முருகப்பெருமானின் பிறந்தநாளாகப் போற்றப்படும் வைகாசி விசாகத் திருநாள், சிங்கப்பூரிலுள்ள பல்வேறு கோயில்களில் கோலாகலத்துடன் புதன்கிழமை (மே 22) கொண்டாடப்பட்டது.
பொது விடுமுறையான விசாக தினத்தன்று பக்தர்கள் ஆலயங்களுக்குச் சென்று கண்குளிர இறை தரிசனம் செய்தனர்.
சுமார் 1,000 பக்தர்கள் சூழ முருகப்பெருமானுக்கான பூஜைகள் சிறப்பான முறையில் நடைபெற்றன என்று செங்காங்கில் உள்ள அருள்மிகு வேல்முருகன் ஞான முனீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் கே.ரவீந்திரன் தெரிவித்தார்.
புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலிலும் விமரிசையாகக் கொண்டாப்பட்டதாக ஆலயத்தினர் தமிழ் முரசிடம் கூறினர். காலை பூஜையில் மட்டும் சுமார் 500 பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோயிலில் கிட்டத்தட்ட 300 பக்தர்கள் வழிபாட்டுக்குக் குழுமியதாக ஆலயத்தினர் கூறியுள்ளனர்.
ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் காலை கிட்டத்தட்ட 1,400 பக்தர்கள் வருகை அளித்ததாக ஆலயத்தின் செயலாளர் செளந்தரராஜன் சாத்தப்பன் கூறினார்.
“கூட்டம் அதிகமாக இருந்தது, காலை 10.30 மணிக்கு வந்தேன். முருகப்பெருமானின் திருவுருவம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. கூடியிருந்தோருக்குத் திருவமுது பரிமாற உதவி செய்தேன்,” என்று பக்தரும் ஆலயத் தொண்டருமாக சேதுராமன் அழகப்பன், 50, சொன்னார்.

