தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீரிழிவு நோயை வீழ்த்தும் போரில் களம் காண்போம்

3 mins read

மனித உடல் என்பது மிகப்பெரிய பலதுறைத் தொழிற்சாலை. உடலில் எல்லா ஆலைகளும் செவ்வனே செயல்பட போதிய எரிசக்தி வேண்டும். அந்தச் சக்தியை நாம் உண் ணும் உணவுப்பொருட்கள் மூலம் சர்க்கரை வடிவில் நம் உடல் பெறுகிறது. அப்படி உடலில் சேரும் சர்க்கரைப் பொருட்களை நம் உடல் சிதைத்து அதைச் சக்தியாக மாற்றிக்கொள்கிறது.

இதற்குத் தோதாக நம் உடலில் இருக்கும் 'கணையம்' என்ற சுரப்பி 'இன்சுலின்' என்ற நிரமற்ற திரவத்தைச் சுரக்கிறது. இது போதிய அளவுக்கு முறைப்படி சுரக்க வில்லை என்றால், இன்சுலினை உடல் உயிரணுக்கள் ஏற்று சரிவர செயல்படவில்லை என்றால் சர்க்கரைப் பொருட்கள் சிதையாமல் அப்படியே இரத்தத்தில் சேர்ந்து அதிகமாகி பல பிரச்சினைகளை ஏற்படுத்தி நம்மை நோயில் தள்ளிவிடும்.

இதைத்தான் நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை வியாதி என்று குறிப்பிடுகிறோம்.

காலம் மாறிவிட்டது. வேலை பார்க்கும் விதம் மாறிவிட் டது. வாழ்க்கை முறைகள் மாறிவிட்டன. உணவும் மாறி விட்டது. சரிவிகித உணவைச் சாப்பிடுவதில்லை. போதிய உடலுழைப்பு இல்லை. உடல் பருமனாகி இவற்றின் விளை வாக சிங்கப்பூரில் சர்க்கரை நோய் கூடிவிட்டதோடு நின்று விடாமல் முழுமூச்சாக நீண்டகால போர் தொடுக்க வேண் டிய அளவுக்கு இப்போது இந்த நோய் ஒரு பெரும் சவா லாகிவிட்டது.

உலகின் வளர்ந்த நாடுகளைப் பார்க்கையில் நீரிழிவு நோயில் அமெரிக்காவுக்கு அடுத்த 2வது நிலையில் சிங்கப்பூர் இருக்கிறது. இங்கு 2014ல் 440,000 பேருக்கு= அதாவது கிட்டத்தட்ட 10 பேரில் ஒருவருக்கு இந்த நோய் இருந்தது. வரும் 2030ல் 670,000 பேரை நீரிழிவு பாதிக் கும். 2050ல் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் இதனால் பாதிக்கப்படுவர் என்று அபாயச் சங்கு ஊதப்பட்டுள்ளது.

அதுவும் சிங்கப்பூரில் இந்தியர்களிடம் இந்த நோய் தேசிய அளவைவிட அதிகமாக இருக்கும் என்றே தோன்று கிறது. இதேபோக்கில் போனால் இந்தியர்கள் இந்த நோய்க்குச் சொந்தக்காரர்கள் ஆனாலும் வியப்பில்லை. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் நீரிழிவு நோய் ஆக அதிகம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மனிதர்களுக்கு வரும் நோய்கள் பல என்றாலும் அவை தனியாக வரும், போகும். ஆனால் இந்த நீரிழிவு நோயோ இதர பல நோய்களுக்குக் கதவைத் திறந்துவிட்டுவிடும். மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு, உடல் உறுப்புகள் செயல் இழப்பு, கண்பார்வை இழப்பு எல்லாவற்றுக்கும் இந்த நோய் உடலில் விதையை ஊன்றிவிடும்.

சிங்கப்பூரில் ஆண்டுக்கு 1,500 பேருக்கு கை, கால், விரல்கள் துண்டிக்கப்படுகின்றன.

நீரிழிவு நோய் காரணமாக ஒருவர் சரிவர செயல்பட முடியாது. இதனால் உற்பத்தித்திறன் பாதிக்கப்படும். இப்படி ஆகிவிட்டதால் கடந்த 2010ல் சிங்கப்பூருக்கு ஏற்பட்ட சுகாதாரத் துறை செலவு $1 பில்லியன்! 2050ல் அது $2.5 பில்லியனைத் தாண்டிவிடும் என்று கணக் கிடப்பட்டுள்ளது. இப்படி நாட்டின் பொருளியலுக்கும் நாட் டின் ஒரே சொத்தான அதன் மக்களுக்கும் பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் நீரிழிவு நோயை ஒழிக்க போர்ப் பிரகடனம் செய்துள்ள சிங்கப்பூர், அதற்கு ஆயத்தமாக நீரிழிவு நோய்த் தடுப்பு, பராமரிப்பு சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைக்கிறது. சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் அதற்குத் தலைமை வகிப்பார்.

நீரிழிவு நோயின் அளவு, அதன் வேகத்தைப் பார்க் கையில், சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு தொடுத்திருக் கும் போர் சரியான நேரத்தில் இடம்பெறுகின்ற ஒன்றாக வும் அவசியமான ஒன்றாகவும் தெரிகிறது.

சர்க்கரையை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தும் குளிர் பானங்களுக்கு அதிக வரி விதிப்பது என்று பிரிட்டன் அரசாங்கம் முடிவு செய்திருப்பது, இந்தப் போரில் கவனிக் கத்தக்க வெற்றி உத்திகளில் ஒன்றாக இருக்கக்கூடும்.

அரசாங்கம் முழுமூச்சாக தொடுக்கும் போர் எந்த அளவுக்கு, எவ்வளவு வேகமாக வெற்றி பெறும் என்பது அந்தப் போரில் அரசுடன் படைவீரர்களாகச் சேர்ந்துகொள் ளும் மக்களின் மனஉறுதியைப் பொறுத்தே இருக்கும்.

காலம் மாறினாலும் உணவு, உடலுழைப்பு, உடற்பயிற்சி, சரியான பழக்க வழக்கங்களை மக்கள் கடைப்பிடித்தால் நீரிழிவு நோய் நம்மை அண்டாமல் நாம் அரண் அமைத்துக் கொண்டு வாழலாம். இதர பல நோய்களும் அகன்று பொருளியலும் பலப்பட்டு நாடும் வீடும் நலம்பெறும்.