சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 29ஆம் ஆண்டு முத்தமிழ் விழா, ஏப்ரல் 21ஆம் தேதி மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடந்தேறியது.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தொல்லியல் அகழ்வாய்வாளர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணா, ‘கீழடியின் ஆற்றல்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை கலந்துகொண்டார்.
திரு முரளி பிள்ளையிடமிருந்து இவ்வாண்டின் தமிழவேள் விருதைப் பெற்றார் சிங்கப்பூர் தமிழர் இயக்கக் கல்விக் குழுத் தலைவர் தவமணி வேலாயுதம்.
தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், உயர்நிலைப் பள்ளிகளில் 15 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். நான்கு வித அகராதிகள், ஒரு கவிதை நூல், எளிய தமிழ் உரையாடல் நூல், நன்னெறி விளக்கங்கள் உள்ளிட்ட நூல்களை இவர் வெளியிட்டிருக்கிறார்.
இவருடைய தமிழ் அகராதிக்கு ‘2016 திருப்பூர் இலக்கிய விருது’ கிடைத்தது. ‘சிங்கப்பெண் 2023’, ‘வாழ்நாள் சாதனையாளர்’, ‘சிறந்த அன்னை’ உள்ளிட்ட மற்ற பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டிகளில் உயர்நிலை 4, 5 பிரிவில் சீடார் பெண்கள் பள்ளியின் அன்பழகன் அக்ஷயா, கல்லூரிப் பிரிவில் ஈசூன் இன்னோவா தொடக்கக் கல்லூரியின் காமாட்சி சந்திரசேகர், பல்கலைக்கழக, இளையர் பிரிவில் பாலமுருகன் விஷ்வா, பொது, வரலாற்றுப் பிரிவுகளில் தமிழ்ச்செல்வி இராஜராஜன், அறிவியல் புனைவில் அபிஜித்தன் ஜெயசோதி ஆகியோர் வென்றனர்.
உயர்நிலை 1, 2 சொல்லுக்குச் சொல் போட்டியில் வென்றார் யூனிட்டி உயர்நிலைப் பள்ளியின் கந்தகுமார் ஜெயஸ்ரீ. உயர்நிலை 3 பத்தி மொழிபெயர்ப்புப் போட்டியில் ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியின் விஜயகுமார் நிவேதா வென்றார்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் மாதந்தோறும் நடத்தும் கதைக்களத்தில் இதுவரை முதல் பரிசு வென்றுள்ள கதைகளிலிருந்து தலைசிறந்த மூன்று கதைகள் தேர்வுபெற்றன.
சிங்கப்பூரர்களையும் அயலகத் தமிழர்களையும் பாராட்டும் விதமாக, “உலகளவில் கீழடி பேசப்படுகிறது என்றால் உலகத் தமிழர்கள் அதைப்பற்றிப் பேசுவதே காரணம்,” என திரு அமர்நாத் தம் சிறப்புரையில் பாராட்டியிருந்தார்.