சுற்றுப்பயணிகள் அதிகம் செல்லும் பரபரப்பான சைனாடவுன் வட்டாரத்தில் பல சீன உணவகங்களுக்கு நடுவே இந்தியத் தம்பதி நடத்தும் ‘விஸ்க்டம்’ உணவு, பானக் கடை செயல்படுகிறது.
சுற்றிலும் கண்ணாடிச் சுவர்கள். தகரக் கலன்களில் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பிஸ்கட்டுகள். பார்ப்பதற்கு சாதாரண உணவு, பானக் கடையைப்போலத்தான் தோற்றமளிக்கிறது ‘விஸ்க்டம்’.
ஆனால், அங்கு இந்திய, மேற்கத்திய, சீன உணவுகளின் கலவையை ஒருகை பார்க்கலாம்.
பட்டர் சிக்கன் ஷஷுகாவுடன் பேகல்ஸ், கிரீமி லக்ஸா பாஸ்தா, சில்லி கிராப் மேக் அண்ட் சீஸ் , பட்டர் பனீருடன் பேகல்ஸ், ஒண்டே ஒண்டே லாட்டே எனச் சிங்கப்பூருக்கே உரிய சுவைகளையும் மேற்கத்திய சுவைகளையும் ஒருசேரக் கலந்த உணவைத் தயாரிப்பதுதான் ‘விஸ்க்டம்’ கடையின் தனித்துவம்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் செயல்படத் தொடங்கிய அக்கடையை நடத்துகின்றனர் 38 வயது கார்த்திக்-அம்ரிதனிஷா தம்பதி.
முழுநேர வேலைக்கு இடையே ஓர் உணவு, பானக் கடையைத் தொடங்கவேண்டும் என்பது இத்தம்பதியின் நீண்ட நாள் கனவு.
“என் மாமியாருக்கு வெவ்வேறு இனத்தவரின் உணவுகளை ஒன்றாகக் கலந்து புதிய உணவு வகையை உருவாக்கு[Ϟ]வது பிடிக்கும். அவர்தான் இந்தக் கடை வெற்றிகரமாக நடப்பதற்கு முக்கியக் காரணம்,” என்றார் அம்ரிதனிஷா ஆண்ட்ருஸ்.
அம்ரிதனிஷாவின் மாமியார் 64 வயது சாந்தகுமாரி சின்னத்தம்பி, ‘விஸ்க்டம்’ கடையில் விற்பனையாகும் பெரும்பாலான உணவுக் குறிப்புகளுக்குச் சொந்தக்காரர்.
தொடர்புடைய செய்திகள்
“ஒருமுறை எனது குடும்பத்தினருக்கு ‘லக்சா’ சுவையைக் கொண்டு ‘மீ கோரேங்’ செய்து கொடுத்தேன். அதன் சுவை வித்தியாசமாகவும் ருசியாகவும் இருந்ததாக அவர்கள் கூறினர்.
“அதேபோல இந்த உணவு, பானக் கடையிலும் பல புதிய உணவு வகைகளைத் தயாரிக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
கொவிட்-19 காலத்தில் திருவாட்டி சாந்தகுமாரி, வீட்டில் சமைத்த தனித்துவமான லக்சா பாஸ்தா, சைவ சாத்தே சாஸ் போன்ற ஃபியூஷன் வகை உணவுகள், இன்று அனைத்துலகச் சுற்றுப்பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
“இதற்குமுன் என் அம்மா சமைத்த உணவைக் குடும்பத்தினர் மட்டுமே உண்டனர். இப்போது பலர் அதைச் சாப்பிட்டு நன்றாக இருக்கிறது என்று பாராட்டும்போது மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார் திருவாட்டி சாந்தகுமாரியின் மகன் கார்த்திக் நாராயணசாமி.
புதிய புதிய உணவுவகைகளைத் தயாரித்துவரும் திருவாட்டி சாந்தகுமாரியின் கைவண்ணத்தில் உருவான ‘பாதாம் சுஜி குக்கிஸ்’ பலரையும் ஈர்த்துள்ளது.
“கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எனது மாமியார் பாதாம் சுஜி குக்கிசை அறிமுகம் செய்தார். அது, சீனப் புத்தாண்டிபோது நல்ல வரவேற்பைப் பெறும் என்று நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“இந்தியர்கள்தான் சுஜியை அதிகம் விரும்பி உண்பார்கள். சீனர்கள் அதை வாங்கிச் சென்றதில் ஒரே மாதத்தில் கடையிலிருந்த பாதாம் சுஜி குக்கிஸ் அனைத்தும் விற்று முடிந்தன,” என்றார் திருவாட்டி அம்ரிதனிஷா.
இந்தியச் சுவை கலந்த இன்னும் பல உணவு வகைகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க ‘விஸ்க்டம்’ தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

