சிங்கப்பூர் மரபுடைமை விழா 2024 இந்த வாரம் நிறைவுபெறவிருக்கிறது.
17 வருடமாக நடைபெற்றுவரும் இந்த விழாவிற்கு, தேசிய மரபுடைமைக் கழகம் ஏற்பாடு செய்கிறது. சிங்கப்பூரின் கட்டட மரபுடைமையையும் வரலாற்றையும் மக்களுக்குக் கொண்டுசெல்ல இவ்விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் 75 தேசிய நினைவுச்சின்னங்கள் உள்ளன. 7,000 க்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்டுள்ள கட்டடங்கள், பல வரலாற்றுத் தளங்கள், பாலங்கள், நீர்த்தேக்கங்கள், இடுகாடுகள் ஆகியவை அவற்றில் அடங்கும். இவற்றை அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகள் மூலம் காணலாம்.
சிங்கப்பூர் மரபுடைமை விழாவின் இயக்குநர் டேவிட் சியூ, “சிங்கப்பூரின் கட்டடங்கள், தளங்கள், கட்டமைப்புகள் ஆகியவற்றில் பல கதைகளும் அனுபவங்களும் உள்ளன,” என்றார்.
சிங்கப்பூர் மரபுடைமை விழா 2024, 80க்கும் மேற்பட்ட சமூகப் பங்காளிகளுடன் சேர்ந்து சிங்கப்பூர் மரபுடைமையின் செழுமையைக் கொண்டாடுகிறது.
உள்ளூர் நிறுவனமான ‘யோஸ்’ முதல் முறையாக, சிங்கப்பூர் மரபுடைமை விழாவின் அதிகாரபூர்வ பங்காளியாகச் செயல்படுகிறது.
இவ்வாண்டு புதிதாக ‘ஹாப்-ஆன், ஹாப்-ஆஃப்’ பேருந்து அனுபவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் சிங்கப்பூரின் கட்டடங்களையும் அடையாளங்களையும் காணலாம்.
லிட்டில் இந்தியா, பிராஸ் பாஸா, புகிஸ் போன்ற வரலாற்று வளாகங்களையும் கண்டுபிடிப்புகளையும் இப்பயணம் மூலம் கண்டறியலாம்.
தொடர்புடைய செய்திகள்
இது போன்ற பல நடவடிக்கைகள் இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
‘ஹோம்கிரௌண்ட்: நாங்கள் இந்நாட்டை உருவாக்கினோம்’ என்ற கலைப் படைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷெரல் தியோ, “நான் இது போன்ற படைப்பை முன்பு செய்ததில்லை. இது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. சிங்கப்பூரில் இருக்கும் மிகச் சிறந்தவற்றை ஆராய்ந்து கொண்டாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி,” என்றார் அவர்.

