சிங்கப்பூர்- சீனா இடையே அண்மையில் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தகுதிப் போட்டியைத் தொடர்ந்து, 1970ஆம் ஆண்டு அதே இடத்தில், அதே அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில், மிகக் கெட்டிக்காரத்தனமாக விளையாடி 1-1 என்ற சமநிலையில் தமது அணியை சாதிக்கவைத்த பெருமைமிகு தருணத்தை நினைவுகூர்ந்தார் ராமசாமி கிருஷ்ணன்.
தற்போது 72 வயதாகும் முன்னாள் காற்பந்து வீரர் ராமசாமி கிருஷ்ணன், சிறுவயதிலிருந்தே காற்பந்தாட்டத்தில் ஆர்வம்கொண்டவர்.
உரிய பயிற்சி பெற்று, 1970களின் தொடக்கத்தில், பர்மாவுக்கு எதிராக மலேசியாவிலும் வியட்னாம் தேசிய தினக் காற்பந்துப் போட்டியிலும் சிறப்பாக விளையாடி சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்தார்.
“சீனாவின் காற்பந்து அணி குறித்து எவரும் அறிந்திராத காலகட்டம் அது. அவர்கள் முதன்முறையாக வெளிநாட்டிற்கு வந்து விளையாடிய ஆட்டமும் அதுதான். விறுவிறுப்பான ஆட்டத்தின் இரண்டாம் பாதியில், என் அணியைச் சேர்ந்த கிம் சாங்குடன் இணைந்து தந்திரமாகச் செயல்பட்டு அடித்த கோல் என் வாழ்வில் மறக்க முடியாதது” என்றார் ராமசாமி.
அதிவேக ஓட்டத்துக்குப் பெயர்பெற்ற ராமசாமி, சிங்கப்பூர் காற்பந்தாட்டப் பிரியர்கள் மத்தியில் பிரபலமானவர். ஒரு காலத்தில் எதிரணித் தற்காப்பு ஆட்டக்காரர்களுக்குக் கொடுங்கனவாக விளங்கியவர்.
முழங்கால்களில் ஏற்பட்ட காயம் காரணமாக இவரது காற்பந்தாட்டக் கனவு ஆறே ஆண்டுகளில் கலைந்து போனது. 1971ஆம் ஆண்டு முதல் காற்பந்து விளையாடியவர் 1977ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார்.
ஓர் ஆட்டத்தின்போது தன்னிடமிருந்த பந்தை எதிரில் உள்ள ஆட்டக்காரர் பறிக்காமலிருக்க முயன்றபோது ராமசாமி முழங்காலை முறுக்கிக்கொண்டார். இதனால் அவரது குருத்தெலும்பும் கிழிந்ததாக அவர் சொன்னார்.
தொடர்ந்து ஜாலான் புசார் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில், இடது முழங்காலும் காயமடைந்ததாக அவர் கூறினார். அந்த ஆட்டங்களின் விவரம் அவருக்கு அவ்வளவாக நினைவில் இல்லை.
இரு முழங்கால்களிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, இரு குருத்தெலும்புகளும் அகற்றப்பட்டன.
“காயங்கள் சரியாகி, 1978ஆம் ஆண்டு மீண்டும் விளையாட வந்தேன். ஆனால் முன்பிருந்த வேகம் குறைந்துவிட்டதை உணர்ந்தேன். ஓரிரு ஆட்டங்களில் விளையாடினாலும், முழு திருப்தி இல்லாததால் காற்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற்றேன்,” என்றார் ராமசாமி.
காற்பந்தின் மீதான பேரார்வம் குறையாமல் இருக்கவே, விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், பயிற்சியாளராகப் பணியைத் தொடங்கினார் ராமசாமி.
பயனியர் ஆர்சனல், ஜூரோங் காற்பந்தாட்டக் குழுக்களுக்கு பயிற்சியளிக்கத் தொடங்கினார்.
இவர் பிரபல முன்னாள் காற்பந்து வீரரும், அனைத்துலகக் காற்பந்தாட்டப் பயிற்சியாளருமான வி சுந்தரமூர்த்தியிடம் உதவிப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தொடர்ந்து 2003ஆம் ஆண்டு வரை பயிற்சியாளராகப் பணியாற்றிய இவர், அதன் பின்னர் அல்பிரெக்ஸ் நிகாட்டா என்ற ஜப்பானிய அணியில் பணியில் சேர்ந்தார். இப்போதும் அதே நிறுவனத்தில் தளவாட மேலாளராகப் பணியாற்றும் இவருக்கு, அண்மையில் நீண்டகால சேவைக்கான விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
தாம் வாங்கிய பரிசுக் கிண்ணங்கள், தமது படங்கள் இடம்பெற்ற செய்தித்தாள் சேகரிப்புகளை அவ்வப்போது புரட்டிப் பார்ப்பதாகக் கூறிய திரு ராமசாமி, “என் வாழ்வில் நடந்த எதற்காகவும் நான் வருத்தப்படதில்லை,” என புன்னகைத்தார்.