இன, சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் நோன்பு துறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது செட்டியார் கோவில் சங்கம்.
குவீன்ஸ்டவுன் பகுதியின் லெங் கீ சமூக மன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பின்தங்கிய 50 குடும்பங்களுக்கு நோன்பு துறக்க ஏதுவாக பேரீச்சை, நோன்புக் கஞ்சியுடன் கூடிய இஃப்தார் விருந்து அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அவர், வெயில் வாட்டும் சூழலிலும் நோன்பிருந்து அவரவர் பணியிலும் சிறப்பாகச் செயலாற்றும் சமூகப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியையும், நோன்புப் பெருநாள் கொண்டாடும் அனைவர்க்கும் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துகொண்டார்.
சமூக மன்றத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்குடும்பங்களுக்கு, அரிசி, சமையல் எண்ணெய், போன்ற அத்தியாவசியப் பொருள்களும் பேரீச்சை, காப்பித் தூள் உள்ளிட்ட பிற உணவுப் பொருள்களும் அடங்கிய 30 வெள்ளி பெறுமானமுள்ள அன்பளிப்புப் பை வழங்கப்பட்டது. தவிர, ஒவ்வொரு குடும்பத்துக்கும் 50 வெள்ளிக்கான ‘அங் பாவ்’ வழங்கப்பட்டது.
தொடர்ந்து 22 ஆண்டுகளாகத் தொண்டூழியம் புரிந்து வரும் திருவாட்டி விஜய குமாரி, 55, இந்நிகழ்ச்சியிலும் பங்காற்றினார். சிங்கப்பூர்ப் பல்லின சமூகத்தில், வேறுபாடுகளைக் கடந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொண்டாற்றுவது தனக்கு மனநிறைவு தருவதாக அவர் சொன்னார்.
கடந்த எட்டாண்டுகளாகப் பெருநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து வருவதாகச் சொன்ன செட்டியார் கோவில் சங்கத் தலைவர் ராமசாமி,65, “வயதானவர்கள், வசதி குறைந்தவர்களுக்கு எங்களால் இயன்ற அளவு ஆதரவளிப்பது மகிழ்ச்சி தருகிறது,” என்றார்.
இக்கோவில் குறிப்பிட்ட சமூகத்தின் வழிபாட்டுத் தலமாக இருந்தாலும், அனைத்து இனத்தவருக்கும் அது பயன் தர வேண்டும் எனும் நோக்கத்தில் இதனைச் செய்கிறோம் என்றும் திரு ராமசாமி கூறினார்.
தமிழ், மலாய் பேசும் முஸ்லிம்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி, தங்களது பொருளியல் சூழலினால் தனித்துவிடப்பட்டதாக யாரும் எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார் சங்கச் செயலாளர் சௌந்தரராஜன், 55.
செட்டியார் கோவில் சங்கத்தினர் முன்வந்து இங்கு நோன்பு துறப்பை ஏற்பாடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும் அதில் பங்காற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் லெங் கீ இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் ஜலாலுதீன் சொன்னார்.