வீட்டை மணக்கச் செய்யும் சாம்பிராணிகள் வேண்டும் என்பதற்காகத் தன் கைப்பட மூலப்பொருள்களைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்து விற்றும் வருகிறார் ஷக்தி மோகன், 43.
பெரும்பாலும் இந்திய வீடுகளில் வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருள்களில் ஒன்று, சாம்பிராணி. ஆனால், சிங்கப்பூரில் விற்கப்படும் சாம்பிராணிகளில் பெரும்பான்மை, பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை.
இயற்கை முறையில் கலப்படமில்லாமல், சுகாதார அறிவியல் ஆணைய அங்கீகரிப்புடன் அமைந்த மூலப்பொருள்கள் கொண்டு ஷக்தி மோகன் கடந்த ஐந்தாண்டுகளாக சாம்பிராணிகளை சிங்கப்பூரில் தயாரித்து வருகிறார்.
நாள்தோறும் இறைவழிபாட்டில் ஈடுபட்டுவரும் இவர், கடையில் வாங்கிய சாம்பிராணிகளைப் பயன்படுத்தி வந்தவர்.
“சாம்பிராணியை நெருப்பில் இடும்போது எதிர்பார்க்கும் அளவுக்குப் புகை வரவில்லை. கண்கள் எரிந்தன. பொட்டலத்தில் எழுதியிருப்பது போல வாசனையும் இல்லை. நான் வழிபடும்போது மனநிறைவு வேண்டும்,” என்று சொன்னார் ஷக்தி.
சாம்பிராணி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும். அதேநேரத்தில் அதில் இயற்கையான மணமும் அடங்கியிருக்க வேண்டும்.
இதற்குத் தீர்வுகாண ஷக்தி மோகன் இரவுபகல் பாராமல் பல முயற்சிகளில் இறங்கினார்.
ஆனால், அவை ஏமாற்றத்தில் முடிந்தன. எஸ்பிளனேட் அரங்கில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வந்த இவருக்கு, வேதியியல் பின்புலமும் இல்லை.
எனினும், யூடியூப் காணொளிகள், அறிவியல் ஆவணப்படங்கள் போன்றவற்றைப் பார்த்து சாம்பிராணி தயாரிக்கும் நுணுக்கங்களை முடிந்தவரை கற்றுக்கொண்டார்.
“மரத்தின் சாறிலிருந்து இயற்கையான சாம்பிராணி கிடைக்கும். அத்தகைய சாம்பிராணியை எளிதில் தூளாக்க முடியும். நமக்குப் பெரும்பாலும் கிடைப்பது செயற்கையானது. அது வேதிப்பொருள் கலந்து தயாரிக்கப்படும் வகை,” என்று ஷக்தி விளக்கினார்.
உள்ளூர்க் கடைகளில் விற்கப்படும் பால் சாம்பிராணியை முதலில் வாங்கிக்கொண்டு அதை வாசனை திரவத்தில் ஊற வைத்தார். மறுநாள் சாம்பிராணியை தீயில் கொளுத்தியபோது அதில் மணம் வரவில்லை.
இயற்கையான சாம்பிராணியை வாங்கி அதில் சந்தனத்தூளைக் கலந்து சோதித்துப் பார்த்த ஷக்திக்கு, எதிர்பார்த்த அளவுக்கு அதன் மணம் அமையவில்லை. சந்தனக் குச்சியைப் பயன்படுத்தினால் என்ன என்று அவர் முயன்றபோதுதான் அம்முயற்சி வீண் போகவில்லை.
இயற்கையான சாம்பிராணியுடன் சந்தனக் குச்சியைக் கலந்து கொளுத்தியபோது, அதிலிருந்து வீசிய மணம் ஷக்தியின் எதிர்பார்ப்யையும் மிஞ்சுவதாக இருந்தது.
உயர்தரமான சந்தனக் குச்சிகளைத் தேடத் தொடங்கிய இவர், இன்று ஒரு சிறிய இடத்தில் சில ஊழியர்களைப் பணியில் அமர்த்தி சாம்பிராணிகளைத் தயாரித்து சிங்கப்பூரில் விற்று வருகிறார்.
ஆடி மாதம் பலரது வீட்டில் வழிபாடுகள் நடப்பதால் தனது வணிகம் அந்தக் காலகட்டத்தில் சூடுபிடிப்பதாக ஷக்தி சொன்னார்.
தொழில் தொடங்கியபோது பலரது குறைகூறலுக்கு ஷக்தி ஆளாகினார். ஃபேஸ்புக் தளத்தின் வழியாக தனது சாம்பிராணிகளைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் காட்டியவர்களுக்கு ஷக்தி இலவசமாகத் தனது சாம்பிராணியை விநியோகித்தார்.
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க, இவர் சந்தனத்தைத் தவிர மரிக்கொழுந்து, ‘லெவண்டர்’ ஆகிய மணங்களிலும் சாம்பிராணிகளை விற்றுவருகிறார்.