பிரீத்தி அசோகன்
அளவுகடந்த பதற்றம் ஒருவர் மனதில் குடிகொள்ளும்போது மற்றவர்களுடன் அவர் உரையாடாமல், வீட்டிலேயே முடங்கிக் கிடந்து, சமுதாயத்திலிருந்து ஒதுங்கியிருப்பதை விரும்புவார்.
இதை ஜப்பானில் ‘ஹிக்கிகோமோரி’ என அழைப்பர்.
சிங்கப்பூரின் கொள்கை ஆய்வுக் கழகம் இவ்வாண்டு ஜனவரி மாதம் வெளியிட்ட கருத்துக்கணிப்பின்படி சிங்கப்பூரில் உள்ள இளையர்கள், வயது முதிர்ந்த தலைமுறையினரைக் காட்டிலும் கூடுதல் பதற்றத்தையும் தனிமையையும் உணர்கின்றனர் எனக் கண்டறியப்பட்டது.
அளவுக்கு அதிகமான சமூக ஊடகப் பயன்பாடு இந்தப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்களாகும் என்பது தமிழ் முரசிடம் பேசிய மனநல நிபுணர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
தாழ்வு மனப்பான்மை
இளையர்கள் கைப்பேசித் திரையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு தங்களது சமூக ஊடகத் தளங்களில் மறைந்துகொள்கிறார்கள் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கடந்த வாரம் நடத்திய ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் அத்தளங்கள் அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையைத் தூண்டுவதாகவும் கண்டறியப்பட்டது.
பதற்றத்தைத் தூண்டும் பல மன நோய்களில் ‘அகோரஃபோபியா’ என்பதும் ஒன்று என்று மூத்த மனநல ஆலோசகர் பிரவீன் நாயர் கூறினார்.
“அகோரஃபோபியா உள்ளவர் தனக்குப் பாதுகாப்பானதாகக் கருதும் சூழலை விட்டு வெளியேற அச்சம் கொள்வர். வீட்டிலிருந்து வெளியேறுதல், கூட்டமான இடங்களில் நடந்து செல்லுதல் போன்ற அன்றாட நடவடிக்கைகளைக் கூட செய்ய முடியாத நிலைமையில் இருப்பார்கள்,” என்று திரு பிரவீன் கூறினார்.
பிள்ளைப் பருவத்தில் உருவான தாழ்வு மனப்பான்மையால் அவர்களில் சிலர் இத்தகைய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெரியவர்களாக மாறுவதாக உயர்நிலைப் பள்ளி மூத்த ஆலோசகர் விக்னேஷ்வரி ஜெகாதரன் கூறினார்.
பாராட்டை நாடும் மனம்
வெளியிடங்களில் மக்கள் தன்னை ஏற்றுக்கொள்ளாததாலும் வீட்டில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் சிறுசிறு வெற்றிகளைப் பாராட்டாமல் இருப்பதாலும் அந்தப் பிள்ளைகள் தாழ்வு மனப்பான்மை உள்ள இளையர்களாக பின்னாளில் வளர்வதாக திருமதி விக்னேஷ்வரி கூறினார்.
பெற்றோர் பிள்ளைகளுடன் முதலில் தங்கள் தொடர்புகளை வலுவாக்கிய பின்னரே அவர்களை நெறிப்படுத்த வேண்டும் என்றும் திருமதி விக்கி கூறினார்.
“பெற்றோரிடமிருந்து எதிர்பார்த்து, கிடைக்காத பாராட்டைச் சமூக ஊடகத்திலிருந்து பெற இந்த இளையர்கள் முற்படுகின்றனர்.
“ஆனால் அது நேரடி, வாய்மொழி மூலமான பாராட்டு அல்ல,” என்றும் அவர் தெரிவிக்கிறார்.
மற்றவர்கள் தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இளையர்கள் நினைத்தாலும் குறுஞ்செய்தி மூலம்தான் உரையாடிக் கொள்கிறார்கள் என்கிறார் மனநல ஆர்வலர் அமைப்பான ‘இம்பார்ட்’ நிறுவனத்தின் தொழில்முறை ஆலோசகர் நரசிம்மன் திவாசிகமணி.
“திரைக்குப் பின்னால் இருந்தவாறு மற்றவர்களுடன் உரையாடுவது இளையர்களுக்குப் பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது. ஆனால் இந்தப் பழக்கம் அவர்களைப் பின்னாளில் பாதிப்பது உறுதி,” என்று திரு நரசிம்மன் கூறினார்.
மீள்வதும் ஒரு பயணம்
இதனால், இளையர்கள் உரையாடலில் சீராகப் பேச முடியாமல் திணறுவதுண்டு. மனநல சிகிச்சை இந்தப் பிரச்சினையைக் கடக்க அவர்களுக்கு உதவும் என்று ‘ரேவன் கன்சல்டன்சி’ மனநல சிகிச்சைக்கான அமைப்பைச் சேர்ந்த மனநல ஆலோசகர் பிரவீன் நாயர் கூறுகிறார்.
“இது படிப்படியான ஒரு செயல்முறையாகும். இதை மெல்லச் செயல்படுத்த வேண்டியிருக்கும். சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைக்க இளையர்களைத் தூண்ட வேண்டும். பின்னர், காணொளி உரையாடலை ஊக்குவித்த பின்னர் நேரடித் தொடர்பைச் செயல்படுத்த ஊக்குவிக்க வேண்டும். இதுபோன்ற செயல் முறைகளைப் பின்பற்றிப் பார்க்கலாம்,” என்று அவர் கூறினார்.