'கொரோனாவை ஒழிக்க நாடுகளை முடக்குவது மட்டுமே பலன் தராது'
கொரோனா கிருமித்தொற்றை ஒழிக்க நாடுகளை முடக்குவது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் ஜிப்ரியிஸஸ் கூறியதாவது:
"கொரோனா கிருமி பரவலை குறைக்க, பல நாடுகள் ஊரடங்கு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன. ஊரடங்கு உத்தரவின் மூலம் மக்களை வீட்டுக்குள் இருக்க சொல்வது சுகாதாரத்துறையின் மீதான நெருக்கடிநிலையைக் குறைக்கும். கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மட்டுமே போதாது.
"கொரோனா கிருமியை ஒழிக்கும் நடவடிக்கைகளை அமல்படுத்த இந்த நேரத்தைப் பயன்படுத்த உலக நாடுகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். பரிசோதனை நிலையங்களை அதிகரித்து கொரோனாவை ஒழிக்க சுகாதாரப் பணியாளர்கள் தீவிரம் காட்ட வேண்டும்.
"தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு சுகாதாரப் பரிசோதனையை மேற்கொள்ளும் வசதியை உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்டோரிடமிருந்து மற்றவர்களுக்கு கிருமி பரவுகிறதா என்பதைக் கண்டறிய தெளிவான திட்டம் தேவை," என்று கூறினார்.
உலகளவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 467,000ஐ கடந்துவிட்டது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21,100ஐ தாண்டிவிட்டது.