சப்பர் செட்டிநாடு, கிளமென்டியில் தனது புதிய கிளையை ஜனவரி 21ஆம் தேதி திறக்கவுள்ளது
321 கிளமென்டி அவென்யூ 3, #01-01 சிங்கப்பூர் 129905 என்ற முகவரியில் திறக்கப்படும் அந்த உணவகம், கிளமென்டி பெருவிரைவு இரயில் நிலையத்திற்கு எதிரில் அமைந்துள்ளது.
அந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 50 பேர் அமர்ந்து உண்ணலாம்.
சிங்கப்பூரில் அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தின் முதல் கிளை 2005ஆம் ஆண்டு லிட்டில் இந்தியாவின் ரேஸ் கோர்ஸ் சாலையில் தொடங்கப்பட்டது.
அது முதல் தொடர்ந்து சிங்கப்பூரில் 19 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் அந்த உணவகத்தின் ஆறாவது கிளை இது. இவற்றில் சாங்கி விமான நிலையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கிளையும் அடங்கும்.
“அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தின் தனிச்சிறப்புமிக்க செட்டிநாடு உணவு வகைகளையும் பாரம்பரிய உணவு வகைகளையும் வாடிக்கையாளர்கள் எங்களது புதிய கிளையிலும் சுவைக்கலாம்,” என்று அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தின் நிர்வாக பங்குதாரரான மாணிக்கம் குமரேசன், 42, கூறினார்.
புதிய கிளைத் திறப்பை முன்னிட்டு, அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஐஸ்கிரீம் வழங்கப்படவுள்ளது. இந்தச் சலுகை முதல் 10 நாள்களுக்கு மட்டுமே என்றார் திரு குமரேசன்.
மேலும், மற்றக் கிளைகளைப் போல இந்தக் கிளையிலும், தீவு முழுவதும் உணவு விநியோகம் செய்யும் வசதியும் பண்டிகை மற்றும் நிகழ்ச்சிகளுக்கு உணவு சமைத்துத் தரும் வசதியும் உள்ளன.